Amirtham Endraal Visham
By Rajesh Kumar
4.5/5
()
About this ebook
Reviews for Amirtham Endraal Visham
6 ratings0 reviews
Book preview
Amirtham Endraal Visham - Rajesh Kumar
http://www.pustaka.co.in
அமிர்தம் என்றால் விஷம்!
Amirtham Endraal Visham
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அணிந்துரை
எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் திகில் நாவல்களில் ஒன்று இப்பொழுது புதிதாக வெளிவந்துள்ள அமிர்தம் என்றால் விஷம்
என்ற நாவல்.
நாவல் என்றாலே புதுமை. அதனால் நாவல்களை தமிழில் புதினங்கள் என்கிறார்கள். புதுமையோ பழமையோ பழமையோ எதுவாக இருந்தாலும் கதை என்ற முதுகு எலும்பு இருந்தால்தான் அது எழுந்து நிற்கும். எழுத்தாளனின் நடைதான் அந்த நாவலின் உயிரோட்டம்.
சம்பவங்களை சதைப்பிடிப்பாக வைத்துக் கற்பனை ஓட்டத்தை ரத்த ஓட்டமாகச் செலுத்தி சித்தரிக்கப்படுகிற எந்தக் கலை முயற்சியும், பாதி உண்மையும் பாதி புனைவையும் கொண்டதாகவே இருக்கும். அதை இலக்கியம் என்கிறோம். அந்த இலக்கியம் பக்தி இலக்கியம், காதல் இலக்கியம் எனப் பலவாக உள்ளன.
பண்டையை இலக்கியத்திற்கு என்ன இலக்கண வரம்புகள் உள்ளதோ அவை அனைத்தையும் கொண்டதாகவே இப் புதினங்களும் விளங்குகின்றன. பாரம்பரிய இலக்கியங்கள் கவிகளாக இருந்தன. புதினங்களோ உரைகளாக உள்ளன.
ஆங்கில இலக்கியத்திலிருந்து தமிழுக்குப் கிடைத்த ஒரு புதிய ஆக்கம்தான் புதினங்கள் என்கிறார்கள். அறிஞர்கள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் புதினங்கள் இல்லை. இன்றைய நவீன இலக்கியங்களில் புதினங்கள் நிறைய உள்ளன.
ஆங்கிலப் புதினங்களை எழுதிய அகதா கிறிஸ்டி போன்ற பிரபலமான பலர் உள்ளனர். தமிழ் மொழியிலும் புதினங்களை எழுதிய புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, நாஞ்சில்நாடன் வரை நூற்றுக்கணக்கான நாவலாசிரியர்கள் உள்ளனர். ஆவை எல்லாம் சமூகப் பிரச்னைகளையும், குடும்பப் பிரச்னைகளையும் மையமாகக் கொண்டவை. அரசியல் அம்சங்களும் அவற்றில் அங்கங்கே இழையோடும். தமிழ்கூறும் நல்லுலகம் இவற்றை இலக்கியமாக அங்கீகர்த்துள்ளது.
ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த இலக்கியங்களுக்கு இம்மி அளவும் மதிப்புக் குறையாத புதினங்களை இரண்டாம் தரமாகச் சிலர் கருதுகிறார்கள். கொலை முதலிய குற்றங்களை (கிரைம்) மையமாகக் கொண்டே அப் புதினங்கள் வார்க்கப்படுவதனால் அவ்வாறு பேசப்படுகின்றன.
உண்மையில், இதிகாசப் பெருமை கொண்ட மகாபாரத்திலும், இராமாயணத்திலும்கூட கொலைகள் கடத்தல் உண்டு. தலைமறைவு வாழ்க்கை இருக்கிறது. தங்கி இருக்கிற இடத்திற்கு ரகசியமாகத் தீ வைக்கப்பட்டுள்ளது. உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளது. யுத்த தர்மங்கள். மீறப்பட்டே வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அவற்றை இதிகாசமாபக் போற்றி அதில் வரும் நல்ல பாத்திரங்களை தெய்வங்களாக ஏற்றுப் பிரச்சாரம் செய்து பின்பற்றவும் செய்கிறார்கள்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கூட நகைக் கொள்ளை நடந்துள்ளது. கொலை நடந்திருக்கிறது. பணம் கொடுத்து பரத்தையரை விலை பேசிய பழக்கம் இருந்திருக்கிறது.
இயல்பான இந்தச் சமூக வாழ்க்கையை உன்னதமான ஒரு எழுத்தாளன் கதையில் கையாளும்போது அந்தக் கதாநாயகனைச் சில நகைக் கெளரவங்களால் ஒப்பனை செய்கிறான். அவனைக் கருனை மறவன்
எங்கிறான். இசை மேதை எங்கிறான்
இத்தகைய இதிகாசங்களோ காப்பியங்களோ கதையின் இறுதியில் சில சத்தியங்களை உரக்கப் பேசுகின்றன. தருமமே வெல்லும்
என்கிறது. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
என்கிறது. "பெண்ணாசையும் மண்ணாசையும் உன்னதங்களை இந்தக் காவியங்கள் கடைசியில் பேசுகின்றன.
அமிர்தம் என்றால் விஷம்
என்ற இந்தத் திகில் நாவலில், 6 கொலைகள். அந்த ஆறுபேர்களின் உடம்பில் ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்று பச்சைக் குத்தப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இந்த 6 பேர்களும் எப்பேர்பட்டவர்கள் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் தருகிறது.
அமிர்தம் என்கிற பச்சைக் குத்தப்பட்ட அடையாளத்தைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் திகிலடைகிறோம். வாசகனுக்கு அது விருவிருப்பூட்டி அடுத்தப் பக்கத்தில் அதற்கான விடை கிடைக்குமா என்று தேடும்படிச் செய்கிறது. மொத்தமுள்ள 335 பக்கங்களையும் ஒரே மூச்சிலே படிக்க வைத்துவிடுகிறது. இது நாவலுக்கே உரிய சிறந்த யுத்தி. ராஜேஷ்குமாருக்கு மட்டுமே கைவந்துள்ள ஒரு ராஜ யுத்தி.
திகில் வூட்டுவதை வர்ணிப்பதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. ரத்தம் திடீரென்று சாலை மறியல் செய்துவிட்டது
என்கிறார். போலீஸ் அதிகாரி முதலமைச்சருக்கு சல்யூட் அடிப்பதை அவர் ஒரு நேர்க்கோடு
போல் ஆனார் என்கிறார். இப்படிப் பல வார்த்தைப் பிரயோகங்கள்.
அமிர்தம் என்றால் விஷம்
என்று பச்சைக் குத்தப்பட்ட இந்த 6 கொலைகளையும் செய்தவன் யார்?
அவன் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தான்?
அவனே சொல்கிறான். நான் கொலைகள் எதுவுமே செய்யவில்லை. களைகளைத்தான் பிடுங்கினேன்
என்கிறான். நம்பலாமா இதை? நாவலைப் படித்தால்தான் தெரியும்.
சுயவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கையாளுகிற சதவிகிதம் அதில் அரசாங்கத்திற்கு வெற்றிக்கிடைக்கிறது என்பது விவாதத்துக்கு உரியது.
ஆனால் ஒரு எழுத்தாளன் கையாளுகிற யுத்தி காவல்துறையின் யுத்தி அல்ல. அது. காவல்துறையினாலும் கண்டுபிடிக்க முடியாத கயவர்களை, களை எடுப்பதற்கான உத்தி. மனசாட்சி உள்ள மனிதர்களை உருவாக்குகிற உத்தி.
சமுதாய நலனுக்காகத் தீயவர்களை ஒழிக்கும் தீவிரவாதிகள் மீது சாட்டப்படுகிற முதல் குற்றம், அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதாகும்.
அவர்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்றால், காவல்துறைக்கு அவர்கள் புகார் மட்டுமே செய்ய வேண்டும். நீதிபதிதான் தீர்ப்பளிக்க வேண்டும். கால தாமதமானாலும் இதைத்தான் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்கள்.
உடனடிப் பலன் தேவை என்றால் உத்வேகமுள்ள இளைஞர்கள் களத்தில் இறங்கியாக வேண்டும். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்பது காலங்கடத்துகிற பகவத் கீதையின் பழைய பாடமாகும்.
அந்தஸ்துள்ளவர்களுக்குச் சாதகமாகவே காவல்துறை பல நேரங்களில் கடமையை
ச் செய்கிறது. பலனை அல்ல பணத்தை எதிர்பார்த்து. அதனால்தான் பலர் பெரிய மனிதர்களாக, அமைச்சர்களாக, ஆஸ்ரமவாதிகளாக, சட்ட வல்லுநர்களாக, சமூக வழிகாட்டிகளாக, மக்கள் தலைவர்களாக உலவுகிறார்கள்.
அமிர்தம் எப்போது விஷமாகிறது என்பதற்கு இந்த நாவல் தரும் விளக்கம் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது
அளவுக்கு மீறினால்தான் அமிர்தம் விஷமாகும். ஆம்! மனிதர்கள் அளவுக்கு மீறிய அதிக அதிகாரத்தால் விஷமாகி விடுகிறார்கள். அளவுக்கு மீறிய அதிகப் பணத்தால் விஷமாகி விடகிறார்கள். அளவுக்கு மீறிய அதிக வசதிகளால் விஷமாகி விடுகிறார்கள்.
அளவோடு இருப்பார்களேயானால் அவர்கள் அமிர்தம் தான். ஆரம்பித்தில் அவர்கள் அமிர்தமாக இருந்தவர்கள்தான். அளவு மீறியதால்தான் விஷமானார்கள். மகத்தான இத் தத்துவம் இக் கதையில் மாபெரும் மறைபொருளாக ஊடுறுவி இருக்கிறது.
உண்மையில், எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்ல மனிதர்கள்தான். இந்த உயர்வை சிந்தனையை, தனக்கே உரிய புதின உத்தியால் இதில் பூத்திட வைத்துள்ளார் எழுத்தாளர் ராஜேஷ்குமார்!
கோவை
பெ. சிதம்பரநாதன்
26-3-2004
ஆசிரியர்
ஓம் சக்தி (மாத இதழ்)
என்னுரை
வளமான வாசக உள்ளங்களுக்கு
வணக்கம்.
‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ வார இதழில் 36 வாரங்கள் வெளிவந்த ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்னும் தொடர்கதை இப்போது கட்டிய மாலையாய் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. முதலில் 25 வாரங்கள் மட்டுமே எழுத நினைத்த இந்த தொடர்கதை வாசர்களுக்கிடையில் கிடைத்த வரவேற்பின் காரணமாக 36 வாரங்கள் வரை எழுத வேண்டிய அன்புக் கட்டாயம் ஏற்பட்டது. அரசியலையும் ஆன்மீகத்தையும் கலந்து எழுதப்பட்ட இந்த தொடர் கதைக்கு அவ்வப்போது சின்ன சின்ன எதிர்ப்புகள் கிளம்பி, அது கிளம்பிய வேகத்தில் அணைந்தும் போனது. ‘அமிர்தம் என்றால் விஷம்’ கதையில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்கள் என்னுடைய 100% கற்பனையில் உருவானது என்றாலும் இந்த சம்பவங்கள் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. ஒருவேளை இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருந்து இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது நடந்தாலும் நான் அதற்கு பொறுப்பாளி அல்ல. ஏனென்றால் சில நேரங்களில் எழுத்தாளர்களின் கற்பனைகள் துரதிர்ஷ்டவசமாகவோ அதிர்ஷடவசமாகவோ பலித்து விடுவது உண்டு.
பதிப்பகங்களின் ஆலமரமாய் விளங்கும் பூம்புகார் பதிப்பகம் இந்த நாவலை அழகான முகப்பு அட்டையோடு அற்புதமாய் அச்சிட்டு வழங்கியுள்ளது. அதற்காக பூம்புகார் பதிப்பகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் ‘அமிர்தம் என்றால் விஷம்’ நாவலுக்கு சிறப்பான முறையில் மதிப்புரை வழங்கி சிறப்பித்துள்ள ‘ஓம்சக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் திரு. பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நாவலைப் படித்து விட்டு பாராட்டப்போகும் வாசக உள்ளங்களுக்கு என் அட்வான்ஸ் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் பூம்புகாரின் அடுத்த படைப்பில் சந்திப்போம்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
1
மூன்றடி அகலமும் ஆறடி நீளமும் கொண்ட அந்தக் கண்ணாடி பெட்டிக்குள் ஒரு உடல் தெரிந்தது பெட்டிக்கு மேலே ஒரு மலர்வளையம்.
விடியற்காலை ஐந்து மணிக்கே தியாகராயநகரின் கடைசியில் இருந்த பால் அப்பாசாமி தெரு விழித்துக் கொண்டு அமளி துமளிப்பட்டது. தெருவின் இருண்டு பக்கங்களிலும் பத்தடிக்கு ஒரு ட்யூப்லைட் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நானூறு ட்யூப்லைட்கள், மின்சாரம் சாப்பிட்டு தெருவைப் பகலாக்கியிருந்தன. ஒலிபெருக்கிகளில் கட்சிப் பாடல்கள் இரைச்சலாய் வெளிப்பட்டு காற்றை காயப்படுத்திக் கொண்டிருக்க, தெரு ஓரங்களில் வெளியூர் கட்சித் தொண்டர்கள் கொடி கட்டிய வேன்களில் காத்திருந்தார்கள். காற்றுக்கு அசைந்த பேனர்களில் பெயிண்ட்டால் எழுதப்பட்ட கொட்டை கொட்டையான வாசகங்கள்.
அமைச்சர் கார்மேகவண்ணன் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா.
தெருவின் இரண்டு பக்கச் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்த ராட்சஷ சைஸ் போஸ்டர்களில் கார்மேகவண்ணன், பெயருக்கேற்ற நிறத்தோடு பற்களை வெள்ளையாய்க் காட்டிக் கொண்டு கும்பிடு போட கட்சியின் 75-வது வட்டாரக்கிளை, ‘வாழும் வரலாறே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!’ என்று பொய் பேசியிருந்தது. இன்னொரு போஸ்டரில் ஓர காக்கா கூட்டம் கவிதை பாடியிருந்தது.
உனக்கு வயது
ஐம்பதா?
நம்பமாட்டோம்...!
நீ காலங்களை வென்றவன்.
அந்தக் காலனுக்கும்
ஆயுளை நிர்ணயிப்பவன்.
உனக்கு ஜனனம் மட்டுமே...
மரணம் இல்லை!
பைக்கை நிறுத்தினான் பாரி. 27 வயது இளைஞன் பின்னால் தொற்றியிருந்த நிருபமா, அவன் தோளைத் தட்டினாள்.
என்ன பாரி...! பைக்கை நிறுத்திட்டே?
கொஞ்ச நேரம் கழிச்சுப் போலாமேன்னுதான்.
நீ என்ன சொல்றே பாரி...?
ஒவ்வொரு போஸ்டரையும் படி... ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி இருக்கு
பாரி...! இது உனக்கு வேண்டாத வேலை. நீயும் நானும் பத்திரிகை ரிப்போர்ட்டர்ஸ். அமைச்சர் கார்மேகவண்ணின் பிறந்தநாள் விழாவை கவரேஜ் பண்ண வந்திருக்கோம். அந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டுப் போவோம்... இந்தக் கட்சிக்காரர்களுக்கு ஏற்கெனவே பத்திரிகைக் காரங்கன்னா பின்லேடன் - ஜார்ஜ் புஷ் ரேஞ்சுக்கு பகை... நீ போஸ்டர்களை கமெண்ட் பண்றது எவனாவது ஒரு தொண்டன் காதில விழுந்தாலும் சரி, நீயும் பீஸ் பீஸ்... நானும் பீஸ் பீஸ்.
"நிரு...!
ம்...
ஒரு காலத்துல பத்திரிகைக்காரங்கன்னா கட்சிக்காரங்க பயப்பட்டாங்க. இப்போ... எல்லாமே தலைகீழ்! எதனால இப்படி?
பதில், வெரி சிம்ப்பிள்...
சொல்லு...
கலிகாலம்...!
ஒலிபெருக்கியில் கட்சிப்பாடல் சட்டென்று நின்று ஒரு குரல் கரகரத்துப் பேசியது.
அன்பைச் சுமந்து கொண்டு வந்திருக்கின்ற அனைத்து உள்ளங்களே! வணக்கம். நம் கட்சியின் தளபதியும் சுகாதார அமைச்சருமான திரு. கார்மேகவண்ணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இது அவருக்கு பொன்விழா ஆண்டு. பத்து வயதிலேயே அரசியலுக்கு வந்து, அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களை சிம்ம சொப்பனமாய் விளங்கிக் கொண்டிருப்பவர். ஏழை எளியவர்களின் காவலன்...!
பாரிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர, நிருபமா அவனுடைய பின்னந்தலையைத் தட்டினாள்.
பாரி...! வேண்டாம்... எல்லாப் பக்கத்தையும் பொத்திகிட்டு பைக்கை ஓட்டு...!
என்னால சிரிக்காம இருக்க முடியலை நிரு...! உன்னால எப்படி முடியுது...?
"பயம்...!
ஒலிபெருக்கி தொடர்ந்து கரகரத்துக் கொண்டிருந்தது.
"அமைச்சர் கார்மேகவண்ணன் அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி மகிழ நம் முதலமைச்சர் அவர்கள் சரியாய் ஆறு மணியளவிலே இங்கே வருகை தர உள்ளார்கள். நம் இதய தெய்வமாம் முதலமைச்சர் அவர்கள் இங்கே வருகை புரியும்போது, நம் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீழ்ந்து கிடக்கின்ற சில எதிர்க்கட்சிகள, அந்தக் குப்பைத் தொட்டியிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்து - இந்த விழாவுக்கு வர இருக்கும் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக ஊளையிட்டுள்ளன. பார்த்துக் கொள்வார்கள்... காவல்துறையும் தன்னுடைய கடமையைச் செய்யும்...
அன்புள்ளம் கொண்டவர்களே! அமைச்சர் கார்மேகவண்ணனை வாழ்த்த அலையலையாய் அணிவகுத்து வாருங்கள். இது பிறந்தாள் விழா மட்டுமல்ல... நம் வலிமையையும் எழுச்சியையும் காட்டப் போகின்ற உன்னதமான விழா வாருங்கள்! சாதனை புரிவோம். சரித்திரம் படைப்போம்."
பேச்சு நின்றதுமே பாடல் ஒலித்தது.
முக்கனியும் நீ... மூவேந்தனும் நீ...!
பாரி ‘பர்ர்ர்ர்’ என்று இடது புறங்ககையை மூடிக் கொண்டு சிரிக்க, நிருபமா அவனுடைய காதைப் பிடித்துத் திருகினாள்.
பாரி...! உடனே இங்கிருந்து கிளம்பறது பெட்டர். கட்சித் தொண்டர்கள் ரெண்டு பேர் உன்னையே பார்த்துகிட்டு இருக்காங்க. முதுகுலே மேளம் வாசிக்கிறதுக்கு முன்னாடி, பைக்கை ஸ்டார்ட் பண்ணு.
பாரி பைக்கை உதைத்தான். பைக் புகை தள்ளி தெருவின் கோடியில் இருந்த அமைச்சர் கார்மேகவண்ணனின் பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.
பங்களா இலுமினேஷன் பல்புகளால் நிரம்பி விதவிதமான நிறங்களில் ஒளிர்ந்தது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, வந்து கொண்டிருந்த வி.ஐ.பி.களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் எல்லோருடைய உடம்புகளையம் வாசம் பிடித்துப் பார்த்தது.
பாரியும் நிருபமாவும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரால் நிறுத்தப்பட்டார்கள். ‘யார் நீங்க...?’
பிரஸ்...
ரெண்டு பேருமா...?
ஆமா...
என்ன பத்திரிகை...?
முகம்
ஐ.டி. வேணும்...!
இதோ...!
இருவரும் தங்களுடைய அடையாள அட்டைகளை எடுத்துக் காட்டினார்கள். அந்த இன்ஸ்பெக்டர் வாங்கிப் பார்த்துவிட்டு, பங்களாவுக்கு பின்பக்கமாய் போட்டிருந்த பந்தலைக் காட்டினார். பிரஸ் பீப்பிளுக்கு ஃப்ரண்ட்ல இடது பக்கம் ஒதுக்கியிருக்கு... உள்ளே போங்க...!
தேங்க்யூ ஸார்
அப்புறம் ஒரு விஷயம்...
என்ன ஸார்...?
சி. எம். சரியா ஆறு மணிக்கு வருவார். மினிஸ்டர் கார்மேகவண்ணனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு, அடுத்த பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே கிளம்பிப் போயிருவார். ஸோ... இண்ட்டர்வ்யூ என்கிற பேர்ல அவர்கிட்ட யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது.
பாரியும் நிருபமாவும் தலைகளை ஆட்டிவிட்டு உள்ளே போனார்கள். பங்காளவின் பின்பக்கம் இருந்த காலித்திடல், ஒரு மாநாட்டுப் பந்தலாக மாறியிருந்தது. வி.ஐ.பி. க்களும் கட்சிப் பிரமுகர்களும் எக்ஸிக்யூடிவ் நாற்காலிகளில் உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்க, அமைச்சர் கார்மேகவண்ணனின் மகன் செழியன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான். 25 வயது அப்பாவைப் போலவே நிறம், உயரம்.
பாரியையும் நிருபமாவையும் பார்த்ததுமே செழியன் முகம் மாறியது.
நீங்க ‘முகம்’ பத்திரிகை ரிப்போட்டர்ஸ்தானே...?
ஆமா...
வர வர ஆளும் கட்சியைப் பத்தி ரொம்பவும் மோசமா எழுதறீங்க... அதிலும் அப்பாவைப் பத்தி எழுதும்போது ரொம்பவும் ஓவர். கொஞ்சம் அடக்கி வாசிங்க...
ஸாரி ஸார்... தமிழ்நாட்டுல எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்க எதிர்க்கட்சியா இருந்து குற்றம் குறைகளை எடுத்துக் காட்டுவோம்...எங்க பத்திரிகையோட கொள்கையே அதுதான்!
எங்கப்பாவை கீழ்த்தரமா எழுதறதுதான் உங்க கொள்கையா...? கொள்கையை மாத்திக்குங்க... இல்லேன்னா எழுதறதுக்கு கையே இருக்காது!
செழியன் ஆட்காட்டி விரலைக் காட்டி எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் வைத்திருந்த கார்ட்லெஸ் டெலிஃபோன், இண்ட்டர்காம் வாய்ஸை வெளியிட்டது. கார்லெஸ்ஸை காதுக்குக் கொண்டு போனான்.
ஹலோ...
மறுமுனையில் பங்களாவின் உள்ளே தன்னுடைய அறையில் இருந்தபடி கார்மேகவண்ணன், குரல் கொடுத்தார்.
செழியன்...!
அப்பா...
கூட்டம் வந்துகிட்டு இருக்கா...?
அலைமோதிகிட்டு இருக்குப்பா... எல்லா ஐ. ஏ. எஸ். ஆஃபீஸர்ஸீம் ஆஜர். மினிஸ்டர்ஸ்ல பாதிப்பேர் வந்துட்டாங்க...
தொண்டர்கள் கூட்டம்...?
சொல்லணுமா... பந்தலில் இடமில்லாம வெளியே நின்னுட்டிருக்காங்க...
நான் எத்தனை மணிக்கு விழா மேடைக்கு வரட்டும்?
சரியா அஞ்சே முக்காலுக்கு வாங்கப்பா... போதும்... சி. ஏம். ஆறு மணிக்கு வந்துவிடுவார்...
சரி...! அமைச்சர் பரந்தமான் வந்ததும் கார்ட்லெஸ்ல என்கூட கொஞ்சம் பேசச் சொல்லு...
ம்...
"மறந்துடாதே...! மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட.. செழியன் கார்ட்லெஸ்ஸை அணைத்துவிட்டு, உள்ளே வந்து கொண்டிருந்த ஒரு வி.ஐ.பி. யை வரவேற்கப் போனான்.
பாரியும் நிருபமாவும் கும்பலில் முண்யடித்து மேடைக்கு முன்புறமாய் இருந்த ‘PRESS’ என்று எழுதப்பட்ட பகுதிக்குப் போய் இரண்டு பாலிவினைல் நாற்காலிகளை செலக்ட் பண்ணி உட்கார்ந்தார்கள். சுற்றிலும் மற்ற பத்திரிகைகளின் நிருபர்கள். பாரியைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார்கள். பாரி...! நீ ஒரு ஃபங்க்ஷனையும் விடமாட்டியா...?
எதுக்கு விடணும்? என் தொழிலே இதுதானே!
போன வாரம் முகத்தில் வந்த உன்னோட ஆர்ட்டிகள், ஸிம்ப்ளி சூப்பர்ப்... உன்னோட பேனாவில் இருக்கிறது இங்க்கா... அமிலமா...?
ரெண்டுமே இல்லை...
பின்னே...?
நியாயம்...
உன்னே எப்படி உள்ளே விட்டாங்க...?
பாரி சிரித்துக் கொண்டிருக்கும்போதே நிருபமா அவனுடைய தோளைச் சுரண்டினாள்.
பாரி...
ம்...
கேமரா எங்கே...?
பாரி லேசாய் திடுக்கிட்டு தன் இடது கை விரல்களால் நெற்றியை மெல்ல அடித்துக் கொண்டான்.
பைக்கோட கிட்லேயே விட்டுட்டு வந்துட்டேன்...!
போய் கொண்டாந்துடுங்க... எவனாவது தட்டிகிட்டுப் போயிடப் போறான்...!
பாரி எழுந்தான். கும்பலை ஊடுருவிக் கொண்டு மறுபடியும் பங்களாவுக்கு வெளியே வர,
சரியாய் பத்து நிமிஷ நேரம் பிடித்தது. பங்களாவினின்று நூறு மீட்டர் தூரம் தள்ளி இருட்டில் நிறுத்தியிருந்த பைக்கை நோக்கிப் போனான். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்க நடந்தான்.
இரண்டு நிமிஷ நடை பைக்கை நெருங்கினான். மெல்லிய வைகறை இருட்டில் பைக்கின் ‘கிட்’டைத் திறந்து காமிராவை எடுத்துக் கொண்ட பாரி திரும்பி நடக்க முயன்ற விநாடி-
பக்கத்தில் நின்றிருந்த அந்த பழைய மெட்டடார் வேன் பார்வைக்குக் கிடைத்தது. அதன் பின்பக்கக் கதவு லேசாய் திறந்து, காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது.
‘உள்ளே யாராவது இருக்கிறார்களா?’