Ther Kondu Vandhaval
By GA Prabha
4/5
()
About this ebook
Reviews for Ther Kondu Vandhaval
5 ratings0 reviews
Book preview
Ther Kondu Vandhaval - GA Prabha
http://www.pustaka.co.in
தேர் கொண்டு வந்தவன்
Ther Kondu Vanthavan
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
முயற்சியை விதை, முளைத்தால் மரம்
இல்லாவிட்டால் மண்ணுக்கு உரம்.
மூலப் பரம்பொருளோ!
முத்தமிழ் ரத்தினமே
காக்கும் கடவுளே! கணேசா சரணம்.
சுபஹரி கண்மூடி நின்றாள். மூடிய கண்களுக்குள் மாணிக்க விநாயகர் வந்து நின்றார். மனது அவரை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டது.
இறைவா மாயையில் இருந்து
என்னை நிஜத்துக்கு அழைத்துச்செல்
என் மனம் வாக்கு செயல்
இவற்றில் தூய்மையும் நேர்மையும்
ஒளிர அருள்புரி என் மனமறிந்து
யாருக்கும் தீங்கு செய்யவோ, நினைக்கவோ
கூடாது என்றும் என்னுடன் இருந்து நல்வழி காட்டு.
விடியலின் நிசப்தத்தில் மனசு குவிந்து நின்றது.
சுற்றிலும் பணம் சூழ்ந்து, மெர்குரி ஒளியின் வெளிச்சத்தில் ரூம் பிரகாசமாய் இருந்தது. ஜன்னல் வழியே தெருவிளக்கின் ஒளி முழுமையாய் உள்ளே வீசியது. இந்த ஐந்து மணி விடியலில் ஜன்னல் வழியே தெரியும் மலைக்கோட்டையை பார்த்து பிரார்த்தனை செய்வது சுகமான விஷயம்.
பிரார்த்தனை என்று எதுவும் இல்லை.
எதைத்தான் வேண்டுவது.
ஆசைகள் பெருகப் பெருக, பிரார்த்தனை பலம் இழந்து போகிறது. படைத்த கடவுளுக்குத் தெரியாதா? எந்த நேரத்தில் எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று.
மகாசக்தி சரணம். இதை மட்டும் ஆழ்மூச்சை இழுத்து விட்டுச் சொல்வாள். தாத்தா சொல்லித் தந்தது.
கண்மூடி ‘மகாசக்தி’ என்று உச்சரித்தாள்.
கண் திறந்து பார்வையை நாலாபுறமும் சுழற்றி பயிற்சி செய்துவிட்டு, எழுந்தாள்.
ஜன்னலை விரியத் திறந்து உச்சிப்பிள்ளையாரை பார்த்தபடி சிறிது நேரம் நின்றாள். மனது மெல்ல அன்றைய தினத்துக்கு தயாரானது. தெருக்கோடி விநாயகர் கோவிலில் விநாயகனே வினை தீர்ப்பவனே பாட ஆரம்பித்தது.
இந்நேரம் தாத்தா எழுந்திருப்பார்.
குளித்து, பிள்ளையார் கோவிலில்தான் இருப்பார். தவறாத, நிதானமான பழக்கம். தெளிவான சிந்தனை.
கோபமோ, வேதனையோ தள்ளிவை. எதையும் பதட்டப்படாம சிந்தி. பட்டாசு மாதிரி குதிக்கிறதுனால எதையும் சாதிக்க முடியாது என்ற தாத்தாவின் அறிவுரைதான் சுபஹரியை இத்தனை வல்லவள் ஆக்கியிருக்கிறது.
அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. பொறுப்பில்லாத அப்பா, சுயநலமாய் தான், தன் சுகம் என்ற அவரின் குணமே சுபஹரியை விலக்கிவிட்டது.
ஏதோ அத்தை இருக்கிறாள். அம்மா, பாட்டி இல்லாத குறையைத் தீர்க்கிறாள். அவள் பையன் கதிர் சகோதரனாய் இருக்கிறான்.
அன்பைக் கொடுத்து அன்பை பெறுக
அன்பை தருகிறாள், பெறுவதுதான் கடினம்.
சுபஹரி யோசித்தபடி நின்றாள்.
பால்
மணியோசை கேட்டது. கும் என்று தண்ணீர் மோட்டார் ஓட ஆரம்பித்தது. சீக்கிரம் குளித்து ரெடியாக வேண்டும். இன்று சுபஹரியின் பிறந்த நாள். அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அகிலேஷ் காத்திருப்பான்.
ஒன்பது மணிக்கு சமயபுரத்துல நிப்பேன்
குரலில் கண்டிப்பு.
அவன் சொல்வதை மீறினால் ஒரு வாரம் பேச மாட்டான். ஆனால் அவனின் அன்பு, அருவியாய் கொட்டும் பிரியம், ஹரிம்மா என்ற அழைப்பு எல்லாவற்றையும் மறக்க வைத்துவிடும்.
ஒரு வருஷக் காதல் சலித்து விட்டது. சட்டுனு கல்யாணம் செஞ்சுகிட்டு செட்டில் ஆயிடலாம் என்கிறான்.
இன்னைக்கு உன்னை எங்கம்மாகிட்ட அறிமுகப்படுத்தறேன் என்றிருந்தான். முதல்ல சமயபுரத்து அம்மன்கிட்ட வேண்டிண்டு போராட்டத்திற்கு தயாராகலாம்.
தாத்தா சம்மதித்து விட்டார்.
அகிலேஷ்க்கு என்னம்மா குறைச்சல்? ‘பெல்’ நிறுவனத்துல வேலை. ஒரு தங்கைதான். அம்மா ஸ்கூல் டீச்சர். உன்னை பிரியமா பாத்துக்குவாள். காசு பணம் வேணுங்கறது உனக்கு இருக்கே!
உண்மைதான். இந்த வீடே எழுபது லட்சம் பெறும். மொத்தமாக ஏழு வீடுகள் இருக்கிறது. வாடகையே மாசம் முப்பதாயிரம் வருகிறது. அம்மா, பாட்டியின் நகைகள் 60 பவுன் இருக்கிறது. வீடு, நகை எல்லாம் அம்மா கொண்டு வந்த சீதனம். சுபஹரி பிறந்த சில மாதங்களில் அம்மா இறந்துவிட்டாள்.
அம்மாவின் மரணத்துக்குபின் அவள் சொத்துக்கள் அனைத்தும் வேறு வாரிசு இல்லாததால், சுபஹரியை சேர்ந்தது. அப்பாவுக்கு அனுபவ பாத்தியதை மட்டும்தான். தாத்தாவும் தன் பணத்தை அப்பாவுக்கு தராமல், அத்தைக்கு பாதி தந்தது போக மீதியை சுபஹரி பேரில்தான் டெபாசிட் செய்திருந்தார்.
அப்பாவுக்கு வேலை என்று எதுவும் இல்லை. அரியமங்கலத்தில் நாலு ஏக்கர் நிலம் இருந்தது. குத்தகைக்கு விட்டு அந்த வருமானம்தான்.