Mul Malaraakirathu
3/5
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Developing Right Brain Rating: 5 out of 5 stars5/5Secrets of Success Rating: 3 out of 5 stars3/5
Related to Mul Malaraakirathu
Reviews for Mul Malaraakirathu
5 ratings0 reviews
Book preview
Mul Malaraakirathu - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
முள் மலராகிறது
Mul Malarikirathu
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1-1
அத்தியாயம் 1-2
அத்தியாயம் 1-3
அத்தியாயம் 1-4
அத்தியாயம் 1-5
அத்தியாயம் 2-1
அத்தியாயம் 2-2
அத்தியாயம் 2-3
அத்தியாயம் 2-4
அத்தியாயம் 2-5
அத்தியாயம் 2-6
1
வேனிற் காலமானதால் இரவு ஏழாகியும் இன்னும் இருட்டவில்லை.
ஆனாலும் ரயில் நிலையத்தில் விளக்குகள் பட்டப்பகலாய் எரிந்து கொண்டிருந்தன. ரயில் கிளம்பத் தயாராயிருந்தது.
முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நின்றபடி மகளிடம், 'அம்மா! அந்த பிளாஸ்டிக் கூடையில் ஆப்பிள் இருக்கு. பச்சை பையில் இனிப்புகள் வைத்திருக்கிறேன்" என்றார் அவர்.
'ஐயோ! இது இருபதாவது தடவை அப்பா நீங்க இதைச் சொல்றது!" செல்லமும், அலுப்பும் கலந்த குரலில் சொன்னாள் பிரேமா.
அவர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அருகிலிருந்த வேலைக்காரன் பக்கம், 'டேய்! இங்கே வா! என்றார். ராமு ஓடிவந்து எதிரே கைகட்டி நின்றான். மகள் பக்கம் திரும்பி, 'அம்மா! இவன், பக்கத்து ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் இருப்பான். வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றதுமே இந்த ஜன்னலிடம் வந்து நிற்கச் சொல்லி இருக்கேன். எது தேவையானாலும் கேள்
என்றவர் அவனைப் பார்த்து, 'டேய்! ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்றதுமே நீ ஓடிவந்து இங்கே நிற்கணும். இதோ பாரு. இந்த ஜன்னலை அடையாளம் வைத்துக்கொள்" என்றார்.
ராமு பக்தியோடு தலையாட்டினான்.
'என்னப்பா இது? இரவு முழுவதும் அவனைத் தூங்கவிடப் போறதில்லையா?"
'தூங்க விடறதுக்குத்தான் அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேனா?" என்றார் சர் ஜெகபதி பகதூர். சர் என்ற பட்டம் அவருக்கு பிரட்டிஷ்காரர்கள் கொடுத்ததாய் சொல்லிக் கொள்வது வழக்கம். பகதூர் பட்டம் யார் கொடுத்தார்களோ தெரியாது.
'ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பச் சொ'ல்லி சில்பா ஏஜென்ஸிக்கும், என் நண்பன் ரங்கநாதனுக்கும், சுனஷன் மேனேஜிங் டைரக்டருக்கும் டிரங்கால் போட்டுச் சொல்லியிருக்கேன். நீ க்ஷேமமாய் போய்ச் சேர்ந்ததாய் ரங்கனை விட்டு ட்ரங்கால் பண்ணச்சொல்லு. கல்யாணம் முடிந்ததுமே உடனே புறப்பட்டு வந்து சேரு. டிக்கட் ரிசர்வ் பண்ணச் சொல்லி ரங்கனுக்கும் சில்பா ஏஜென்ஸிக்கும்..."
ரயில் பெரிதாய் கூவிற்று.
'ராத்திரி ஒன்பது மணிக்கு சாப்பாடு கொண்டு வந்து தருவாங்க. அதோடு கூட விடமின் மாத்திரைகளைப் பற்றி நினைவூட்டச் சொல்லியிருக்கிறேன், ரயில் அட்டெண்டரிடம். சூட்கேசில் இருக்கும்மா விடமின் மாத்திரைகள்.."
'சும்மாயிருங்கப்பா! யாரேனும் பார்த்தால் என்னை ஏதோ நோயாளின்னு நினைச்சுப்பாங்க." சங்கடத்துடன் கம்பார்ட்மென்ட்டைச் சுற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னாள் பிரேமா. அந்த கம்பார்ட்மெண்டில் பிரேமாவைத் தவிர இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவர் கிழவர், ஓய்வுபெற்ற அதிகாரியைப் போல் தோற்றமளித்தார். மற்றொருவர் பெங்காலியைப் போலிருந்தார். புத்தகம் படிப்பதில் ஆழ்ந்திருந்தார்.
'போய்ச் சேர்ந்ததுமே போன் பண்ண மறந்து விடாதேம்மா."
'சரிப்பா! ஆனாலும் இதுதான் முதல்தடவை நான் ரயிலேறி ஊருக்குப் போவது போல் பண்றீங்க."
'உனக்கும் ஒரே ஒரு மகள் இருந்திருந்தால் புரியும் அம்மா." அவர் இதைச் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில் காக்கி உடை அணிந்த ஒருவன் ஏறக்குறைய அவரைத் தள்ளிக்கொண்டு கம்பார்ட்மெண்டிற்குள் அவசரமாய் ஏறினான். சர் ஜகபதி பகதூர் அவன் தன்னைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஏறியதற்காகக் கூட வருந்தவில்லை. ஆனால் மகள் உட்கார்ந்திருந்த கேபினுக்குள் நுழைந்ததற்காக முகம் சுளித்தார்.
அவன் கேசங்கள் நெற்றியையும், மூக்கு நுனியின் நிழல் மேலுதட்டையும் தொட்டுக் கொண்டிருந்தன. ஒரு கோணத்திலிருந்து பார்த்தால், தன் தொழிற்சாலையில் வேலை பண்ணும் தொழிலாளியைப் போலவும், இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமியைப் போலவும் தோற்றமளித்த அவன் அந்த கம்பார்ட்மென்டிற்கு யாரைத் தேடிக்கொண்டு வந்தான் என்றுதான் புரியவில்லை. ஆயினும் அவன் தன் மகள் இருந்த பக்கமாய் ஒரு தடவை கூட திரும்பிப் பாராதது சற்றே நிம்மதியை அளித்தது.
அதற்குள் ரயில் இன்னொரு முறை கூவிவிட்டு நகரத் தொடங்கிற்று. அப்பொழுதுதான் அவருக்கு இன்னொரு விஷயம் சட்டென்று நினைவிற்கு வந்தது. அத்துடன் தன் பருமனான சரீரத்தைக் கூட பொருட்படுத்தாமல் ஓட்டமாய் ஓடிவந்து, 'அம்மா! நம்ப ராமு ஒவ்வொரு ஸ்டேஷனிலேயும் வருவானே என்று ஜன்னல் கதவைத் திறந்து வைத்துகொண்டு படுத்துக்காதே. ராத்திரியெல்லாம் பனிக்காற்று வீசும்" என்றார் மூச்சிறைக்க.
பிரேமாவுக்குக் கண்கள் கலங்கின. இரண்டாயிரம் பேரைத் தன் ஆள்காட்டி விரலால் ஆட்டிப் படைக்கக்கூடிய ஒரு பெரிய தொழிலதிபர் ஒருவர் இந்தமாதிரி கம்பார்ட்மென்ட்டை நோக்கி ரயிலோடு ஓடி வருவது! எந்த தந்தையுமே தன் மகளை இத்தனை அபூர்வமாய் பார்த்துக்கொள்ள முடியாது என்றெண்ணினாள்.
~சரிப்பா... இனி நில்லுங்கள்..." என்றாள் தந்தையைப் பார்த்து பாசத்தோடு. அவர் நின்றுக்கொண்டார். விளக்கு வெளிச்சம் மோதிரத்தில் பட்டுப் பளீரென்று மின்னிற்று. ரயில் மேலும் வேகத்தை மேற்கொண்டு பிளாட்பாரத்தைத் தாண்டத் தொடங்கிற்று. பிரேமா கையசைத்தாள்.
தந்தையும், அவருக்குப் பின்னால் பணிவோடு நின்று கொண்டிருந்த பரிவாரங்களும், கார் டிரைவரும் மெல்லமெல்லத் தேய்ந்து பார்வையிலிருந்து மறைந்தனர்.
அப்பொழுது டிக்கெட் கலெக்டர் உள்ளே வந்தார்.
பிரேமா அவரை ஏறிட்டாள்.
அவள் தலையை உயர்த்தாமலேயே கண்களை மட்டுமே அவ்வாறு ஏறிட்டுப் பார்த்தது மிக அழகையும் அற்புதமாயும் தோற்றமளித்தது. மஞ்சள் நிற காட்டன் புடவைக்கு வெளிர்நீல நிற பார்ட்டர் எடுப்பாய் இருந்தது. கழுத்தில் இரட்டைசரம் முத்து மாலை அணிந்திருந்தாள். ஜன்னல் வழியாய் அலையலையாய் வந்து மோதிக் கொண்டிருந்த காற்றிற்கு, தலைக்குக் குளித்து லூசாக போட்டுக் கொண்டிருந்த தலைமுடி நெற்றியில் வந்து நாட்டியமாடிக் கொண்டிருந்தது. ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அலக்நந்தா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் தெறித்து நின்ற பளிங்குச் சிலையைப் போலிருந்தாள்.
டிக்கெட் பரிசோதகர் அவளிடமிருந்து டிக்கெட் வாங்கி, பெரிதாய் சோதனை எதுவும் பண்ணாமல் இரண்டு கோடுகளைக் கிறுக்கிவிட்டுத் திரும்பித் தந்தவர் கூலியாளைப் போல் தோற்றமளித்த அவ்விளைஞனை நோக்கித் திரும்பினார்.
அவ்விளைஞனும் டிக்கெட் நீட்டினான்.
பிரேமாவுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது, அவன் இருந்த தோற்றத்திற்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தது ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் பிரித்தாள்.
ரயில் சிக்னலைத் தாண்டிக் கொண்டிருந்தது. அதற்குள், 'இது செகண்ட் கிளாஸ் டிக்கெட் என்ற குரல் கேட்டதால் நிமிர்ந்து பார்த்தாள். அவ்விளைஞன் அலட்சியமாய், 'ஆமாம்
என்றான்.
'அதிகப்படி கட்டணம் கட்டணும், கட்டுகிறாயா?" ஒருமையில் கேட்டார் டிக்கெட் பரிசோதகர்.
'பணம் இல்லை."
'பின்னே இதில் ஏன் ஏறினாய்?"
'அங்கே என் சீட்டில் வேறு யாரோ உட்கார்ந்திருக்காங்க." சிறு பையனைப் போல் பதிலளித்தான்.
டிக்கெட் பரிசோதகர் தன் கையிலிருந்த டிக்கெட்டை உற்று பார்த்துவிட்டு, 'இது டூ டயர் ரிசர்வேஷன் டிக்கெட்தான்" என்றார்.
'ஆமாம். அங்கே என் பெர்த்தை வேறு யாருக்கோ கொடுத்துட்டாங்க. ஒரே நம்பருள்ள பெர்த்தை இரண்டு பேருக்கு எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்டதற்குத் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார் அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர். அதனால் இங்கே வந்து உட்கார்ந்துகொண்டேன்." அவன் குரலில் அப்பாவித்தனம் இழையோடிற்று.
டிக்கெட் பரிசோதகர் அவனைப் பார்த்துவிட்டு அலுப்போடு, 'அது நீயும், அவரும் தீர்த்துக்க வேண்டிய விஷயம். அங்கே சீட் இல்லைன்னுட்டு இங்கே வந்து உட்காருவதற்கு இதொன்றும் கல்யாணப் பந்தி இல்லை" என்றார். அதைக் கேட்டுக் கிழவர் சிரித்தார்.
'நான் பதினைந்து நாட்களுக்கு முன்னாடியே என் டிக்கெட்டை ரிசர்வ் பண்ணிட்டேன். இப்போ வந்து பார்த்தால் எனக்கு பெர்த்தே இல்லை. இது உங்க ரயில்வே இலாகாவின் கையாலாகாத்தனம்தானே!"
டிக்கெட் கலெக்டர் கோபமாய், 'அந்த மாதிரி ஏதாவது நிகழ்ந்தால் போய் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் கொடுத்திருக்க வேண்டியது!" என்றார்.
'அந்த பரிசோதகரும் அதைத்தான் சொன்னார். ஆனால் நான் இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரோடு தகராறு பண்ணிட்டிருந்தால் இங்கே ரயில் புறப்பட்டுப் போயிடுமே!"
டிக்கெட் பரிசோதகருக்கு அந்த தர்க்கத்தைக் கேட்டுத் மூளை கலங்கிவிட்டது. எரிச்சலுடன், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதிகப்படி கட்டணத்தையாவது கட்டு, அல்லது அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடு" என்றார்.
அவர் வார்த்தையை முடிக்கக் கூடவில்லை. அதற்குள் சட்டென்று எழுந்து நின்று அபாயச் சங்கிலியை இழுத்தான் அவ்விளைஞன். அந்த திடீர் விளைவிற்கு கம்பார்ட்மென்டில் இருந்த எல்லோரும் திகைப்படைந்தார்கள்.
'உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுத்தா?" கண்களை உருட்டி விழித்துக் கேட்டார் டிக்கெட் பரிசோதகர். அதற்குள் ரயிலின் வேகம் குறைந்து நின்றுவிட்டது.
'அடுத்த ஸ்டேஷன்ல இறங்கினால் நான் திரும்பி எப்படி பின்னுக்குப் போக முடியும்? என்ன பண்ணப் போறீங்களோ அதை இங்கேயே பண்ணித் தீர்த்துடுங்க. இல்லாவிட்டால் புறப்பட்ட ஸ்டேஷனுக்கே பின்னுக்கு அழைச்சுட்டுப் போய் அங்கே இருக்கிற ரிகார்டுங்களைப் பரிசோதித்துக்கலாம்." அவ்விளைஞன் நிதானமாய் பதிலளித்தான்.
பிரேமா முதல் முறையாக அவனைக் கூர்ந்து பார்த்தாள்.
சர்வசாதாரணமாய் தென்பட்ட அவன் ஒரு பெரிய ரகளையை எதிர்பார்த்தே வந்திருப்பவன் போல் சாவகாசமாக உட்கார்ந்து இருந்தான். சிறிய தூறலாக இருந்தது சூறாவளி புயலாய் மாறி விடும் போலிருந்தது.
அதற்குள் ரயில் நின்று விட்டதால் கார்டு உள்ளே வந்தார். வயதானவர். ஒய்வு பெறுவதற்கு தயாராக இருந்தார். முக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டு, 'தம்பி! இரு நூற்றைம்பது ரூபாய் பைன் கட்டணும் நீ" என்றார்.
'அவரே இருந்தால் அம்பட்டன் எதுக்கு என்கிற கதையாய் இருக்கு. நீங்க எதுக்குத் தாத்தா குறுக்கிடறீங்க?" சீட்டிலிருந்து எழுந்திருக்காமலேயே பதில் அளித்தான் அவ்விளைஞன். அதற்குள் அங்கு கூடிவிட்ட மக்கள் சிரிக்கத் தொடங்கினார்கள்.
'இதப்பாரு மிஸ்டர்! போலீசை வரவழைத்து உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்." டிக்கெட் பரிசோதகர் சொன்னார்.
'எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதை அடுத்த ஸ்டேஷனில் பண்ணாமல் ரயிலை பின்னுக்குப் போகச் செய்து பண்ணினால் ஒப்புக் கொள்கிறேன்."
'இல்லாவிட்டால் என்ன பண்ணி விடுவாய்?"
'சங்கிலியை இழுத்துக்கிட்டே இருப்பேன்."
'கைகளைப் பின்னுக்குக் கட்டிப் போட்டுடுவோம்."
'அப்போ போலீஸ் உங்களை அரெஸ்ட் பண்ணிடுவாங்க."
டிக்கெட் பரிசோதகர் திருதிருவென்று விழித்தார். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பது உண்மைதான்.
அதற்குள் அடுத்த கம்பார்ட்மென்ட்டிலிருந்து கூட அங்கே வந்து சேர்ந்தார்கள். அவ்விடத்தில் கும்பல் கூடிவிட்டது. ரயில் கால்மணி நேரம் தாமதமாகி விட்டது.
'முதல்ல தப்பெல்லாம் என் மீதே இல்லை, அதோ அவர் மீது தான்."
எல்லா கண்களும் அந்த பக்கமாய் திரும்பின. செகண்ட் கிளாஸ் டூ டயர் பரிசோதகர் அங்கே நின்று கொண்டிருந்தார். யாரோ கும்பலிலிருந்து, 'என்ன சார் ரகளை? டிக்கெட் இல்லாமல் உட்கார்ந்திருந்தால் வெளியே கழுத்தைப் பிடித்து தள்ளால்" என்றார்கள். அதற்குள் டூ டயர் பரிசோதகரை என்ன நடந்தது என்று கேட்டார் கார்டு.
'இந்த ஆளின் பெயரில் டிக்கெட் ரிசர்வேஷன் பண்ணப்பட்டிருக்கு. ஆனால் சார்ட்டிலிருந்த பெயரும், டிக்கெட் நம்பரும் வேறாய் இருக்கு. அந்த பிரயாணிக்கு பெர்த்தைக் கொடுத்தேன். இதிலென்ன தப்பு?" என்றார் பரிசோதகர்.
'ஒரு தப்புமில்லை என்றார் கார்டு. இளைஞனை நோக்கித் திரும்பி, 'மிஸ்டர்! இறங்கி ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் போய் உட்கார்! தகராறு பண்ணினால் ஜெயிலுக்கு போய் உட்கார்ந்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த தவறு எப்படி நேர்ந்ததுன்னு ஸ்டேஷன்லே கேட்டிருக்க வேண்டியது. இல்லாவிட்டால் புகார் எழுதித் தந்திருக்க வேண்டியது
என்றார்.
'ரயிலைப் பின்னுக்கு அழைத்துக் கொண்டு போங்க. அப்படியே எழுதித் தருகிறேன். பெர்த் அலாட் ஆனதும் பிராயணத்தைத் தொடருவோம்" என்றான் மெதுவாய் அவ்விளைஞன்.
'பஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்ட் ஒன்றும் உங்க மாமனார் வீட்டுச் சொத்தில்லை உட்காருவதற்கு." ஆங்கிலத்தில் கோபமாகச் சொன்னார் டிக்கெட் பரிசோதகர். ஆத்திரத்தில் உடல் பற்றி எரிந்தது அவருக்கு.
'நான் ஒன்றும் உங்க மருமகனில்லை என்னை இங்கிருந்து பிடித்துத் தள்ள" என்றான் அதே தொனியில். அவன் அந்த மாதிரி பிறழாத ஆங்கிலத்தில் பதிலளித்தது ரயில்வே அதிகாரிகளுக்குத் திகைப்பூட்டிற்று. தன்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களை நோக்கிச் சொல்லத் தொடங்கினான் அவ்விளைஞன்.
'நிஜம்தான்! நான் ஸ்டேஷன்லே கம்ப்ளயின்ட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவங்க என்ன சொல்லுவாங்க? 'எழுதிக் கொடுங்கள். பார்ப்போம் என்பாங்க. அதற்குள் ரயில் கிளம்பிப் போய் விடும். அதனால் எனக்கென்ன லாபம்? இன்றிரவு சுகமாய் பயணம் பண்ணுவதற்காக பதினைந்து நாட்களுக்கு முன்னாடியே ரிசர்வேஷன் செய்துவிட்டேன். என்னை அங்கிருந்து போகச் சொல்லிட்டார்கள். இப்போ என்னவோ அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிப் போயிடு என்கிறார்கள். இதுவே முதல் வகுப்பு பயணியாக இருந்தால் இப்படிச் சொல்லுவார்களா? மாட்டார்கள். ஏன் என்றால் இந்த வகுப்பில் பயணம் பண்ணுகிறவர்கள் பணம், ஹோதா படைத்தவர்கள் என்பதால் அப்படிச் செய்ய மாட்டார்கள். இதை இன்னிக்கே உண்டு இல்லை என்று பார்த்துவிடப் போகிறேன். என்னை அரெஸ்ட் பண்ணிக்கச் சொல்லுங்க. கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளச்சொல்லுங்க. ஆனால் நான் இங்கிருந்து அசைய மாட்டேன். ரயில் புறப்படும் போதெல்லாம் மட்டும் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கப்போகிறேன்
என்று சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டான் இளைஞன்.
மக்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.
'ஆமாம். இவர் சொல்றது நிஜம்தான்" என்றார் ஒருத்தர்.
'ஒருத்தர் பெர்த்தை இன்னொருத்தருக்கு எப்படிக் கொடுத்தாங்க?"
'ஆனாலும் ரயில்வே இலாக்காவில் ரொம்பவும் லஞ்ச ஊழல் அதிகரித்துவிட்டது. அவங்களுக்கு இந்த மாதிரிதான் புத்தி சொல்லியாகணும்."
'ரயிலைத் திரும்பிப் போக விட மாட்டோம். முன்னுக்கு போக வேண்டியதுதான்."
சூறாவளியாய் எல்லோரும் மொத்தமாய் தம் மேல் பாயத் தொடங்கவே, ரயிவே அதிகாரிகள் கலவரமடைந்தார்கள். டூ டயர் பரிசோதகரைப் பார்த்து கார்டு, 'ஒரே பெர்த்தை இருவருக்கு எப்படிக் கொடுத்தீர்?" என்றார் எரிச்சலுடன்.
'எனக்கென்ன தெரியும்? ஸ்டேஷன்ல கேட்கணும் அதை" என்றார் அவர். அதற்குள் மேலும் சிலர் வந்து கூடத் தொடங்கினார்கள். கம்பார்ட்மென்ட் வராண்டாவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
'ரயில்வே போலீசாரிடம் ஒப்படைப்போமா?"
'புக்கிங் கிளார்க்கை முதல்ல சஸ்பெண்டு பண்ணிடுவாங்க."
டூ டயர் பரிசோதகர் அவனைப் பார்த்து, 'எதுக்கு தம்பி வீண் தகராறு? வா.... உனக்கு ஒரு பெர்த் கொடுத்துவிடுகிறேன்" என்றார்.
'அதை அந்த ஸ்டேஷன்லேயே சொல்லியிருந்தால் இத்தனை ரகளை நடந்து இருக்காது இல்லையா? என்ற அவ்விளைஞன் ஜனங்களை நோக்கித் திரும்பி, 'பார்த்தீங்களா? முதல்ல என்னையே புகார் கொடுக்கச் சொன்னார். சங்கிலியைப் பிடித்து இழுத்தால் போலீசுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்றார்கள். இப்போ பெர்த் தருகிறோம் என்று சொல்கிறார்கள்.. இவ்வளவு ரிஸ்க் எடுத்துக் கொண்டால்தான் வேலை நடக்கும் போலிருக்கு
என்று எழுந்திருந்தான். மக்கள் அவனைப் பாராட்டுவது போல் பார்த்தார்கள். அவனைத் தொடர்ந்து பிரவாகமாய் நகர்ந்தார்கள்.
அடுத்த நிமிஷம் கம்பார்ட்மென்ட் காலியாகிவிட்டது. மழை பெய்து ஓய்ந்தாற்போல் இருந்தது. ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் ரயில் புறப்பட்டது.
பிரேமா திரும்பவும் புத்தகத்தில் ஆழ்ந்தாள். பெங்காலி ஆசாமி கதவைச் சாத்திக் கொண்டிருந்தார். ரயில் வேகத்தை மேற்கொண்டது.
******
'ஹாய் மீனா!"
'ஹாய் பிரேமா!" ஓடிவந்து கட்டிக்கொண்டாள் மீனா.
'என்ன? இப்பவே கல்யாணக்களை முகத்தில் ஒளி வீசுகிறதே" என்றாள் பிரேமா சினேகிதியை கூர்ந்து பார்த்துக் கொண்டே.
'அது இருக்கட்டும். நீ வருவாயோ மாட்டாயோ என்று எவ்வளவு பயந்தேன்தெரியுமா?"
'வராமல் எப்படி இருப்பேன்?"
'உங்கப்பா உன்னைத் தனியாய் அனுப்ப வேண்டாமா?"
'தனியாய் அனுப்பிவிடவில்லை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் என்னைப்பார்த்துக்க வேலைக்காரனும், இங்கே வந்து இறங்கியதுமே மூன்று கார்களும் இருக்கும் படியாய் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் அனுப்பி வைத்தார். கோபமாகச் சொன்னாள் பிரேமா. 'மூன்று டிரைவர்களும் என்னை வந்து சூழ்ந்து கொண்டபோது, எவ்வளவு சங்கடமாக இருந்தது தெரியுமா? எங்கப்பா இன்னும் என்னைப் பால் குடிக்கும் பச்சைக் குழந்தைன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
'அந்த மாதிரி ஒரு அப்பா இருக்கறதுக்கு சந்தோஷப் படணும் என்றாள் மீனா, அவளை உள்ளே அழைத்துச் சென்றபடி. 'எது எப்படியிருந்தால் என்ன? நீ வந்து சேர்ந்து விட்டாய். அது போதும்! நாம்ப பேசுவதற்கு ஒரு மணி நேரம்தான் இருக்கு. அதற்குள் பேசித் தீர்த்துடணும். அப்புறமாய் நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ
என்று ஒரு சிறிய அறையைச் சுட்டிக்காட்டி, 'இதை உனக்காகவே தனியாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன். அப்கோர்ஸ் உங்க பாத்ரூமுக்குக்கூட ஈடாகாதுன்னு வைத்துக்கொள். நாங்கள் ஏழைதானே" என்று முடிப்பதற்குள் பிரேமா அவள் காதைப் பிடித்துத் திருகியதால் வீலென்று அலறிவிட்டாள்.
மிகப் பிரயாசைப்பட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு, 'பாரு, காது எப்படி சிவந்து விட்டது என்று?" என்றாள்.
'நாளை இரவில் உங்களவருக்கு சந்தேகம் வந்துடும் போலிருக்கு."
'சீ!"
பிரேமா சிரித்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினாள். வெந்நீரில் குளித்ததும் பயணக் களைப்பு நீங்கி சுகமாய் இருந்தது.
மீனா அறையில் காத்துக் கொண்டிருந்தாள்.
பவுடரை எடுக்க சூட்கேசைத் திறந்தவள், 'மீனா! உன் கல்யாணத்திற்கு அத்தனை பேருக்கு நடுவில் மொய் என்ற பெயரில் இதைக் கொடுக்கணும் என்று இல்லை. இப்பொழுதே தந்து விடுகிறேன். இதோ பார். இந்தப் புடவை நன்றாயிருக்கா? உனக்காகவே வாங்கினேன்" என்றாள் வெள்ளை நிறப் புடவையொன்றைக் கையிலெடுத்தபடி.
உண்மையில் அந்தப் புடவை மிக அழகாயிருந்தது. நீல பார்டருடன் நீல வானத்தில் வெண்ணிற மேகக் குவியலைப் போல்
மீனாவின் முகம் சிவந்துவிட்டது. 'இந்த அன்பளிப்புகளுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன் என்று நினைத்து விட்டாயா?" என்றாள் கோபமாய்.
பிரேமா சிரித்தபடி, 'இதைப் பெரிது படுத்தாமல் எடுத்து வைத்துக் கொண்டால் நாம் எஞ்சியவைகளைப் பேசித் தீர்க்கலாம் என்றாள். மீனா ஒரு வினாடி சிநேகிதியின் கண்களைக் கூர்ந்து நோக்கியவள் தானும் சிரித்துவிட்டு, 'சரி, அதைப்பற்றி பேச வேண்டாம். விட்டுத் தள்ளுவோம். எனக்கு இன்றைக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது, தெரியுமா?
என்றாள்.
'கல்யாணம் என்றா?"
'ஊஹூம் இல்லை. இந்தக் கல்யாணத்துக்கு நீ வந்தது! அதுமட்டுமில்லை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நீ இந்த மாதிரி எங்களுடன் கலந்து பழகுவது."
'சீ...என்ன இது?"
'ஆமாம் பிரேமா! நான் என்னென்ன நினைத்துக் குழம்பினேன் தெரியுமா? முதலில் நீ வரவே மாட்டாய் என்று எண்ணினேன். ஏதாவது பெரிய ஓட்டலில் ரூம் எடுத்துக் கொண்டு முகூர்த்த நேரத்திற்கு வந்தாலும் பரவாயில்லை என்று வேண்டாத யோசனை கூட வந்தது. உன்னால் இங்கே பொருந்தி இருக்க முடியாது என்று தெரியும் எனக்கு. நான் உன் ஹாஸ்டல் சிநேகிதி மட்டும்தான். இந்த மாதிரி விடுகள் இருக்கும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாய். அவ்வளவு பெரிய பணக்காரி நீ. உனக்குத் தெரியுமா? இந்த வீட்டில் மொத்தம் எட்டுப்பேர் இருக்கிறோம், இவ்வளவு சின்ன சின்ன அறைகளில் இடிபட்டுக் கொண்டு."
ஏனோ தெரியவில்லை. பிரேமாவின் கண்களில் நீர் ததும்பிற்று. 'அப்படிப் பேசாதே ப்ளீஸ்.. எனக்கு அழுகை வருகிறது" என்றாள்.
மீனா தேறியபடி, 'ஆமாம். என்னென்னவோ பேசிவிட்டேன் நான். பிரேமா! இது வருத்தமில்லை. நீ வந்துவிட்டாயே என்ற சந்தோஷம்தான், வேறில்லை" என்றாள் சிரித்தபடி.
பிரேமா சிரிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையைப் பற்றி அவளுக்கு உண்மையாகவே எதுவும் தெரியாது. தந்தை அந்த மாதிரி வளர்த்து விட்டிருந்தார் அவளை. இப்பொழுதும் மீனாவின் வீட்டின் நிலவரம் தெரிந்திருந்தால் மகளை அங்கு அனுப்பியிருக்க மாட்டாரோ என்னவோ!
மீனாவின் தந்தை குமாஸ்தா வேலையிலிருந்து ரிடையராகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு ஆறு பெண்கள், மீனா நான்காமவள். மிகப் பிரயாசைப்பட்டு ஒரு பட்டதாரியைத் தேடித் பிடித்திருந்தார் அவர். ஐந்தாயிரம் வரதட்சணையுடன். இந்த வரதட்சணை விஷயம் மீனாவுக்குத் தெரியாது. மணையில் அமர்ந்திருந்த பொழுது அச்சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் என்றைக்குமே தெரிய நேர்ந்திருக்காது.
பிரேமா மணப்பெண்ணிற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். என்றுமே குறும்புத்தனத்தோடு வளைய வந்து கொண்டிருக்கும் மீனா அவ்வாறு தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தது பார்க்க விந்தையாய் இருந்தது. மணமகன் கொஞ்சம் மிடுக்காக உட்கார்ந்து இருந்தாலும் அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் மணமகளைத் திரும்பிப் பார்த்துப் பிடிபட்டுப் போய்க் கொண்டிருந்தான்.
ஏதோ சினிமாவில் நிகழ்ந்தாற்போல் நடக்கவில்லை அச்சம்பவம். மணமகனின் தந்தை பெரிதாய் கத்திக் கூச்சலிட்டபடி, இக்கல்யாணம் நடக்க வழியில்லை
என்று கத்தவில்லை. மணமகனிடம் வந்து, 'டேய்! எழுந்திருடா மணையை விட்டு" என்றார் மெதுவாய். இந்த வார்த்தைகள் மணமகனுக்கும், மீனாவுக்கும், பக்கத்திலிருந்த பிரேமாவுக்கும் மட்டுமே கேட்டன.
இருவரும் கற்சிலையாகி விட்டார்கள்.
மணமகன் ஒன்றும் புரியாமல் தந்தையை ஏறிட்டான். 'ஏழாயிரம் தருவதாகச் சொல்லிவிட்டு ஐந்தாயிரந்தாண்டா தந்திருக்காங்க. இது ஏமாற்றுவேலை! எழுந்திரு மணையைவிட்டு."
அதைகேட்ட பிரேமாவின் முகம் அருவருப்பாலும், வெறுப்பாலும் சுளித்தது. அதிர்ஷ்டவசமாய் அவர் பேசியது மேள சத்தத்தோடு கலந்துவிட்டது. மணமகன் மீனாவைப் பார்த்தான். தந்தையை சங்கடத்துடன் ஏறிட்டு, 'என்னப்பா இதெல்லாம்? இவ்வளவு தூரத்துக்கு வந்தபிறகு..." என்றான்.
‘ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சவாவது நல்லவனாய் இருக்கிறானே மணமகன்’ என்றெண்ணிக் கொண்டாள் பிரேமா. மீனாவின் கண்கள் மழையைப் பொழியத் தயாராயிருந்தன. பிரேமா சுற்றும் முற்றும் பார்த்தாள். மீனாவின் தந்தையை அவ்விடத்தில் காணோம். புரோகிதர் திருமாங்கல்யத்திற்கு மஞ்சள் தடவிக் கொண்டிருந்தார்.
~டேய்! கல்யாணத்துக்கு முந்தியே இவ்வளவு ஏமாற்றுகிறவர்கள் போகப் போக இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ! எழுந்திரு!"
பிரேமா அவரை நெருங்கி, 'இரண்டாயிரத்துக்காக மணை வரைக்கும் வந்துவிட்ட கல்யாணத்தை நிறுத்தி விடுவாங்களா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்றாள் கோபமாய். அவர் பிரேமாவையும் அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த உடைகளையும் ஏறயிறங்கப் பார்த்துவிட்டு, 'இரண்டாயிரம் உனக்குக் குறைவாய் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது அதிகம் பெண்ணே
என்றார்.
'நீங்க வரதட்சணை வாங்கறீங்கன்னு போலீசுக்கு ரிப்போர்ட் பண்றேன்" என்றாள் ரோஷத்தோடு.
'குழந்தாய்! நீ யாருன்னு தெரியலை. அனாவசியமாய்