Yuga Santhi
By Jayakanthan
()
About this ebook
இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் 1960 டிசம்பர் முதல் 1963 ஜூலை வரை வெளி வந்தவையாகும். மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கும்போது பல கதைகள் சுகம் தந்தாலும் வடிவத்திலும் வளமையிலும் 'இன்னும் செப்பம் தேவை, தேவை' என்று என்னை நோக்கிக் கெஞ்சும் குறைகள் மிகுந்த படைப்புக்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. என் கைகளும் அவற்றுக்குப் புதுமை அணி செய்யப் பரபரக்கின்றன...
'வேண்டாம், அவை எப்படிப் பிறந்தனவோ அப்படியே இருக்கட்டும். அந்தக் குறைகளே அவற்றுக்கு அழகு தருவன; நிறைவு தருவன' என்று எண்ணி அதிகம் கை வைக்காமல் விட்டு விட்டேன். அழகு என்றால் என்ன, நிறைவு என்றால் என்ன என்று எவரோடும் விவாதிக்க நான் தயாராயில்லை.
இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (Life) என்பது வாழ்வின் (Existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை. கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள், எனது கதைகள் பொதுவாக பிரச்னைகளின் பிரச்னை.
பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் - மனித குலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?
'நான்' என்னுடைய பிரச்னை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் அது என் அறியாமைக்கு எடுத்துக்காட்டு. 'நான்' என்பது 'நீ' மட்டுமல்ல. நீ என்றும், அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இதுவென்றும் குறிக்கும் எல்லாமே ஒரு 'நான்' தான். எனது செயல் யாவும் எனது ஆத்ம திருப்திக்கு மட்டுமே என்று சொல்லிக் கொண்டால் அது ஓர் ஆத்ம துரோகம். ஏனெனில் ஆத்ம திருப்தி என்பது சுயதிருப்தி அல்ல. ஆன்ம வாதம் பேச விருப்பமுள்ளவர்களை நான் இங்கு ஒரு சம்வாதத்திற்கு அழைக்கிறேன். முதலில் ‘எனக்கு' 'உனக்கு' என்பதைக் கைவிடுங்கள் - இந்த விஷயத்திலாவது...
ஆத்ம திருப்தி என்பது தனியொருவனின் இச்சாபூர்த்தியா?
அது சரி, ஆத்மாவது தான் என்ன?
ஒருவனைத் தாக்கினால் அவனுக்குத் துன்பம் நேரும் என்று அறிவது - என் அறிவு.
அவனைத் தாக்கினால் அவன் துன்புறுவான்; ஆகையால் அவனைத் தாக்கலாகாது என்பது - என் ஆத்மா.
அவனைத் தாக்கினால் அவன் துன்பமடைவான்; இதை நான் சகிக்க முடியாது; அவனை நான் காப்பாற்றுவேன் என்று ஓடி அவனுக்காக நான் துன்புறுவது - என் ஆத்ம பலத்தால்.
ஆம்; ஆத்மா என்பதே என்னிலிருந்து விடுபட்டு எனக்கப்பால் நோக்கும் திருஷ்டி; தன்னலம் மறுத்துப் பிறர்நலம் பேணல்! 'என்னுடையது; எனக்காக' 'எனது திருப்திக்காக' 'நான்', 'நான்' என்று அடித்துக்கொள்ளும் சுய காதல் மிகுந்தோர் ஆத்மவாதம் பேச வந்தது ஒரு விந்தை. அத்தகு போலி ஆன்மீகவாதிகளின் மாய்மாலப் பேச்சு பெருகியதனால் தான் பாரத சமுதாயத்தின் வேதாந்த பீடமும், ஆத்ம துவஜமும் கறைபடலாயின. வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடுகின்ற அருள் உள்ளம் தான் கலையின் ஆத்மா.
தன்னிலிருந்து வெளிவரவே பக்குவம் பெறாத 'கூட்டுப் புழு’க்களின் குண வக்கிரங்கள் வாழ்க்கையின் சிறப்புக்களோ இலக்கிய நோக்கமோ, கலையின் ஆத்மாவோ ஆகமாட்டா!
இந்தக் கதைகள் என் திருப்திக்காக மட்டும் எழுதப் பட்டவையல்ல. இவற்றை நான் எழுதினேன் என்பதனால், இவை எனக்கு மட்டும் சொந்தமல்ல. இவற்றைப் பொது நோக்கில் எழுதுவதன் மூலம் நான் திருப்தியுற்றேன். அந்த நோக்கம் நிறைவேறக் குறைபடும் போதெல்லாம் அதிருப்தியும் துயரமும் அடைந்தேன். இவை எனக்கும் உங்களுக்கும் என்று சொல்லுவதைவிட நீங்களும் நானும் இல்லாமல் போகும் நமது எதிர்காலத்துக்குச் சொந்தமாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதன் மூலமே நான் திருப்தியடைய முடியும்.
சரி, இவர்கள் கிடக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சொல்வேன்:
என் கதைகள் இருந்து பொழுதைக் கழிக்கவும், உயர் சுமந்து நாட்களைப் போக்கவுமான (Philistine) பொழுது போக்கு இலக்கியம் அல்ல; பொழுதைப் போக்குவதற்காக மட்டும் இவற்றைப் படிக்க வேண்டாமென்று அன்புடன் உங்களை வேண்டிக் கொள்கிறேன். மேலே சொன்ன எனது நோக்கம் எந்த அளவு இந்தக் கதைகளில் நிறைவேறியிருக்கிறதோ அந்த அளவு எனது முத்திரைகள் இந்தக் கதைகளில் விரவி விழுந்திருக்கின்றன என்று கொள்ளலாம்.
- ஜெயகாந்தன்
Read more from Jayakanthan
Sila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5Innum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Yaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Vazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Oru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Unnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Cinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Pagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsAyudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsSundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsPugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsIthaya Ranigalum Ispedu Rajakkalum Rating: 3 out of 5 stars3/5Kathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yuga Santhi
Related ebooks
Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsSuya Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Unmai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsPuthra Rating: 0 out of 5 stars0 ratingsParisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Karunaiyinal Alla Rating: 0 out of 5 stars0 ratingsIthaya Ranigalum Ispedu Rajakkalum Rating: 3 out of 5 stars3/5Marupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsMurintha Ambugal Rating: 0 out of 5 stars0 ratingsIntha Sippikkul Rating: 5 out of 5 stars5/5Kaattrum Kathitavanum Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Irandha Kaalangal Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsNee Nadhi Pola Odikondiru... Rating: 4 out of 5 stars4/5Brahmopadesam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yuga Santhi
0 ratings0 reviews
Book preview
Yuga Santhi - Jayakanthan
http://www.pustaka.co.in
யுக சந்தி
Yuga Santhi
Author:
ஜெயகாந்தன்
Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
யுக சந்தி
அடல்ட்ஸ் ஒன்லி
மூங்கில்
'லவ் பண்ணுங்கோ ஸார்'
கருங்காலி
தர்க்கத்திற்கு அப்பால்...
ஒரே நண்பன்
தரக் குறைவு
முன் நிலவும் பின் பனியும்
இல்லாதது எது?
நான் இருக்கிறேன்
பூ உதிரும்
உடன்கட்டை
கற்பு நிலை
மெளனம் ஒரு பாஷை
கிழக்கும் மேற்கும்
முன்னுரை
இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் 1960 டிசம்பர் முதல் 1963 ஜூலை வரை வெளி வந்தவையாகும். மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கும்போது பல கதைகள் சுகம் தந்தாலும் வடிவத்திலும் வளமையிலும் 'இன்னும் செப்பம் தேவை, தேவை' என்று என்னை நோக்கிக் கெஞ்சும் குறைகள் மிகுந்த படைப்புக்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. என் கைகளும் அவற்றுக்குப் புதுமை அணி செய்யப் பரபரக்கின்றன...
'வேண்டாம், அவை எப்படிப் பிறந்தனவோ அப்படியே இருக்கட்டும். அந்தக் குறைகளே அவற்றுக்கு அழகு தருவன; நிறைவு தருவன' என்று எண்ணி அதிகம் கை வைக்காமல் விட்டு விட்டேன். அழகு என்றால் என்ன, நிறைவு என்றால் என்ன என்று எவரோடும் விவாதிக்க நான் தயாராயில்லை.
இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன்.
ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (Life) என்பது வாழ்வின் (Existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை. கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள், எனது கதைகள் பொதுவாக பிரச்னைகளின் பிரச்னை.
பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் - மனித குலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?
குறிப்பிட்ட, என் பிரச்னை உன் பிரச்னை என்றால் அதற்குத் தீர்வு உண்டு. ஒரு குறிப்புக்கு உட்பட்ட 'நீ'யும் 'நானு’ம் தீர்ந்தும் போகிறோம்.
ஆனால் கதையில் வரும் கம்பனின் கும்பகர்ணனும் வியாசனின் கண்ணனும், ஷேக்ஸ்பியரின் ஷைலக்கும், தாஸ்தாவெஸ்கியின் ராஸ்கோலினிகாவும், டால்ஸ்டாயின் அன்னாவும், டென்னஸி வில்லியம்ஸின் ஆன்மாவும் தனித்த உருவங்களாயின் அவர்களின் பிரச்னை தீர்ந்தே போயிருக்கும் அந்தக் கதைகளோடு ஆனால் அவ்விதம் தீராது போன காரணம் தான் என்ன? அவர்கள் குறிப்பாக ஒரு உருவம் தாங்கிய போதிலும் பொதுவான மனித குலத்தின் நிலையான உணர்ச்சிகளின் பிரதிநிதிகள் என்பதாலேயே பிரச்னைகளின் முடிவாகக் கதையில் நிறைந்தும், பிரச்னைகளின் ஆரம்பமாக வாழ்க்கையில் முளைத்த வண்ணமுமிருக்கிறார்கள். முடிவா? யாருக்கு வேண்டும்...?
'நான்' என்னுடைய பிரச்னை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் அது என் அறியாமைக்கு எடுத்துக்காட்டு. 'நான்' என்பது 'நீ' மட்டுமல்ல. நீ என்றும், அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இதுவென்றும் குறிக்கும் எல்லாமே ஒரு 'நான்' தான். எனது செயல் யாவும் எனது ஆத்ம திருப்திக்கு மட்டுமே என்று சொல்லிக் கொண்டால் அது ஓர் ஆத்ம துரோகம். ஏனெனில் ஆத்ம திருப்தி என்பது சுயதிருப்தி அல்ல.
ஆன்ம வாதம் பேச விருப்பமுள்ளவர்களை நான் இங்கு ஒரு சம்வாதத்திற்கு அழைக்கிறேன். முதலில் ‘எனக்கு' 'உனக்கு' என்பதைக் கைவிடுங்கள் - இந்த விஷயத்திலாவது...
ஆத்ம திருப்தி என்பது தனியொருவனின் இச்சாபூர்த்தியா?
திருடனின் ஆத்மா கொள்ளையடிப்பதில் திருப்தியுறும். தெருப் பொறுக்கியின் ஆத்மா எச்சில் இலையில் திருப்தியுறும். எத்தனின் ஆத்மா புகழும் பணமும் பெறுவதில் திருப்தியுறும். இவை யாவும் ஆத்ம திருப்தியாகுமா? - அதே போழ்தில் இவர்களுக்கு ஆத்மா இல்லையென்று சொல்லிவிடலாகுமா?
திருடன் கொள்ளையடிப்பதில் சலிப்புற்று, அதில் ஈட்டிய செல்வங்களையெல்லாம் தூசெனத் துறந்து நிம்மதிக்காக அலைகிறானே, அங்கேதான் ஆத்மாவின் சொரூபத்தை உணர்ந்து நாம் மெய் சிலிர்க்கிறோம். தன் பெருமையைத் தானுணர்ந்து பொறுக்கி தலை நிமிர்வானாகில் பட்டினியிலும் வறுமையிலும் நிலைத்த அவனது செம்மையே ஆத்ம முரசம் கொட்டுவதை நாம் கேட்கிறோம். எத்தனும், எத்திப் பிழைத்து என்ன சுகம் கண்டேன் என்று எதுவரினும் அதை உதறி, சத்தியத்தை வணங்கும்போது அங்கே அவனிடம் ஆத்மா சன்னதம் கொள்வதைக் காண்கிறோம்.
இவ்விதம் காணும் பண்பு, பக்குவம் வந்தால் மட்டுமே நம் ஆத்மா நம்மிடம் மாசடையாது வாழ்கிறது என்று நாம் நம்புவது சரியாகும்.
அது சரி, ஆத்மாவது தான் என்ன?
ஒருவனைத் தாக்கினால் அவனுக்குத் துன்பம் நேரும் என்று அறிவது - என் அறிவு.
அவனைத் தாக்கினால் அவன் துன்புறுவான்; ஆகையால் அவனைத் தாக்கலாகாது என்பது - என் ஆத்மா.
அவனைத் தாக்கினால் அவன் துன்பமடைவான்; இதை நான் சகிக்க முடியாது; அவனை நான் காப்பாற்றுவேன் என்று ஓடி அவனுக்காக நான் துன்புறுவது - என் ஆத்ம பலத்தால்.
ஆம்; ஆத்மா என்பதே என்னிலிருந்து விடுபட்டு எனக்கப்பால் நோக்கும் திருஷ்டி; தன்னலம் மறுத்துப் பிறர்நலம் பேணல்!
'என்னுடையது; எனக்காக' 'எனது திருப்திக்காக' 'நான்', 'நான்' என்று அடித்துக்கொள்ளும் சுய காதல் மிகுந்தோர் ஆத்மவாதம் பேச வந்தது ஒரு விந்தை. அத்தகு போலி ஆன்மீகவாதிகளின் மாய்மாலப் பேச்சு பெருகியதனால் தான் பாரத சமுதாயத்தின் வேதாந்த பீடமும், ஆத்ம துவஜமும் கறைபடலாயின.
வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடுகின்ற அருள் உள்ளம் தான் கலையின் ஆத்மா.
தன்னிலிருந்து வெளிவரவே பக்குவம் பெறாத 'கூட்டுப் புழு’க்களின் குண வக்கிரங்கள் வாழ்க்கையின் சிறப்புக்களோ இலக்கிய நோக்கமோ, கலையின் ஆத்மாவோ ஆகமாட்டா!
இந்தக் கதைகள் என் திருப்திக்காக மட்டும் எழுதப் பட்டவையல்ல. இவற்றை நான் எழுதினேன் என்பதனால், இவை எனக்கு மட்டும் சொந்தமல்ல. இவற்றைப் பொது நோக்கில் எழுதுவதன் மூலம் நான் திருப்தியுற்றேன். அந்த நோக்கம் நிறைவேறக் குறைபடும் போதெல்லாம் அதிருப்தியும் துயரமும் அடைந்தேன். இவை எனக்கும் உங்களுக்கும் என்று சொல்லுவதைவிட நீங்களும் நானும் இல்லாமல் போகும் நமது எதிர்காலத்துக்குச் சொந்தமாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதன் மூலமே நான் திருப்தியடைய முடியும்.
மற்றபடி எனக்குச் சொற்களின் மீதோ, என் மீதோ அதீதக் காதல் ஏதும் இல்லை என்பதால் இதே கருத்தைப் பன்னிப்பன்னிப் பேசுவதில் நான் சலிப்புறுகிறேன். எனக்குக் காதல் வாழ்க்கையின் மீதுதான்; பிரச்னைகளின் மீதுதான்; அதன் விளைவே பிரச்னைகளின் பிரச்னைகளான இந்தக் கதைகள்.
இந்தச் சமயத்தில் மற்றொரு விவகாரம் எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு வகை மலட்டு 'அவசர' வாதிகள் - நேற்றுவரை என்னைச் 'சிறுகதை மன்னன்' என்று அசிங்கமாகப் புகழ்ந்தவர்கள் - இன்று தங்கள் வக்கிரப் பார்வையில், என்னை அளக்க வந்து என்னென்னவோ 'அளக்கி’றார்கள்.
இந்த வக்கிரங்கள் 'வர்க்க இலக்கியம்' பேசுகின்றன. இவர்களின் விவகாரத்தில் மனச்சாட்சிக்கே இடமில்லை என்பதை நானறிவேன். மனச்சாட்சி இருந்தால் சிந்திக்கட்டும் என்றே இந்த இடத்தை அவர்களுக்காக விரயம் செய்கிறேன்.
டால்ஸ்டாய் எழுதியவை அனைத்தும் வர்க்க இலக்கியங்கள் தாமோ?
அவற்றை ஏன் லெனின் மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்தெறியவில்லை என்று இவர்கள் சற்று யோசிக்கட்டும்!
அந்தக் காலத்து ருஷ்யச் சமுதாயக் கொடுமைகளில் கூட ஒரு பயங்கரப் புரட்சிக்கே வித்திட்ட சமுதாயக் கொடுமைகளில் கூட, அந்த மகா புருஷன் லெனின் தன் ஆத்மாவை இழந்து விடவில்லை என்ற காரணத்தை வளர்ச்சியுற்ற காலத்தில், வளர்ச்சியுற்ற பாரதத்தில் பிறந்த, ஆத்மாவை விற்றுவிட்ட - இவர்கள் அறிய முடியாது போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
சரி, இவர்கள் கிடக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சொல்வேன்:
என் கதைகள் இருந்து பொழுதைக் கழிக்கவும், உயர் சுமந்து நாட்களைப் போக்கவுமான (Philistine) பொழுது போக்கு இலக்கியம் அல்ல; பொழுதைப் போக்குவதற்காக மட்டும் இவற்றைப் படிக்க வேண்டாமென்று அன்புடன் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
மேலே சொன்ன எனது நோக்கம் எந்த அளவு இந்தக் கதைகளில் நிறைவேறியிருக்கிறதோ அந்த அளவு எனது முத்திரைகள் இந்தக் கதைகளில் விரவி விழுந்திருக்கின்றன என்று கொள்ளலாம்.
சென்னை -8
11-10-63
ஜெயகாந்தன்
*****
யுக சந்தி
கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.
பாட்டி... பாட்டி! பையைத் தூக்கியாரட்டா? ஒரணா குடு பாட்டி.
வண்டி வேணுங்களா அம்மா?
புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே... வாங்க, போவோம்
என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:
எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா... சித்தே வழியை விட்டேன்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒரு தடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?
என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தான் பாட்டி.
பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்.'
அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பறந்து பறந்து ஓடுகிறார்கள்.
மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.
அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வறண்ட பாலையாய் மாறிப்போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன?
தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.
வழியில் சாலையோரத்தில், நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங் குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.
அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.
எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில், சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும், காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.
என்னப்பனே மகாதேவா!
என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.
பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைகளை குடி கொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே! அவள் மோவாயின் வலது புறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்: அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி - இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இள வயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.
பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்தது; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும் - மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும் - வெள்ளி முடி கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் சுலைந்த விபூதிப்பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக்குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வெளித் தெரிந்தது.
- மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடில நதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது...
பாலத்தின் மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று, கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய - நாவிதன்
பாட்டிம்மா... எங்கே, நெய்வேலியிலிருந்தா?
என்று அன்புடன் விசாரித்தான்.
யாரு வேலாயுதமா...? ஆமா...! உன் பொண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?
என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.
ஆச்சுங்க... ஆம்பளைப் பையன் தான்.
நல்லாயிருக்கட்டும்... பகவான் செயல்! இது மூணாது பையனாக?
ஆமாமுங்க
என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்.
நீ அதிர்ஷ்டக்காரன்தான்... எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?
என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.
அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும்தான் இப்படிப் பொட்டி துாக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே... ம், எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்... என்ன, நான் சொல்றது?
என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.
இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்ட போ
என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.
பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்
என்று அவன் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, தன்னை அவள் கடக்கும் வரை நின்று, பின்னர் தன் வழியே நடந்தான்.
சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கெளரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலுாரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.
எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்த மகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்து விட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக்கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கெளரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தனது அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக்கொண்டாள். அதுவரை கீதாவின் மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி - கணவனை இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய் - அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.
கெளரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதியெனத் தன்னையே அவளில் கண்டாள்.
பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை – அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர். அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மாப் பிள்ளை’தான்.
விதவையாகி விட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கெளரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.
- பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்.
பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம் - புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய - நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.
அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு
என்று, பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக் கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைபட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.
இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர சனி ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.
இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும். அது வாடிக்கை.
ஒரு மைலுக்குக் குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிகையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தான் மருமகள் பார்வதி அம்மாள். கசும்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.
பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக வாசப்படுத்த வேண்டியிருந்தது, அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத் திறந்து முகம் விகஸித்தாள்.
கதவெத் தெறடி
என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா!
என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.
கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.
கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே!
என்று குழந்தையை வைதுவிட்டு வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேன். ஒரு வண்டி வெச்சுக்கப் படாதோ?
என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.
இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்...
என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக் கண்டதும் நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா... பார்வதி! அம்மாவுக்கு மோர் கொண்டுவந்து கொடு
என்று உபசரித்தவாறே ஈஸி சேரிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.
பாவம். அசந்து தூங்கிண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திரேன்...
என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே சிடந்த ஸ்டூல் மீது பையை வைத்துவிட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தெளித்துக் கொண்டாள் பாட்டி. பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து என்னப்பனே... மகாதேவா
என்று திருநீற்றையணிந்து கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸி சேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.
பாட்டி வெயில்லே வந்திருக்கா... சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு...
என்று விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.
இருக்கட்டும்டா... கொழந்தை! நீ உக்காந்துக்கோடி
என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.
‘இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.
ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையைக் கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்றுத் தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.
ஆமா, மீனாவும் அம்பியும் எங்கே காணோம்?
என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு இதெ உன்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா
என்று கவரை நீட்டினாள் பாட்டி.
இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் - எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலேருந்து உசிரை வாங்கித்து