உமையொரு பாகனாக நின்ற பெருமான் குருநாதர் வடிவில் வந்து அனைத்தையும் கடந்து
நின்ற அடியார் நடுவில் என்னையும், இருத்தினான்.அவருடன் இருப்பதற்கு இடையூறாக நின்ற என் குற்றங்களைத் தன் அருட்பார்வையாள் போக்கினான். அப்படி ஆட்கொண்ட நிலையில், தொடர்ந்து வருகின்ற என் பிறவித் தொடரில் இருந்த சஞ்சித, பிராரத்துவ வினைகளையும், இப்பிறவியில் நான் செய்யும் செயல்களுக்குப் பயனாக வரும் ஆகாமிய வினையையும் போக்கினான். அதன் பயனாக என்னுடைய பிறப்பையும் அறுத்தான். சஞ்சித வினையை வைப்புத் தொகை போல் வைத்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நடைமுறை கணக்குப்போல இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்க்காகக் கொண்டு வருவதை பிராரத்துவம் என்பர். இந்த பிரார்துவ வினையை அனுபவித்துக் கொண்டே வாழ்க்கை நகர்கிறது. இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப, ஆகாமிய வினை பரிணமிக்கின்றது. இந்த ஆகாமிய வினை, ஒரு பிறப்பில் அன்றாடம் விரிவடையக்கூடிய ஒன்றாகும். ஏனென்றால் இப்பிறப்பில் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும், சில பல செயல்களைச் செய்ய வேண்டியிருத்தலின், அதன் பயனாக விளையும் ஆகாமிய வினை நாள்தோறும் வளர்ந்துக் கொண்டே இருக்கும். இதன் வளர்ச்சிதான் நமது அடுத்த பிறப்பின் வித்து. எனவே ஆகாமிய வினையை களைந்தாலொழியப் பிறப்பு அறுபட வாய்ப்பு இல்லவே இல்லை என்கிறது சைவ சித்தாந்தம்.
பொழிப்புரை :
அரும்பு போன்ற அணிகளோடு கூடிய முலைகளையுடைய பெண்களே! மங்கை தங்கு
பங்கையுடையவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடையையுடையவனும், தன்னடியார்களுள்ளே நாய் போன்ற என்னைச் சீராட்டி அடிமை கொண்டு என் முற்பிறப்பில் உண்டாகிய வினை மேலெழுந்து பற்றாதபடி, யான் ஞானத்தோடு விளங்கப் பிறவித் தளையை அறுப்பவனுமாகிய இறைவனது திருச்செவிகளில் ஆடுகின்ற குண்டலங்களைப் பாடி, அன்பால் உருகி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.