மிசாகாலத்தின்போது யாரை எதற்குக் கைது செய்கிறோம் என்று
தெரிவிக்கவேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவியது. அப்படித்தான் நடிகவேள்
எம்.ஆர். ராதாவையும் கைதுசெய்திருந்தார்கள். சிறையிலே நேர்காணலுக்கு உறவினர்கள் வரும்போது பின்னாலிருந்து அதிகாரிகள் குறிப்பெடுப்பது வழக்கம்.
ராதாவின் மனைவி அவரைக் காணவந்திருக்கிறார். " என்ன மாமா, நிறையபேர்
விடுதலையாகி வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே வரலாமே " என்றிருக்கிறார்.
உடனே ராதா, " என்ன எழுதிக்கொடுப்பது? " என்று கேட்டிருக்கிறார்.
" இனிமேல் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுத்தால்
போதுமாமே ? " என்று மனைவியும் பதிலளிக்க,
உடனே ராதா, " இதோ பாரம்மா. என்னையேன் கைது செய்திருக்காங்கன்னு
எனக்கும் தெரியாது. இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியாது. கைதுசெய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான்பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருந்தேன். பிடிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நான் செய்த ஒரே தப்பு அதுதான். அப்ப நான் இனிமே வாழ்நாள் முழுதும் தூங்காமலே இருக்கிறேன் என்று எழுதிக் கொடுக்கணுமா ? '"என்றிருக்கிறார். குறிப்பெடுத்துக்கொண்டிருந்த அதிகாரியும் சிரித்துவிட்டாராம் .