இன்று நான் உங்கள் முன் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு தமிழா! உன் பெருமையை மீட்டெடு.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்று தமிழின் சிறப்பை மிகவும் அழகாக பாரதிதாசன்
எடுத்துரைத்துள்ளார். அத்தகையச் சிறப்பு நிறைந்த தமிழ்மொழி, உலக மொழிகளில் மிகவும் தொன்மையானது என்றால் அது மிகையாகாது. முன்பு தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழர்கள் அதனைப் போற்றிக் கற்று வந்த சூழ்நிலை இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில், தமிழில் பேசுவதற்கே வெட்கப்படும் அவல நிலையில் நாம் நிற்கின்றோம் . இந்நிலை மாற வேண்டும்! தமிழின் மாண்பையும் சிறப்பையும் இன்றைய இளையோர் சமுதாயத்திற்கு உணர்தத ் ி, தமிழ்மொழியின் பெருமையை மீட்டெடுப்போம்.
முன்பு கல்வி கற்ற சமுதாயமாக நம் சமுதாயம் பிற இனத்தவரால் பார்க்கப்பட்டது;
பாராட்டப்பட்டது. மருத்துவம், நீதித்துறை, கல்வித்துறை எனப் பல துறைகளில் நம் இந்திய சமுதாயம் பெயர்பெற்று விளங்கியது. ஆனால், இன்றைய காலத்தில் நம் சமுதாயத்தைப் பிற இனத்தவர்கள் கீழ்நிலையில் பார்க்கும் நிலைமை நிலவுகிறது. இதற்குக் காரணம் குண்டர் கும்பல், கொலை கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீயச் செயல்களில் பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஈடுபடுவதேயாகும். இந்த இழிநிலையிலிருந்து நாம் மீண்டு வந்து, நம் சமுதாயத்தின் பெருமையை நிலைநிறுத்த அனைவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமாகும்.
தமிழர் விளையாட்டுகள் தமிழர்களின் வீரத்தையும், விவேகத்தையும், உடல்
வலிமையையும் அறிவாற்றலையும் பறைசாற்றுவதாகத் திகழ்கின்றன. எனவே, மஞ்சுவிரட்டு, கபடி, சிலம்பம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, தமிழர்களின் பெருமையை மேலோங்கச் செய்த காலம் இருந்தது. இன்றைய நவீன காலத்திலோ, தமிழர் விளையாட்டுகள் நம்மவர்களால் மறக்கப்பட்டு, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டுமாயின், தமிழர் விளையாட்டுகளின் அருமை பெருமைகளை இளைய சமுதாயத்தினருக்கு உணர்த்தி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவற்றைத் தவிர, தமிழர்கள் கலை, பண்பாடு, பாரம்பரியம், வீரம் போன்றவற்றிலும்
சிறந்து விளங்கினர். ஆனால், தற்போதுள்ள நிலையில் நாம் நமது அடையாளத்தை இழந்து தவிக்கிறோம். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கூற்றுக்கு ஏற்ப நமது பெருமைகளை மீடடெ ் டுத்து, தமிழினத்தின் பெருமையை உயர்த்துவோம்!