அடிகளாகிய பெருமானே! நான் வேண்டுவதைச் செவிசாய்த்துக் கேட்டு எனக்கு அருள் புரிய
வேண்டும். அண்டங்கள் பிண்டங்கள் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் இயல் நலங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். நுண்ணிய கால அளவிற்குட்பட்ட எவ்வகை உலகங்களிலும் வாழும் எவ்வகைத் தேவரும் எவ்வகை உயிர்களும் சுத்த சிவ நெறியாகிய சன்மார்க்கத்தைப் பெற்று ஒழுகுதல் வேண்டும். நிலம் முதலாக வானம் ஈறாகவுள்ள எல்லாவற்றையும் படைத்தல், காத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும், ஞானத்தை நல்குதல் பேணுதல் முதலிய ஐந்து தொழில்களையும் நான் செய்தற்கு அருள் புரிய வேண்டும். அழிவில்லாத நின்னுடைய ஞானத் திருவுருவில் நானும் நீயும் ஒன்றாய் எப்பொழுதும் ஓங்குமாறு வேண்டுகிறேன்.
எனக்கு தாயாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை நின்னுடைய
திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன். ஆணவம் முதலிய மலங்கள் மூன்றையும் நீக்கி நினது அருள் நெறியில் நிற்றல் வேண்டும். இந்த மயக்கத்தைத் தரும் இயல்பினவாகிய தத்துவங்கள் எல்லாம் என் வசம் நின்று தத்தமக்குரிய செயல்களைச் செய்து ஒருவகை தீங்கையும் எனக்குச் செய்யாதனவாய் அமைதல் வேண்டும் என்றன் பெருமானே! நான் வேண்டுதல் வேண்டாமை என்ற இரண்டும் இல்லாதவனாதல் வேண்டும். ஒன்றாகிய நினது சிவபோக அனுபவம் எனக்கு உண்டாதலையும் தேவரீருடைய பெருமை பொருந்திய ஞானத் திருவுருவில் எந்தையாகிய நானும் நீயும் ஒன்றாய் கலந்து உயர்ந்த தன்மையைப் பெறுதலும் வேண்டுகிறேன்.
“அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் ...4086”
எனக்கு தந்தையாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை அன்புடன் ஏற்று
அருள் செய்தல் வேண்டும். நாதாந்தம் முதலிய அந்தங்கள் ஆறினுடைய நுட்பங்கள் எல்லாவற்றையும் யான் அறிந்து கைவரப் பெறுதல் வேண்டும். உயிர்கட்கெல்லாம் யான் எல்லாத் துணையுமாகி நன்மையே செய்தல் வேண்டும். என்னை அடுத்தவர்களுக்கெல்லாம் யான் இன்பம் செய்பவனாதல் வேண்டும். இவ்வுலகில் நிலவும் சாதி, சமய வேறுபாடுகளினின்றும் நீஙக ் ி எல்லா உலகத்தும் சமதர்மமாகிய சன்மார்க்கப் பொது நெறி நிலவுதல் வேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் உயர்ந்ததாகிய ஆதி அந்தம் இல்லாத நின்னுடைய சிவஞான உருவில் யானும் உடையவனாகிய நீயும் கலந்து உயர்ந்து ஒளிரும் ஒருமை நிலையையும் பெற வேண்டுகின்றேன்.
“அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும் ...4087”
அறிவுருவாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளைச் செவியேற்று
அருள்புரிய வேண்டுகிறேன். உலகில் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்து உனது திருவருள் ஞானத்தின் பெருமையை உலகவர் அறிய விளக்குதல் வேண்டும். அடங்காது பரந்து விரிந்தோடும் கருவி கரணங்கள் எல்லாவற்றையும் அடக்கி ஆள்பவனாதல் வேண்டும். சித்தாந்தம் தேவாந்தம் என்ற இரண்டிற்கும் பொதுவான ஞான ஒழுக்கம் எங்கும் சிறந்தோங்க வேண்டும். யான் எண்ணுகினறவற்றை எல்லாம் புறக்கணிக்காமல் இனிது எய்த அருள் புரிய வேண்டும். எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தாந்த தன்மையை எனக்குத் தந்தருள வேண்டும். மேலும் நீயும் என்னோடு கலந்து என்னிற் பிரியாமல் இருத்தல் வேண்டும். நானும் இடையறவின்றி நின்னையே அன்புடன் பாடி ஆடுதல் வேண்டும்.
“அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும் ....4088”
அருளுவாகிய பெருமானே! யான் செய்கின்ற வேண்டுகோளைத் திருச்செவியில் ஏற்று எனக்கு
அருள் செய்ய வேண்டுகிறேன். என்னைக் கோபம், காமம், ஆகிய குற்றங்கள் அணுவளவும் வந்து பொருந்துதல் கூடாது. மருட்சி நிறைந்த எல்லா உலகங்களும் அம்மருட்சி நீஙக ் த் தெளிவுற்று அம்பலத்தின்கண் எழுந்தருளும் வள்ளலாகிய உன்னை வாழ்தத ் ி வழிபடல் வேண்டும். அறியாமையாகிய இருள் வந்து என்னைப் பொருந்துதல் கூடாது. அன்பால் அடுத்தவர்கள் சுகம் பெறுதல் வேண்டும். அவர்களோடு எனை எல்லா உயிர்களும் இன்பமடைய வேண்டும். மெய்ப்பொருளாகிய உனது திருவுருவில் என்னை உடையவனாகிய நீயும் நானும் கூடிக் கலந்து ஒன்றி உயர்தலை வேண்டுகிறேன்.
“அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் .... 4089”
தூயவடிவினனாகிய சிவபெருமானே! நான் செய்து கொள்ளும் விண்ணப்பத்தைச் செவி குளிர
ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன். அம்பலத்தில் ஆடுகின்ற உனது சிவந்த திருவடிகளை நான் பாடி பரவ வேண்டும். எமன் முதலியவர்களால் உண்டாகும் சாக்காடு எனும் தடை எனக்கு உண்டாதல் கூடாது. எல்லாவற்றையும் இனிது செய்து முடிக்கக் கூடிய திறமையை எனக்கு நல்க வேண்டுகிறேன். பொறுமை முதலிய நற்பண்புகள் பொருந்தி உயிர்கள் யாவும் சன்மார்க்கத்தை விரும்பி ஏற்று நின்னுடைய திரு விளங்கும் அம்பலத்தை மகிழ்ச்சியுடன் துதிக்க வேண்டும். விமலம் முதலிய உயர் குணங்களையுடைய உனது திருவருள் ஞான வடிவில் யானும் விமலனாகிய நீயும் கலந்து ஒன்றி விளங்குதலை வேண்டுகிறேன்.