தந்தை துவஷ்ட ப்ரஜாபதியின் அனுபவமிக்க ஆலோசனையை அலக்ஷியம் செய்த விருத்திராஸுரன், முன் எப்போதையும் விட இந்திரனின் மீது அலாதி ப்ரியம் வைக்கலானான். இதைத்தான் பெரியோர்கள் ‘விநாசகாலே விபரீத புத்தி’யென்று சொல்லி வைத்தார்கள். அப்படி விருத்திராஸுரனுக்கு மரணம் சம்பவிக்க வேண்டிய காலம் நெருங்குகிறதாகையால், அவனுடைய புத்தியும் இந்திரன்மேல் நம்பிக்கை கொண்டது. இப்படியாகக் காலமானது கழிந்து கொண்டிருந்த சமயத்தில், இந்திரன் மனதில் மட்டும் விருத்திரனைப் பழிதீர்க்கும் எண்ணமானது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. அப்படி ஓர் நாளின் சந்த்யாகாலத்தில் சமுத்திரக் கரையில் விருத்திராஸுரன் ஏகாந்தமாக இருப்பதைக் கண்டான். அவன் மனதில் ‘ஆஹா! இதுவல்லவோ நல்ல சமயம். இது பகலுமில்லை; இரவுமில்லை. பகலும் இரவும் சந்திக்கின்ற சந்த்யாகாலம். இந்தக் காலத்தைக் குறித்து விருத்திரன் தன்னுடைய வரத்தில் ப்ரம்மதேவரிடத்தில் கேட்கவில்லை. இதுதான் இவனைக் கொல்லச் சரியான தருணம்’ என நினைத்தவனாக விஷ்ணுமூர்த்தியை மனதில் த்யானித்தான். விஷ்ணுவும் இந்திரன் முன்னே ப்ரசன்னமானார். இந்திரன் தன் திட்டத்தை சொல்ல உடனே விஷ்ணுவானவர் இந்திரனுடைய வஜ்ராயுதத்தில் யாருக்கும் தெரியாமல் ப்ரவேசம் செய்தார். இந்திரனுடைய மனம், ‘காலநேரமும் சாதக மாக இருக்கிறது. கையிலுள்ள வஜ்ராயுதமும் விஷ்ணுவின் மகாசக்தியால் வலிமை பெற்றிருக்கிறது. இவனை வஞ்சனையால் கொல்வதற்கு அம்பிகை ஏதாவது ஒரு மார்க்கத்தைக் காட்டினால் நாம் அவனைத் தீரத ் ்துக் கட்டலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் சமுத்திரத்தில் திடீரென்று பெரிய மலையளவுக்கு வெண்மையான நுரையானது பொங்கிப் பெருகிக் கரையை நோக்கி வந்தது. இந்திரன் இது தெய்வகதியால் நிகழ்ந்ததென சந்தோஷித்து, அம்பிகையை பயபக்தியுடன் த்யானித்தபடி அந்த நுரையைக் கைகளில் ஏந்தினான். இந்திரனுடைய த்யானத்துக்குக் கட்டுப்பட்டு தேவியானவள் தன் சக்தியைச் சிறிது அவானுடைய கைகளிலுள்ள நுரையில் கலக்கச் செய்தாள்! கடலில் நுரை பொங்கிவரக் காரணமென்ன? விருத்திரன் ஈரமான, உலர்ந்த வஸ்துக்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாதென வரம் பெற்றிருந்தான். ஆகையால்தான் தேவி அழகான வெந்நிற நுரையைப் பொங்கச் செய்தாள். அதில் தன் சக்தியையும் கலந்து வைத்தாள். இந்திரன் தேவியை த்யானித்து அந்த நுரையை வஜ்ராயுதத்தின் மீது தடவி, பின் வஜ்ராயுதத்தை, சமுத்திரக் கரையில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விருத்திரனின் மீது ஆக்ரோஷமாக வெறிகொண்டு வீசி எறிந்தான். விஷ்ணுவின் சக்தியும், தேவி யின் சக்தியும் கலந்து வலிமை கொண்டிருந்த வஜ்ராயுதம் விருத்திரனைத் தாக்கியதும், அவன் பெரிய மலையொன்று பூமியில் சரிவதைப் போல கீழே விழுந்து மாண்டான். விருத்திராஸுரனுடைய மரணம் தேவாதி தேவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. அனைவரும் இது ‘அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகியான அந்த அம்பிகையின் பரம் அனுக்ரஹத்தால் தான் சாத்தியமானது’ என ஏகோபித்த குரலில் சொல்லி, பலவிதமாகத் தேவியைக் கொண்டாடினார்கள். பிறகு தேவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுத்து அந்த இடத்தில் ஒரு நந்தவனத்துடன் கூடிய ஆலயத்தை அம்பிகைக்காக அமைத்து, மரகதத்தாலான தேவியின் சிலா ரூபத்தை ப்ரதிஷ்டை செய்து, ரத்னகரமான ப்ரகாரங்களைச் சுற்றிலும் அமைத்து பூஜித்து வரலாயினர். அன்று முதல் தேவியே தேவர்களுக்குக் குலதெய்வமாக ஆயினள். தங்களுக்கு எப்போதும் சகாயம் செய்யும் விஷ்ணுவையும் தேவர்கள் பூஜித்து வந்தார்கள். காற்று அன்றைய தினம் ஹிதமாக வீசிற்று. யக்ஷ, கந்தர்வ, கின்னரர்களெல் லாம் அங்கு வந்திருந்து விருத்திராஸுரனின் வதத்தைக் கண்டு, ‘விருத்திரன் வதம் என்பது தேவி விருத்திரனை இந்திரனிடம் மோஹிக்கச் செய்ததாலும், பின் நுரையில் தன் சக்தியைக் கலந்ததாலும்தான் சாத்தியமானதே தவிர, இந்திரனுடைய சக்தியால் விருத்திரன் கொல்லப்படவில்லை’ என்றனர். அன்று முதல் எல்லா உலகத்துக்கும் கொடுங்கோலனாகக் காட்சியளித்த விருத்திராஸுரன் மரணிப்பதற்குத் துணையாக இருந்தவள் என்பதால் தேவ தேவியை, “விருத்திர நிஹந்திரீ” என்றும், தேவியின் துணையைக் கொண்டு விருத்திரனைக் கொன்றவன் இந்திரனாகையால், அவனை “விருத்திர ஹதன்” என்றும் தேவர்கள் ஸ்தோத்திரம் செய்து மகிழ்ந்தனர். விருத்திராஸுரனைக் கொன்றபின் விஷ்ணு வைகுந்தம் சென்று சேர்நத் ார். தேவர்களும் இந்திரன் சஹிதமாகத் தங்களுடைய இந்திரப் பட்டணத்தை அடைந்து கூத்தாடினர். இந்திரன் ‘மஹா மாயாவான தேவியின் அனுக்ரஹத்தால் விருத்திரனைக் கொன்றோம் என்றாலும், அவன் என்மேல் எவ்வளவு ப்ரியம் வைத்திருந்தான்! இப்படி நம்பியிருந்தவனைக் கொன்றோமே! நமக்கு என்ன பாபம் நேருமோ!’ என்று துக்கத்தை அடைந்தவனாக நிம்மதியின்றித் தவித்தான். விருத்திரனை இந்திரனிடம் நட்பாக இருக்கத் தூதுபோன ரிஷிகளெல்லாம், ‘நாம் ரிஷிகள்! சமநோக்குடையவர்களாக இருப்பவர்கள்! ஆனால், இந்திரனது கபடத்துக்கு நாமும் துணையாக இருந்தோமே; நம் சொல்லைக் கேட்டல்லவா அவன் இந்திரனிடம் சகாயம் வைத்தான்! பாவத் தொழிலுக்கு ஆலோசனை செய்கிறவன், உபாயம் சொல்பவன், அதற்குத் தூண்டுகிறவன் என இவர்கள் பக்கத்தில் சிநேகமாக இருப்பவனுக்கும் அந்தப் பாவம் வந்து சேருகின்றது! இது நிச்சயம்! விஷ்ணு சத்வகுண சம்பன்னராக இருப்பினும் வஞ்சக நெஞ்சம் கொண்ட இந்திரனுக்கு உபாயமும், சகாயமும் செய்தார். ஆனால்,ம் அவரும் தனது ப்ரயோஜனத்தில் ஆசையுள்ளவராக இருப்பவர்தான்! இப்படி தத்தமது ப்ரயோஜனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பிறருக்குச் செய்யும் தீமையால் உண்டாகும் பாபங்களுக்கு அஞ்ச மாட்டார். இப்படி, தன்னுடைய ப்ரயோஜனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷ்ணுவின் துணையால் இந்திரனும் பாபம் மேல் பாபங்களாகச் செய்து வருகின்றான்’ என்று எண்ணி துக்கத்தை அடைந்தார்கள். மகன் விருத்திரன் கொல்லப்பட்ட செய்தி கேட்ட துவஷ்டா மயங்கி விழுந்தார். நெடுநேரம் அவர் மூர்ச்சை தெளியவில்லை.