Professional Documents
Culture Documents
வெங்கடபதி ரெட்டியார்
வெங்கடபதி ரெட்டியார்
பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ‘‘பத்ம விருது வாங்கின
முதல் விவசாயியின் ஊர்ங்கிறதைத் தாண்டி எங்களுக்கு இதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு; எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது’’
என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ‘பத்மஸ்ரீ’ வெங்கடபதி ரெட்டியார் பூரிப்பில் இருக்கிறார். ‘‘தோட்டத்துக்குப் போலாமா?’’ என்று ‘ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை
அழைத்துச் செல்கிறார். ‘‘அம்பாஸிடரும் கிடக்கு. ஆனா, இந்தக் காலத்துக்கு இதுதான் சொகம். என்ன சொல்றீங்க?’’ என்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் மகள்
ஸ்ரீலஷ்மியைப் பார்த்து ‘‘ஏம்மா, படம் எல்லாம் மெயில் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிச்சிட்டியா?’’ என்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய
புதிய ரகக் கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பி வழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல
மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்கு காய்த்து தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான்
படித்திருக்கிறார். ஆனால், வாயைத் திறந்தால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசாம்கள், மரபிணி மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.
‘‘அயல் மகரந்தச் சேர்க்கை, மரபிணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கத்துக்கிட்டீங்க?’’
‘‘அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, கேள்வி ஞானம் ஜாஸ்தி. ஒரு விஷயம் தோணிடிச்சுன்னா, அதை யார்க்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட
போய்டுவேன். பெரிய மனுஷங்களைப் பார்க்கப்போகும்போது வெறுங்கையோட போக மாட்டேன். கையில் டேப் ரிக்கார்டரை எடுத்துக்கிட்டுப் போயிடுவேன்.
அவங்க சொல்ற வழிமுறைகளைப் பதிவு பண்ணிக்கிட்டு வந்து ஒரு தடவைக்கு பத்து தடவை போட்டு கேட்டு, தெரியாததைத் தெரிஞ்சவங்கக்கிட்ட கேட்டு
ஒவ்வொண்ணாப் புரிஞ்சுக்குவேன். உயர் ரக மலர் உற்பத்தியோட அடுத்தகட்டத்துக்குப் போகணும்னா அதுக்குத் தொழில்நுட்ப அறிவு அவசியம்னு புரிஞ்சுச்சு.
ஜெர்மனிக்காரர்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப ஜெர்மானிய அமைச்சர் ஒருத்தர் நம்ம நாட்டுக்கு வந்திருந்தார். ‘இந்தியாவுக்கு வேண்டிய
ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு அவர் பேசியிருந்ததைப் பத்திரிகையில படிச்சேன். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்குற
தொழில்நுட்பம் என்னன்னு எனக்கு உதவுணும்னு கேட்டேன். அவரு அந்தக் கடித்தத்தைப் படிச்சுட்டு ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு
உருவாக்கிக்கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.
ஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக
இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யாவைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில்
விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம்பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு
ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு ‘அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான்
பூக்கும். அதுவும் பத்து மணி நேரம்கூட தாங்காது. ஆனா, ‘அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும்.
இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம்
200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.’’
‘‘சரி, இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று
நினைக்கிறீர்கள்?’’
''இந்திய விவசாயிகளோட பெரிய எதிரி அறியாமைதான். முதல்ல அதைத் துடைக்கணும். எல்லாத் தொழிலேயும் இருக்குறவங்க எவ்வளவோ கத்துக்குறாங்கள்ல,
விவசாயிகளுக்கும் அது பொருந்துமா இல்லையா? ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோம்ல, ஆனா நவீன
விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவசாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா? அவன் சொட்டுநீர்ப்
பாசனம் செய்யுறான். நம்ம விடுற தண்ணியில நூத்துல ஒரு பங்கு தண்ணியில் நம்ம போடுற ரசாயன உரத்துல பத்துல ஒரு பங்கு உரத்தைக் கலந்து சொட்டுசொட்டா
தண்ணீ பாச்சுறான். எனக்குத் தெரிஞ்சு உலகத்துல தண்ணியை இவ்வளவு மோசமா எந்த நாட்டு விவசாயியும் பயன்படுத்தலை. தண்ணீ கூடுதலா இருக்குறதாலதான்
விஞ்ஞானம் இங்கே வேலை செய்ய மாட்டேங்குதுனு நெனைக்கிறேன். தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும். தொழில்நுட்பத்தைக்
கத்துக்கணும். விஞ்ஞானத்தை மிஞ்சினது எதுவும் இல்லைங்கிறதை உணரணும்.’’
‘‘நவீன விவசாயத்தின் தேவையை இப்படி உரக்கப் பேசுவதால்தான் அரசாங்கம் உங்களுக்கு பத்மஸ்ரீ அளித்து இருக்கிறதா?’’
‘‘யாருக்கு இருக்கோ, இல்லையோ... எனக்கு என் தகுதி மேல நம்பிக்கை இருக்கு. ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு வந்து பாருங்க. சர்வரோக நிவாரணி ஒண்ணைக்
கண்டுபிடிக்கிற முயற்சியில் இருக்கேன். இந்தியா என்ன, அப்ப உலகமே கொண்டாடும்.’’
ஆனந்த விகடன் ஏப்ரல் 2012