Professional Documents
Culture Documents
கருப்பு வெள்ளை பாரதி
கருப்பு வெள்ளை பாரதி
அவையோரே,
ஆன்றோரே,
அவைசாரரே,
வெள்ளை முண்டாசு கவிஞன் தன் கொள்கையில் கொண்ட தீவிரத்தில் சற்றும்
பிசகாதவன். சமூகத்தில் புல்லுருவியாய் ஊடுருவிய சில தகாத செய்கைகளுக்கு ‘யாவருக்கும்
பயம் கொண்டேனல்லன்’ என நெஞ்சுயர்த்தி மறுப்புரைத்தவர். சாதி பிளவை இவரால்
வேரோடு அறுக்க இயலாது போயிருக்கலாம். ஆனால் அதி மோசமான அடிமைத்தனம்
மேலாக குறைந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் எவராயின் அவரே அந்த கருப்பு
மேலங்கிகாரர். அக்கினி குஞ்சை அங்கொரு காட்டில் வைத்தவராயிற்றே; சுவடே இல்லாமலா
போகும்?. அச்சமென்பது கிஞ்சிற்றும் இல்லாது ஐயர்கள் வாழும் தெருவிலே கழுதையைத்
தோள் மீது சுமந்து கொஞ்சி குலாவி முத்தமிட்டவர் இவர்.நன்மை தீமை அனைத்தும்
அறிந்தும்; தெரிந்தும்; தெளிந்தும் தனக்கு நன்மை எனப்பட்டதைப் பகிரங்கமாய் பகரவும்
செய்வார்; பகிரவும் செய்வார்; பரவவும் செய்வார்.
சான்றோர்களே,
பாரதியாரின் நிவேதிதா தாயின் சந்திப்பு இவர் பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர
ஏதுவாக அமைந்தது.தம் கவிதையின் வாயிலாக மண்ணுக்கு மட்டுமே விடுதலை தந்தவர்
அல்லர்; பெண்ணுக்கும் விடுதலை அளித்தவர்.
சட்டங்கள் ஆளவும் பட்டங்கள் செய்யவும் பாரினில்
பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை
காணென்று கும்மியடிக்க வைத்த கவிவரிகள் இன்றும் சுதந்திரத்தை நேசிக்கும் நம் பெண்களின்
இடையே அருமருந்தாய் திகழ்ந்து வருவதில் வியப்பொன்றும் இல்லை.
பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக இயங்க அன்றைய மீசைக்காரனின் பங்களிப்பு
என்றும் என்றென்றும் மறக்க இயலாத ஒன்று. அடிமைகளாய் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,
முடக்கப்பட்டு கிடந்த பாரத பெண்கள் புள்ளினங்களாய் சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்க
வைத்த சினேகிதன் அவன். சோதனைகள் பல கடந்து, சாதனைகள் பல புரிய அடித்தளம்
நாட்டிய ஆணழகன் அவன். பெண்களின் மானசீக ஆசானும் செம்பரிதியாய் ஆயிரம்
கரங்கள் நீட்டி வெளிச்சம் காட்டிய வழிகாட்டியும் அவனே. பாரதிக்கு நிகர் பாரதிதான்.
அவைசால் பெரியோர்களே,
காட்டுராஜனையும் தன் தோழனாக்கிய இக்கவிராஜன் கஜராஜனின் தாக்குதலால்
நோயுற்று இறந்ததுதான் விநோதம். காலனே என் காலருகே வாடா என்று எட்டி
உதைத்தவாறே இயற்கை அன்னையின் அழைப்பை ஏற்ற கருப்பு வெள்ளை பாரதி;
பதினான்கே நல்லுள்ளங்களின் வரவால் சிதைத்தீயின் கனலுக்கு இரையானான். உடலற்றுப்
போனால் என்னே? அன்றும் இன்றும் இனி என்றும் தமிழ் வாழும் வரை அவன் கீர்த்தி
நிலைத்திருக்கும் எனக் கூறி விடப்பெறுகிறேன். நன்றி, வணக்கம்.