சாதனைகளின் விளைவாகப் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் அப்படியே தன்னுள் திணித்து அந்தக் கணமே தம்மை அத்வைத நிலையில் மூழ்கச் செய்ய தோதாபுரி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது போல் தோன்றிற்று என்று குருதேவர் பின்னாளில் கூறினார். அவர் சொன்னார், தீட்சை அளித்த பின் நங்டா எனக்கு வேதாந்தத்தின் முடிவுகளை எடுத்துரைக்கும் பல கருத்துக்களை உபதேசித்து எல்லா வகைகளிலும், என் மனத்தை எவ்வித எண்ணங்களும் அற்ற நிர்விகல்ப நிலையில் இருக்கச் செய்து ஆத்ம தியானத்தில் ஈடுபடும்படிக்கூறினார். என்னால் பெயர், உருவம், ஆகிய எல்லைகளைக் கடந்த நிர்விகல்ப நிலையில் மனத்தைச் செலுத்த இயலவில்லை. வேறு எல்லாவற்றிலிருந்தும் மனம் எளிதில் விடுபட்டுவிட்டது. ஆனால் அன்னை? மிகவும் நெருக்கமான அவளது அறிவுச்சுடரான எழில் வடிவம் என்முன் தோன்றிய போது, நாம ரூப எல்லைகளைக் கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணமே என்னிடமிருந்து மறைந்து விட்டது. சாஸ்திர வாக்கியங்களை நன்றாகக்கேட்டுவிட்டு தியானத்தில் அமர்வேன். மீண்டும் மீண்டும் அன்னையின் அதே காட்சி! மூன்று நாட்கள் இவ்வாறு கழிந்தன. நிர்விகல்ப சமாதி நிலையை அடைவேன் என்ற நம்பிக்கையே போய்விட்ட நிலையில் ஒரு நாள் தியானத்திலிருந்து கண்விழித்து நங்கடாவிடம், என்னால் முடியவில்லை, மனத்தை நிர்விகல்பமாக்கி ஆத்ம தியானத்தில் ஈடுபடுத்த முடியவில்லை, என்று சொன்னேன். அதைக்கேட்ட அவர் ஆத்திரத்துடன், என்ன முடியாதா? ஏன் முடியாது? என்று கேட்டுவிட்டு அந்த குடிலினுள் அங்குமிங்குமாக எதையோ தேடினார். அப்போது அவர் கண்களில் பட்ட கண்ணாடித்துண்டு ஒன்றை எடுத்து, ஊசி போலிருந்த அதன்கூரிய முனையால் என் புருவங்களுக்கு இடையில் ஆழமாகக் குத்திவிட்டு, இந்தப் புள்ளியில் உன் மனத்தை ஒருமுகப்படுத்து என்று கூறினார். நானும் திட சங்கல்பத்துடன் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டேன். அப்போதும் முன்போலவே அன்னையின் வடிவம் மனத்தில் தோன்றியது. அந்தக் கணமே ஞானத்தை ஒரு வாளாகக் கற்பனை செய்து கொண்டு அந்த வாளால் அன்னையின் அந்த வடிவத்தை மனத்தாலேயே இரு கூறாக்கினேன், அதன் பின்னர் மனத்தில் எந்த எண்ணங்களும் இல்லை. பெயர், வடிவம், ஆகிய எல்லைகளை எல்லாம் அது ஒரேயடியாகக் கடந்து சென்று விட்டது.நான் சமாதி நிலையில் ஆழ்ந்தேன். குருதேவர் சமாதி நிலையில் ஆழ்ந்த பின்னர் தோதாபுரி நீண்ட நேரம் அவரது அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்து ஓசையின்றிக் குடிலுக்கு வெளியே சென்றார். குருதேவருக்கு யாரும் இடையூறு செய்துவிடக் கூடாது என்பதற்காகக்குடிலின் கதவைச் சாத்திப் பூட்டினார். அதன் பின்னர் குடிலுக்கு அருகில் அமைந்திருந்த பஞ்சவடிக்குச்சென்று அமர்ந்து கதவை த் திறப்பதற்கு குருதேவர் அழைப்பார் என்று காத்திருந்தார். பகற்பொழுது கழிந்து இரவு வந்தது, அவர் அழைக்கவில்லை.தோதாபுரிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக மூன்று நாட்கள் நகர்ந்தன. கதவைத் திறக்குமாறு எந்த அழைப்பும் வரவில்லை. தோதாபுரியின் வியப்பு எல்லைமீறியது. உள்ளேயிருக்கின்ற சீடரின் நிலை தான் என்ன என்பதை பார்ப்பதற்காக பூட்டைத்திறந்து குடிலுக்குள் சென்றார்.அங்கே குருதேவர் மூன்று நாட்களுக்கு முன் எப்படி அமர்ந்திருந்தாரோ அதே நிலையில் இருந்தார். அவரது உடலில் இயக்கத்திற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. முகம் மட்டும் அமைதியாக கம்பீரமாக தெய்வீக ஒளியுடன் துலங்கிக்கொண்டிருந்தது.சீடர் புறவுலகிற்கு முற்றிலுமாக இறந்தது போன்ற நிலையில் உள்ளார், காற்று வீசாத இடத்தில் எரிகின்ற சலனமற்ற சுடர் போல அவரது மனம் முற்றிலுமாக பிரம்மத்தில் ஒன்றிவிட்டது என்பதைத்தோதாபுரி புரிந்து கொண்டார். சமாதி நிலையின் ரகசியங்களை முற்றிலும் அறிந்திருந்த தோதாபுரியால் தான் காண்கின்ற காட்சியை நம்பவே முடியவில்லை.ஆகா! என்ன விந்தை! என்ன அற்புதம்! நான் காண்பது உண்மை தானா? நாற்பது ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து நான் பெற்ற அனுபூதியை இந்த மகாபுருஷர் மூன்றே நாட்களில் சாதித்து விட்டாரே! என்று வியந்தார். சந்தேகம், விலகாத நிலையில் குருதேவரின் அருகில் சென்றார். அவரது உடலில் தோன்றிய அறிகுறிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராய்ந்தார். இதயம் துடிக்கிறதா, சிறிதாவது காற்று மூக்கினுள் சென்று வருகிறதா என்பவற்றைக் குறிப்பாக கவனித்தார். ஆடாமல் அசையாமல் மரக்கட்டை போல் ஒரே நிலையிலிருந்த சீடரின் உடலை மீண்டும் மீண்டும் தொட்டுப்பார்த்தார். ஆனால் எவ்வகையான சலனமும் இல்லை. புறநினைவு திரும்புவதற்கான அறிகுறியும் தென்படவில்லை. அளவற்ற ஆனந்தத்தால், இது என்ன தெய்வீக மாயை! இது உண்மையிலேயே சமாதி நிலை தான்! வேதாந்தம் கூறுகின்ற ஞான நெறியின் நிறைவு நிலையான நிர்விகல்ப சமாதிதான்! அதுவும் மூன்றே நாட்களில் கிடைத்துள்ளது? தெய்வீக மாயையின் விசித்திரம் தான் என்னே! என்று தன்னை மறந்து உரக்கக்கூவினார். சீடருக்குப் புறவுலக நினைவு வர தோதாபுரி முயற்சியைத்தொடங்கினார். அதற்காக அவர் ஓதிய ”ஹரிஓம்” என்ற மந்திரத்தைின் பேரொலி பஞ்சவடியைச்சூழ்ந்த நிலம் நீர் ஆகாயம் அனைத்திலும் பரவிற்று. சீடர் நிர்விகல்ப சமாதி நிலையில் பூரணமாக நிலை பெறுவதற்காக அவருடனேயே தோதாபுரி பல மாதங்கள் தங்கினார். குருதேவருக்கு அவர் உதவியது போல் குருதேவரின் உதவியால் அவரது ஆன்மீக வாழ்வும் முழுமை பெற்றது.இது பற்றி வேறோர் இடத்தில் விளக்கியுள்ளோம். சுமார் பதினொரு மாதங்கள் தட்சிணேசுவரத்தில் தங்கிய பின்னர் தோதாபுரி நாட்டின் வடமேற்குப் பகுதிக்குப் பயணமானார். இதற்குப் பின்னர் குருதேவர் நிர்விகல்ப அத்வைத நிலையில் தொடர்ந்து இருப்பதென்று முடிவு செய்தார். இந்த முடிவை அவர் எவ்வாறு செயலாக்கினார், அவதார புருஷர்களுக்குச் சற்று க் கீழ்நிலையில் இருக்கின்ற ஆதிகாரிக புருஷர்களால் கூட நீண்ட நாட்கள் தொடர்ந்து இருக்க இயலாத அத்வைத நிலையில் குருதேவர் எவ்வாறு தொடர்ந்து ஆறு மாதங்கள் நிலைத்திருந்தார். அந்த நாட்களில் தட்சிணேசுவரத்திற்கு வந்த சாது ஒருவர் குருதேவர் உயிர் வாழ்வது மனித குலத்திற்கு பெரு நன்மை பயக்கும் என்பதை அறிந்து , குருதேவருடன் ஆறமாத காலம் தங்கி அவரது உடல் நலத்தைப்பேணி, எவ்வாறு அவரைப் பாதுகாத்து வந்தார் என்ற விவரங்களை வேறோரிடத்தில் கூறியிருக்கிறோம். இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்னர் மதுர்பாபுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது.அற்புத தெய்வீக சக்திகள் குருதேவரிடம் வெளிப்பட்டதை நேரில் கண்ட காரணத்தால் மதுர் அவரிடம் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்சச் ி அவரது பக்தியையும் நம்பிக்கையும் மேலும் உறுதிப்படுத்தி அவரைத் தம் வாழ்நாள் முழுவதும் குருதேவரைச் சரணடைந்து வாழும்படிச் செய்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மதுர் நல்லவராக அழகுடையவராக இருந்தார். அதன் காரணமாகத்தான் ராணி ராசாமணி தம் மூன்றாம் மகளான கருணாமயியை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார் என்று குருதேவர் கூறினார். கருணாமயி காலமாகிவிடவே , கடைசி மகளான ஜகதம்பாவையும் அவருக்கே திருமணம் செய்து வைத்தார் ராணி. திருமணத்திற்குப் பின்னர் அவரது நிலையில் மாற்றங்கள் நேரலாயின. தமது மதி நுட்பத்தாலும் திறமையாலும் குறுகிய காலத்தில் ராணியின் வலது கையாகச் செயல்படும் அளவிற்கு அவர் உயர்ந்தார். ராணியின் மறைவிற்குப் பின் அவர் எவ்வாறு ராணியின் சொத்துக்களுக்குப் பொறுப்பாளராகவும் நிர்வாகியாகவும் ஆனார். என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். குருதேவரின் வேதாந்த சாதனைக்காலத்தில் மதுரின் இரண்டாவது மனைவியான ஜகதம்பாவுக்குக் கடுமையான வயிற்றக்கடுப்பு தோன்றியது. கல்கத்தாவின் பிரபல மருத்துவர்களாலும் அதனை குணப்படுத்த முடியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல நோய் முற்றியது. இறுதியில் மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். இதனால் மதுர்பாபு தனது உயிருக்குயிரான மனைவியை இழப்பது மட்டுமின்றி, ராணியின் மீதுள்ள தனது செல்வாக்கையும் இழந்து விடுகின்ற நிலை உருவாயிற்று.ஆகவே அவருக்கு அப்போதிலிருந்த மனநிலையைப் பற்றி அதிகம் கூறத்தேவையில்லை. ஜகதம்பா உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் கைவிட்ட பின்னர், மதுர் வேறு வழியின்றி மிகுந்த மனவேதனையுடன் தட்சிணேசுவரத்திற்கு வந்தார்.அன்னை காளியை வழிபட்டபின்னர் குருதேவரைத்தேடிப் பஞ்சவடிக்குச் சென்றார்.பித்துப் பிடித்தவர் போல் இருந்த மதுரின் நிலையைக்கண்ட குருதேவர் அன்புடன் அவரைத் தமக்கு அருகில் அமரச்செய்து அவரது கவலைக்கான காரணத்தைக்கேட்டார். குருதேவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி கண்ணீர் மல்க , துயரத்தால் நாத் தழுதழுக்க ”பாபா நடக்கக்கூடாதது நடந்து விடும் போல் தோன்றுகிறது. அதை விடத் துயரமானது ஏதுவெனில் நான் தங்களுக்குச்சேவை செய்யும் பேற்றினையும் இழந்து விடுவேன் போல் தோன்றுகிறது, என்று கூறினார். மதுரின் துன்பத்தைக்கண்ட குருதேவரின் மனம் கருணையால் நெகிழ்ந்து , பரவச நிலையை அடைந்த அவர் மதுரிடம், பயப்படாதே, உன் மனைவி நோய் தீர்ந்து நலம் பெறுவாள், என்று அபயமளித்தாள். மதுர் குருதேவரைக் கடவுளாகவே கருதியிருந்தார். அதனால் அவரது அபய வார்த்தைகளில் தைரியம் அடைந்தவராய் விடைபெற்றுத் திரும்பினார். அவர் ஜான் பஜாருக்குத் திரும்பி வந்த போது மனைவியின் உடல் நிலையில் திடீர் முன்னேற்றம் தோன்றியிருந்தது, அந்த நாளிலிருந்து ஜகதம்பா நோய் நீங்கி நலம் பெறலானாள். ஆனால் அந்த நோயின் வேதனையை இந்த உடம்பு( தம் உடலைக் காட்டி) ஏற்றுக்கொள்ள வேண்டிய தாயிற்று. ஜகதம்பாவை நலமடையச் செய்வதற்காக, நான் வயிற்றுக் கடுப்பாலும் பிற நோய்களினாலும் ஆறுமாதங்கள் துன்புற நேர்ந்தது என்று குருதேவர் கூறினார். தமக்கு மதுர் செய்த அற்புத சேவையைப் பற்றிப்பேசும் போது, மேலே குறிப்பிட்ட நிகழ்சச ் ியைச்சுட்டிக்காட்டி குருதேவர் எங்களிடம், பதினான்கு ஆண்டுகள் மதுர் எனக்குப் பணிவிடை செய்தது வீணுக்காகவா? அன்னை காளி இதன்மூலம் (தம் உடலைக்காட்டி) அவருக்கு ப் பல அற்புத சக்திகளைக் காட்டியுள்ளாள். அதனால் தான் அவர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் சேவை செய்தார் என்று சொன்னார்.........
தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP https://wa.me/919789374109? text=Send_whatsapp_Group_Link