‘உன்னைக் கண்டு நான் ஆட , என்னைக் கண்டு நீ ஆட’ இனிய கீதம்
வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது! தீபாவளி இனிய நன்நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் வானொலியில் அடிக்கடிஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள் அதன் பணியாளர்கள்.
தீபாவளி என்றால் பெரியோர்களைக் காட்டிலும் சின்னஞ்சிறு இளம் பிஞ்சு
உள்ளங்கள்தாம் அதிகம் மகிழ்வு கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்பது மறைக்கவோ மறுக்கவோ கூடியது ஒன்றல்ல! அதுதான் உண்மையான விஷயம்.
தீபாவளிக் காலங்களில் தோட்டப் புறத்தில் கொண்டாடி மகிழ்ந்த பழைய
சம்பவங்களை தமது நினைவலைகளில் நிலைநிறுத்திப் பார்க்கின்றான் ராமநாதன்.
மனதில் களவு , சூது இல்லை! வேற்றுமை உணர்வும் விரோத எண்ணங்கள்
இல்லாமல் அண்ணன் தம்பி என்கின்ற உறவு முறை போன்று ஒன்று சேர்ந்து தீபாவளித் திருநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வார்கள் இராமநாதனும் அவனது சக நண்பர்களும்.
இராமநாதன் அவனது குடும்பம் , வறுமையான சூழ்நிலையை எதிர்நோக்கி
வாழ்ந்து வரும் குடும்பம் எனக் கூறலாம்.
இராமநாதனுக்கு ஒன்பது வயதிருக்கும் அவனது தந்தை
காலமாகிவிட்டதால் , குடும்பப் பொறுப்பை அவனது தாயார் ஏற்றுக் கொண்டதால் , வருமானம் மனநிறைவு கானும் வகையில் இல்லை. தாயார் ஒரு வருடைய வருமானத்தை வைத்து சிக்கனமான முறையில் மாதந்தோறும் வீட்டுச் செலவு பார்க்க வேண்டும் என்கின்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர் இராமநாதன் குடும்பத்தினர்.
அன்றைய காலக்கட்டத்தில் விலைவாசிக் குறைவு அதற்க்கேற்ற ஊதியம்
கிடைக்காததால் அந்த ஊதியத்திற்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும். அப்படியொரு வறுமைச் சூழ்நிலையில் இராமநாதன் குடும்பம் அன்றைய காலகட்டத்தில் தோட்டப்புறத்தில் வாழ்ந்து வந்தனர்.
இராமநாதன் மற்றும் அவனது உடன் பிறப்பு நான்கு பேர் தாயாரின்
அரவணைப்பில் வாழ்ந்து வருபவர்கள். தீபாவளி வந்துவிட்டால் இராமநாதனுக்கு எல்லையில்லா அளவு கடந்த மகிழ்ச்சி பொங்கும் அவனது மனதில். வீட்டில் பலகாரங்கள் செய்வதில் அவனது தாயார் மற்றும் அவனது சகோதரிகள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
இராமநாதன் வீட்டில் தங்கமாட்டான். நண்பர்களைத் தேடி அவர்களுடன்
ஒன்று சேர்ந்து , பட்டாசு , கபாட் , வெடி , மத்தாப்பூ கொளுத்தி மகிழ்வதில் இராமநாதனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தோட்டப் புறத்தில் இரவு நேரத்தில் ஒன்று நேர்ந்து பட்டாசு வெடிப்பது என்றால் அவர்களுக்கு அதிகம் மகிழ்வு பெருக்கெடுக்கும்.
அதுவும் பல நண்பர்கள் சிறுவயதில் ஒன்று சேர்ந்தார்கள் என்றால் , அதில்
இருக்கும் மகிழ்வு வேறு எதில் இருக்கப் போகிறது என்பதை சிந்திக்க வேண்டும் நாம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நெருங்கிவிட்டால் சிறுவர்களுக்கு ஏற்படும்
மகிழ்வு கொஞ்ச நஞ்சம் இல்லை என்றே கூறவேண்டும். நண்பர்களுக்கு அவரது பெற்றோர் புதிய ஆடை , காலணி , காலுறை என இரண்டு ஜோடி ஆடைகள் , சிலுவார் , சட்டை என வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். ஆகவே , ‘எனக்கும் அதுபோல் அவர்களுக்கு அவரது பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்தது போல வாங்கிக்கொடுங்கள் அம்மா’ என தன் தாயை நச்சரிக்கத் தொடங்கினான் இராமநாதன்.
இராமநாதனுக்கு சிறு வயது தானே! அதனால்தான் அவன்
சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறான். இராமநாதனின் மற்ற உடம்பிறப்புச் சகோதரிகள் எதையும் கேட்க மாட்டார்கள். இராமநாதனின் வயதைக் காட்டிலும் , அவனது அக்காமார்கள் வயதில் மூத்தவர்கள் எதையும் சிந்தித்து செயற்படுவார்கள். அம்மாவின் மாத வருமானத்தையும் அம்மா சிரமப்பட்டு உழைப்பதில் அவர் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறார் என்ற உண்மை நிலவரத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் இராமநாதனின் அக்காமார்கள்.
இராமநாதன் விளையாட்டுப் பருவம் உடையவன். அதனால்தான் வறுமை
என்றால் என்னவென்று புரிந்து கொள்கின்ற மனப்பக்குவம் , சிந்திக்கும் திறன் ஆற்றல் இராமநாதனுக்கு இல்லை.
குடும்பத்தில் இராமநாதன் ஒரே ஆண்பிள்ளை அதுவும் கடைக்குட்டி.
அதனால் அவனது தாயார் அவனை செல்லமாக கவனிப்பார். அவனது அக்காமார்களும் கடைக்குட்டி கடைசித்தம்பி என பாசத்துடன் செல்லமாக கவனிப்பார்கள்.
செலவு மாதம் இருக்கத்தான் செய்யும் அதற்காக அதை நினைத்து
தீபாவளியை நிறுத்தி வைக்க முடியுமா என்ன? கடன் பட்டாவது தீபாவளியை சற்று சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே தாயாரின் மனதில் தோன்றும் எண்ணங்கள்.
அம்மாவை அதிகம் செலவு செய்யவிடாமல் இராமநாதனின் அக்காமார்கள்
தடுப்பதும் உண்டு. பட்ஜ்ட் போட்டுத்தான் தேவையான செலவை செய்யவேண்டும் என்றே அக்காமார்கள் மூவரும் முடிவெடுப்பார்கள்.
தேவையான செலவு மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனாவசிய
செலவுகளுக்கு பட்ஜெட்டில் இடமில்லை என்பதே மூன்று அக்காமார்களின் தீர்க்கமான முடிவு.
தீபாவளி செலவுகளை எப்படி ஈடுகட்ட வேண்டும் என்பதே அம்மாவின்
யோசனை. அவர் அதனை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பார். அம்மாவின் புலம்பலை இராமநாதனும் உணர்வான். தீபாவளி மாதம் என்றால் அம்மாவுக்கு வேலையும் குறைவு காரணம் மழைக்காலம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் பால்மரம் சீவமுடியது. பெய்கின்ற கனத்த மழையின் காரணமாக பால்மரம் மழை நீர் சூழ்ந்து கொண்டிருக்கும். பிறகு எப்படி மரம் சீவ முடியும். தீபாவளி மாதத்தில் அடிக்கடி மழை பெய்வது வயிற்றுப்பிழைப்பு பாதிக்கப்படும். வருமானம் குறைந்து விடும். எப்படி தீபாவளி செலவுகளை ஈடுகட்ட முடியும் என்பதே அம்மா புலம்புவதற்கான காரணங்கள்தான் அவை.
தோட்டத்தில் பால் மரம் சீவும் மண்டோர் அம்மாவின் கைகளில் 200
வெள்ளியைக் கொடுத்து ‘தீபாவளிச் செலவைப் பார்த்துக் கொள் அடுத்த மாதம் கூட்டுக் காசு கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்’ என்றார்.
தீபாவளி மறுமாசம் மாதம் மாதம் கட்டின கூட்டுப்பணம் அம்மாவுக்குக்
கிடைக்கின்றது என்பதை மறந்தே போயிட்டாங்க. நல்ல வேளை தோட்டத்துப் பால்மரம் சீவும் மண் டோர் 200 வெள்ளி கொடுத்து அம்மாவின் சிரமத்தைக் குறைக்க தாராளமனதுடன் மனித நேயத்துடன் நடந்து கொண்டதை அம்மா எந்தக் காலத்திலும் மறக்கவே இல்லை.
மண்டோர் கொண்டு வந்து கொடுத்த 200 வெள்ளியை கையில் எடுத்துக்
கொண்டு , தோட்டத்தின் உள்ளே இருந்து பஸ் ஏறுவதற்காக சுமார் இரண்டு மைல் தூரம் பொடி நடையாக நானும் அம்மாவும் மெதுவாக வந்து காத்திருந்தோம்.
சுமார் பத்து நிமிடங்கள் கடந்த பின்னர் பட்டணத்திற்கு போகின்ற பேரூந்து
வந்து நிழற்குடையின் அருகில் நின்றது. நானும் அம்மாவும் பேரூந்தில் ஏறி அரைமணி நேரத்தில் பட்டணம் சென்று சேர்ந்தோம்.
பேரூந்தை விட்டு இறங்கி ஒவ்வொரு கடையாக தீபாவளிப் பொருட்களை
வாங்கி விட்டு கடைசியாக அம்மா எனக்குப் புதிய ஆடை வாங்குவதற்கா சிலகடைப்பக்கமாக தனது பார்வையை திருப்பினர்.
அம்மா கையில் எடுத்து வந்த பணம் தீர்ந்து போற தறுவாயில் இருந்தது.
சிக்கனமாகத் தேவையானப் பொருட்களை மட்டும் விலைகொடுத்து வாங்கியதும் , பணம் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுவிட்டது என இராமநாதன் சிந்தித்தான்.
முதலில் இராமநாதனுக்கு பட்டாசு , மத்தாப்பூ என சில பொருட்கள்
வாங்கிவிட்டாங்க அம்மா! கடைசியாக புது ஆடை , சிலுவார் , காலணி வாங்க வேண்டிய கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார். இராமநாதன் தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் , பள்ளி ஆடையும் வாங்குவதற்கு விலையைப் பேரம் பேசிய போது இராமநாதனுக்கு முகம் மாறிவிட்டது. சற்று முகம் சுழித்துக் கொண்டான். அவனை சமாதானம் செய்து , ‘அடுத்து ஆண்டு கண்டிப்பாக தீபாவளிக்கு சட்டை , சிலுவார் வாங்கித் தருகிறேன். என் ராசா , என் கண்ணு கோவிச்சுக்காதையா!’ என கன்னத்தில் முத்தமிட்டு மகன்
மனதை ஆறுதல் மொழிகளால் திருப்திப்படுத்தினார் அம்மா.
தீபாவளி முடிந்து அடுத்த கட்டம் பள்ளி திறப்பதால் , புதிய பள்ளி
ஆடைகள் , புதிய சிலுவார் சட்டை , காலணி , காலுறை விலை
கொடுத்து வாங்க வேண்டிய சிரமம் ஏற்பட வழி இருக்காது என்ற
புதிய சிந்தினை அம்மாவின் மனதில் தோன்றிய காரணத்தால் தான்
அம்மா அப்படி செயற்பட்டார்.
தோட்டத்தில் பால் மரம் சீவி , காலத்தைக் கடத்துவதால்
வருமானம் குறைவு , அதற்கு ஏற்றவாறு செலவுகளை சிக்கனமாக
பார்க்கவேண்டியுள்ளது.
இராமநாதன் தந்தை இறந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டது.
அவனது அம்மா ஒருவர்தான் தோட்டத்தில் வேலை செய்வதால்
பிள்ளைகள் நால்வருக்கும் எப்படி வருமானத்திற்கு மேல் செலவு
செய்ய இயலும் என நமக்குள் சிந்தனை செய்வது சிறப்பான ஒன்று
என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நன்நாள் வந்து போகும். ஆண்டுகள்
உருண்டோடியது , தீபாவளி இனிய நன்நாள் எத்தனையோ வந்து
போய்க்கொண்டிருந்தது. இராமநாதனின் உடன்பிறப்பு சகோதரிகள் கால
ஓட்டத்தில் பெரியவர்களாக வளர்ந்து அவர்கள் திருமணம்
செய்துகொண்டு குடும்பத்தலைவிகளாகத் தோற்றம் தந்தனர்.
இராமநாதனின் தாயாரை காலதேவன் அழைத்து இருபது
ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. இராமநாதனுக்கு திருமணம்
நடைபெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பிள்ளைகள்
பெரியவர்களாக வளர்ந்து ஆளாகிவிட்டனர்.
தீபாவளி இனிய நன்நாள் வந்துவிட்டால் தான் கடந்து வந்து
இளமைக்கால தீபாவளி இனிய சம்பவங்களை மனதில் நிலைநிறுத்திப்
பார்ப்பான். தான் சிறுவயதாக இருக்கும் போது அம்மா வாங்கிக்
கொடுத்து புதிய பள்ளி ஆடை பற்றி சிந்தித்து அமைதியாகப்
போய்விடுவான்.
இன்றைய காலத்து இளம் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடைகளை
வாங்கிக் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு தீபாவளி இனிய நன்நாளைக்
கொண்டாடி மகிழும் மன நிலை இருப்பார்களா என்பதே நமது இன்றை
கேள்வி? நாம் கடந்து வந்து அன்றைய தீபாவளி இனிய நன்நாள்
சம்பவங்களை நினைவில் மலரவிட்டுப்பார்ப்போம். இராமநாதன் தான்
கடந்துவந்த அந்த இனிய நினைவுகளை உயிர் இருக்கும் வரை
ஒவ்வொரு தீபாவளி இனிய நன்நாளில் நினைத்துப் பார்ப்பான்.