தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில்
தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.
விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும்,
தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். அவருக்கு நம்பி என்ற ஒரு மகன் இருந்தான். நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பலனில்லை. தன் நெருங்கிய நண்பரிடம் ஆலோசனை கேட்டார். அவர் நம்பியை வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.
சரண்யனும் அவ்வாறே செய்தான். குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின்
நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான். சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை. சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார். நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! அதைவிட நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி நீ படிப்பில் முன்னேற நான் உதவுகிறேன்” என்றான். முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைப் பற்றி சுகுமாரனிடம் கலந்தாலோசிப்பான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். குரு நம்பியின் மாற்றத்திற்கான காரணத்தை சுகுமாரனிடம் கேட்டறிந்தார். “குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன். நம்பியின் தந்தை எனக்கு செய்த உதவிகளுக்கு இது கைமாறாக இருக்கட்டும்” என்றான். குரு அவனின் தன்னடக்கத்தைப் பாராட்டினார்.
சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, சரண்யன்
சுகுமாரனின் தந்தையின் பொருளாதாரப் பிரச்சனையையும் தீர்த்து வைத்தார். சுகுமாரனின் உறவினர்களினால்தான் இந்நிலை ஏற்பட்டது என்பதனை அறிந்து கொண்டு அவ்வப்போது சுகுமாரனிடமும் அதை தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.
அதற்கு சுகுமாரன் “குருவே! என் உறவினர்கள் என் தந்தையைப் படுகுழியில்
தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார். ஆனால் அவனோ குருவின் சொல்லுக்குச் செவிசாய்க்கவில்லை. குருவும் சரண்யனும் நம்பியிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு நம்பி, “என் தந்தை சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா.. நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.
நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு
மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறியதாக நான் நினைக்கின்றேன். ஆனால் மகா புத்திசாலியான குரு நம்பியின் யோசனையை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமாதித்தன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட!
சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்றும் எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும்.“சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணமும் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.
விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்து
இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.