தித்திக்கும் தேன்தமிழ் திக்கெட்டும் பரவட்டும், முத்தமிழ் தாய்க்கு என் முதற்கண்
வணக்கங்கள்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் வழியில் வந்த நடுவர் அவர்களே,மரத்தின் வேரு போல இருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களே,அதில் கிளைகளாக இருக்கும் ஆசிரியப் பெருமக்களே, மரத்தில் இருக்கும் இலையான என் அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே,வருங்காலத் தூண்களே , எதிர்காலம் நீங்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் எனது முத்தான முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரம் என்ற தலைப்பைப் புரிந்து ,பேச்சிலே தரப்போகிறேன் உங்களுக்கு நல்லதொரு விருந்து. எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி என் உரையைத் துவங்குகிறேன்.
அவையோரே சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம்
மற்றும் மனம் சார்ந்தஆரோக்கியம் என்பன தொடர்பானதாகும். மக்கள் யாவரும் இன்பமான வாழ்க்கையை விரும்புகின்றனர். இன்பமான வாழ்வுக்கு உடல், உள்ளம் இரண்டுமே நலமாக இருத்தல் அவசியம். உள்ளம் நலமாக இருப்பதற்கு நல்லெண்ணம், நற்செயல், நல்லோரிணக்கம் என்பன உதவி புரியும்.உடல் சுகமாய் இருப்பதற்கு தூயகாற்று, நிறையுணவு, சுத்தமான உடை, காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள வீடு, நற்பழக்கவழக்கங்கள், தூய சூழல் என்பன அவசியம்.
மேலும் சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல.
நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம். நமது வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியமானதாகும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள்.
நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம் நல்ல
ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும் ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றி ரகசியமாகும். ஓர் ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் நாம் நம்மையும் சுத்தமாக வைத்து நமது சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல்
மற்றும் சரியான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை இலகுவில் உண்டாக்கி நம் வாழ்வை இருளாக்கி விடும். இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது தொற்று நோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அண்மை காலத்தில் உலகையே வாட்டி எடுத்த கொரோனா சுத்தமின்மையால் அதிகம் பரவிய நோயாகும்.தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்காக தான் அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், பொது இடங்களிலோ, தனிப்பட் இடங்களிலோ பலர் ஒன்று கூடாமல் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அதனை கட்டுப்படுத்த முடிந்தது. இங்கும் சுத்தம் வலியுறுத்தப்படுகின்றது அவையோரே,நாம் சுத்தமாக இருப்பதனால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நன்மை அடைவார்கள் சுத்தமாக இருப்பதனால் நம்மால் ஆரோக்கியமான மனிதனாக வாழ முடியும்.ஒரு குடும்பத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் அது அக்குடும்பத்தையே பாதிக்கும் ஆகவே நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் நமக்கு உளரீதியாக மகிழ்ச்சி
ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.நாம் வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம் இக்காலத்தில் மக்கள் நாகரீக போதைக்கு அடிமையாகி மதுப்பாவனை புகைத்தல் போதைப்பழக்கம் போன்றவற்றால் தமது வாழ்வை தாமே சீரழித்துக் கொள்கிறார்கள்.போதைகளற்ற நல்ல மனிதர்களை இன்று காண்பது அரிதாகி விட்டது இது பாரிய சீரழிவு நிலையாகும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதே அனைவருக்கும் அதிக நன்மை தரும்.
என் அன்பிற்கினியோரே, அதிகாலையில் நித்திரை விட்டெழுதல், பல் துலக்கி
முகம் கழுவுதல், நன்னீரில் குளித்தல், இறைவனை வணங்குதல், இலகுவான உணவினை உண்ணுதல் என்பன காலையில் செய்யும் கடமைகளாகும்.மதிய உணவு நிறையுணவாக அமைதல் வேண்டும். அதிலே மாம்பொருள், இலிப்பிட்டு, புரதம், தாதுப்பொருள் முதலியன இடம் பெற்றிருத்தல் வேண்டும். உண்ணும் முன்பும் உண்ட பின்பும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.அருந்தும் நீர் சுத்தமானதாய் அமைதல் வேண்டும். மாலை வேலைகளில் நல்ல காற்றும் சூரிய வெளிச்சமும் உள்ள இடங்களில் விளையாடுதல் வேண்டும். அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தல் வேண்டும்.இரவு உணவு இலகுவானதாய் இருத்தல் வேண்டும். பால் நிறையுணவாகும். ஆதலால் தினமும் ஒரு வேளையாயினும் பால் பருகி வருதல் வேண்டும். உரிய நேரத்தில் நித்திரைக்கு செல்லுதல் வேண்டும். உடல் உறுப்புகளுக்கு நித்திரை ஓய்வு தருகிறது.
சபையோரே, மனித வாழ்க்கையே சவாலாகி வரும் இக்கால கட்டத்தில் நாம்
விழிப்படைய வேண்டியது அவசியமாகும்.மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் குறைவடைந்து வருகிறது இளம் வயதிலேயே கொடூரமான நோய்கள் வந்து இறக்கவும் நேரிடுகிறது இதற்கு காரணம் நாம் தவறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதும் சூழலை மாசடைய செய்வதும் ஆகும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள். எனவே சுத்தத்தை பேணி நம்மை மட்டுமல்லாமல் சுற்றுபுற சூழலையும், சமூகத்தையும் சுத்தமாக வைத்து பல்லாண்டு காலம் வாழ்வோமாக.