Professional Documents
Culture Documents
கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல்
கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல்
தனியாக ஆரம்பிக்க பயமாக இருக்கிறது. கூட ஒரு ஆள் இருந்தா சவுகரியம். நல்லது
கெட்டதில் சம பங்கு இருக்கும் என்று நினைத்தால் உங்களுக்குத் தொழில் பற்றிய
பாதுகாப்பின்மை உள்ளது. வாரன் பஃபே பங்குச் சந்தை வெற்றிக்குச் சொல்வது என்னைப்
பொறுத்தவரை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவர் சொல்வது இதைத்தான்: “உங்கள்
முடிவுகள் பயத்தாலோ பேராசையினாலோ எடுக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற
முடியாது!”
என் நண்பர் ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தார். கையில் பணமில்லை. நண்பர்
ஒருவர் உதவவந்தார். ரூபாய் ஐந்து லட்சம் வரை கொடுத்துப் பார்ட்னரானார். தடபுடலாக
ஆஃபீஸ் போட்டு பப்ளிசிட்டி செய்தார்கள். மெல்லத் தொழில் வளர்ந்தது. முதலாமவர் முழு
உழைப்பில் காசு வர ஆரம்பித்தது. எதிர்பாராத வகையில் முதல் வருட லாபமே ரூபாய் பத்து
லட்சத்தை தொட்டது. இப்போது நம் நண்பர் எதற்கு அந்த நண்பரை பார்ட்னராய்ச் சேர்த்தோம்
எனப் புலம்ப ஆரம்பித்தார். “ரூபாய் ஐந்து லட்சத்தைக் கடன் வாங்கிப் போட்டிருந்தால் முழு
முதலாளி ஆகியிருக்கலாமே? இவர் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு வேலை செய்யாமல்
லாபம் பார்க்கிறாரே” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.
என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: “மாதம் ரூபாய் மூன்று லட்சம் கொடுத்து ஒரு பெரிய
பேராசிரியரைப் பணிக்கு அமர்த்த முடிகிறது இவர்களால். ஆனால் அவரை எப்படிச் சிறப்பாகப்
பணி செய்யவைப்பது என்ற நிர்வாகத் திறன் இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று
இஷ்டத்துக்கு வளைத்ததால் அவர் வந்த வழியே போய்விட்டார்!”
ஊர் கூடித் தேர் இழுப்பது போல, கூட்டுறவு செயல்பாடு போல, பலர் சேர்ந்து தொழில்
தொடங்குவது சிறப்புதான். ஆனால் கூட்டின் கட்டுமானம் திடமாகத் தெளிவாக இருந்தால்தான்,
அதன் மேல் எழுப்பப்படும் வியாபாரம் பிரம்மாண்டமாக ஓங்கி வளரும்!