தொட்டு தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம். தொடர்ந்து படித்தால் வாழ்வில்
வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும்.
“புத்தகம் இல்லாத அறை உயிரில்லாத உடலுக்கு ஒப்பானதுˮ என்கிறார் சிசரோ.
“மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ என்கின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். “புத்தகங்களை நேசி ஒரு புத்தகத்தைத் தொடுகின்ற போது நீ ஒரு அனுபவத்தை பெறுவாய்ˮ என்கின்றார் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்கள். எனவே புத்தகங்களே வாழ்வில் சிறந்த நண்பர்களாகின்றன. உலகில் உயரமான இடத்திற்கு சென்றவர்கள் பலரும் புத்தகப்பிரியர்களே. புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். எண்ணப் பதிவாகிய கருத்துக்களை உருவில் காட்ட புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன. நூல்களின் முக்கியத்துவம் அறிந்த நம் முன்னோர்கள் பனை ஓலையில் எழுதப்பட்ட பதிவுகளை துளையிட்டு நூல்கயிற்றில் கோர்த்து வைத்தனர். எப்போதோ நிகழ்ந்ததை இப்போது அறிந்து கொள்ள புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன. நம் அறிவைப் பெருக்கிக் கொண்டு வாழ்வில் வளம் பெற புத்தகங்கள் முக்கியமானவையாகும்.
தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ளவும்⸴ புதிய விடயங்களைக் கற்றுக்
கொள்ளவும் புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன. பாடநூல்கள் மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் வாழ்க்கை முறை⸴ ஒழுக்க நெறிகளை வளப்படுத்த பொது நூல்கள் அடித்தளமாய் உள்ளன. நல்ல நூல்களே நம்முள் நல்ல குணங்களை வளர்க்கின்றன. ஆர்வத்தைத் தூண்டி தொடர்ந்து படிக்க வைக்கும் நூல்களே சிறந்த நூல்கள் ஆகும். எவை நம்மைத் தூங்க விடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துகின்றதோ அவையே சிறந்த புத்தகங்கள் ஆகும். எனவே நன்கு ஆராய்ந்து பயன் தரும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும். ஒருவர் எவ்வளவு தூரம் நூல்களைத் தேடிப் படிக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவரது படைப்பாற்றல் நிலைத்திருக்கும்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவுˮ என்கின்றார் அவ்வையார். இதற்கிணங்க நல்ல புத்தகங்களைப் படித்து வாழ்வில் வளம் பெறுவோமாக!