முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் முத்தன் என்ற சிறுவன் இருந்தான்.
அவன் தாய் நோய்ப் படுக்கையில் கிடந்தாள். மருந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.
பக்கத்து ஊரில் இருந்த மாமனிடம் சென்று உதவி கேட்டான். இரக்கம்
இல்லாத அவர் அவனை அடித்து விரட்டினார். அழுது புலம்பியபடி காட்டு வழியே வந்தான் அவன். அங்கிருந்த கிழவர் ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டார். “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார். நடந்ததைச் சொன்னான் அவன்.
உதவி செய்ய நினைத்த அவர் “சிறுவனே! இந்த மந்திரச்
செருப்புகளை உன்னிடம் தருகிறேன். இவற்றைக் காலில் அணிந்து குதித்தால் ஒரு பொற்காசு விழும். ஒவ்வொரு பொற்காசு விழும் போதும் நீ சிறியவனாகி விடுவாய். ஒரு நாளைக்கு ஒருமுறைதான் குதிக்க வேண்டும். சிறிது ஓய்வு எடுத்தால் பழைய நிலைக்கு வந்து விடலாம். பேராசைப்பட்டுப் பலமுறை குதித்தால் பொற்காசுகள் கிடைக்கும். ஆனால், எறும்பைவிட சிறியவனாகும் உன்னால் மீண்டும் பழைய வடிவம் பெற முடியாது.” என்றார்.
அவரிடம் செருப்புகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
அவற்றைக் காலில் அணிந்து குதித்தான். ஒரு பொற்காசு விழுந்தது. அந்தப் பணத்தைச் செலவு செய்து தாயைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டான்.
பணம் தேவைப்படும் போது செருப்புகளை அணிந்து பொற்காசைப்
பெற்றான். மந்திரச் செருப்பைப் பற்றி அவன் மாமா கேள்விப்பட்டார். கொடியவரான அவர் அவன் வீட்டிற்கு வந்தார். அவன் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் மந்திரச் செருப்புகளை எடுத்துச் சென்றார்.
“மாமா! மந்திரச் செருப்பை ஒரு நாளைக்கு ஒருமுறைதான்
பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஆபத்து” என்று அலறினான் அவன். அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்த அவர் தோட்டத்தில் போர்வையை விரித்தார். மந்திரச் செருப்புகளை அணிந்து போர்வையின் மேல் நின்று குதித்தார். பளபளவென்று மின்னியபடி ஒரு பொற்காசு விழுந்தது.
பேராசை கொண்ட அவர் குதித்துக் கொண்டே இருந்தார். அங்கே
பொற்காசுகள் விழுந்த வண்ணம் இருந்தது. களைப்பு அடைந்த அவர் குதிப்பதை நிறுத்தினார். ஏராளமான பொற்காசுகள் கிடப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
பொற்காசு எப்படி இவ்வளவு பெரிதாக ஆனது என்று குழம்பினார்.
அருகில் வளர்ந்து இருந்த புல் அவருக்கு மரம் போலத் தோன்றியது.
எறும்பைவிட சின்னதாகி விட்டது அவருக்குப் புரிந்தது. “ஐயோ!
என்ன செய்வேன்?” என்று அலறினார் அவர். “மாமா! மாமா!” என்று குரல் கொடுத்தபடியே வந்தான் முத்தன். ஏராளமான பொற்காசுகள் போர்வையில் கிடப்பதையும் அருகே மந்திரச் செருப்புகளையும் பார்த்தான்.
“முத்தா! என்னைக் காப்பாற்று” என்று கத்தினார் அவர். அவர் குரல்
அவன் காதில் விழவில்லை. செருப்பை அணிந்து மாமா பலமுறை குதித்து இருக்கிறார். எறும்பைவிட சிறியதாகி இருப்பார். அவரைக் கண்டுபிடிக்க முடியாது. பேராசை அவர் வாழ்க்கையை அழித்து விட்டது என்று நினைத்தான் அவன். மந்திரச் செருப்பையும் பொற்காசுகளையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். அவன் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழிக்கேற்ப முத்தனின் மாமாவின் செயல்கள் நமக்கு ஓர் உதாரணமாக விளங்குகிறது.