துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் நான்காம் பருவம் பயிலும் பயிற்சி
ஆசிரியர்களாகிய (ஆனந்த ராஜ் முனுசாமி, ஜேரி அந்தோணிதாஸ், ஷாமினி மோகன்) ஆகியோர் BTMB3083 தொடக்கப்பள்ளிக்கான தமிழ்மொழி பாடத்திட்ட ஆய்வின் இடுபணிக்காக சில பயிற்றுத்துணைப் பொருள்களை ஆக்ககரமான முறையில் புத்தாக்க வடிவில் உருவாக்கியுள்ளோம்.
1.2 தயார் செய்த புத்தாக்கத்தைப் பற்றிய சுருக்கம்
மின்னட்டை (Online Flashcard) என்பது ஒரு தலைப்பை அல்லது கருத்தைத் தெரிவிக்க
பயன்படுத்தப்படும் எளிமையான பொருளாகும். பெட்டிக்குள் பெட்டி (Explosion Box) என்றால் பல தகவல்களை ஒரே கையடக்கக் கருவியில் சமர்ப்பிக்க உதவும் பொருளாகும். மின்னட்டையை ஆசிரியர் இணையத்தின் துணைகொண்டு முன்பகுதி பின்பகுதி என தனித்தனியே உருவாக்கி பின்னர் இணைப்பாக மின்னட்டையை உருவாக்குவார். மாணவர்கள் மின்னட்டையின் மூலமாகப் பாடத்தை முழுமையாகவும் கோர்வையாகவும் கற்றுக்கொள்ள இயலும். பெட்டிக்குள் பெட்டியை ஆசிரியர் மாணவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் பயன்படுத்தலாம்.
பெட்டிக்குள் பெட்டியையும் மின்னட்டையும் கொண்டு ஆசிரியர் முழுப்பாடத்தையும் கற்றுத்
தரலாம். அதாவது ஒரு மணிநேரத்தில் பீடிகை, படி 1, படி 2, படி 3, மதிப்பீடு, முடிவு ஆகிய படிநிலை வெற்றிகரமாக முடிக்கவும் பாடநோக்கத்தைச் செவ்வனே நிறைவேற்றவும் இப்பயிற்றுத்துணைப்பொருள் ஏதுவாக அமையும். மின்னட்டை எனப்படுவது முப்பரிமாண வடிவிலும் பெட்டிக்குள் பெட்டி என்பது இருபரிமாண வடிவிலும் அமைந்திருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல போனால், மின்னட்டையை மாணவர்கள் கண்ணால் பார்த்து உணர மட்டுமே இயலும், அதே குறிப்புகளைப் பெட்டிக்குள் பெட்டி மூலமாக மாணவர்கள் தொட்டும் இரசித்தும் அறிவை வளர்த்துக்கொள்வர் என்பதே இப்பயிற்றுத்துணைப்பொருளின் சிறப்பாகும்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பாடநோக்கத்தை அடையவும் மாணவர்களின் புரிதலை மேம்படுத்தவும் பெரிதும் துணைபுரியும். அதாவது ஆசிரியர் முழுக்க முழுக்க மின்னட்டை எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்றுத்துணைப்பொருளையே எதிர்ப்பார்த்து இருக்காமலிருக்க பெட்டிக்குள் பெட்டி எனும் கருவி துணைபுரியும். ஒருவேளை மின்னட்டையின் பயன்பாட்டின்போது கோளாறு ஏற்பட்டால் ஆசிரியர் பெட்டிக்குள் பெட்டியைக் கையாளலாம். ஆசிரியர்கள் வெண்கட்டியும் பேச்சும் (Chalk And Talk) முறையை மட்டுமே கையாளாது 21 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் முறைமைகளின் கீழ் விளையாட்டு முறைக் கற்றல், கணிணி முறைக் கற்றல் போன்றவற்றையும் அமல்படுத்தும் நோக்கத்தில் இப்பயிற்றுத்துணைப்பொருள் உருவாக்கப்பட்டது.
அதேவேளையில், 21 ஆம் நூற்றாண்டுக் கற்றல் கற்பித்தல் திறன்களை மேலோங்கச்
செய்யலாம். விளையாட்டு முறைக் கற்றல், சூழல் சார் கற்றல், கணிணி முறைக் கற்றல் போன்றவற்றை இச்செயலியின் மூலமாகக் கற்பிக்கலாம். தொடர்ந்து, மாணவர் ஆசிரியரிடையே இருவழித் தொடர்பாடல் நிகழுவதோடு அவர்களிடையே உள்ள ஒற்றுமையும் வலுப்பெறும். இவற்றுள் மிக முக்கியமான நோக்கமாகக் கருதப்படுவது யாதெனில் கேட்டல், பேச்சு, எழுத்து, வாசிப்பு போன்ற அடிப்படைத் திறன்கள் இச்செயலியின் அமலாக்கம் மூலமாக வெளிப்படும் என்பது வெள்ளிடைமலை. இவையனைத்தும் ஒரு மாணவன் குறிப்பாக தமிழ்மொழிக் கற்கும் மாணவன் கட்டாயம் திறன்பெற்றிருக்க வேண்டிய கூறுகளாகும்.
1.4 கற்றல் கற்பித்தலுக்காகத் தயார் செய்த புத்தாக்கம்
1.4.1 புத்தாக்கத்தின் ஓர் அறிமுகம்
பயிற்றுத்துணைப் பொருள்கள் :-
நடவடிக்கை 1 : மின்னட்டை (Flashcard)
நடவடிக்கை 2 : பெட்டிக்குள் பெட்டி (Explosion Box)
இப்பயிற்றுத்துணைப்பொருளின் பயன்களானவை மாணவர்களுக்கு கணிணியையும் நவீன
தொழில்நுட்பத்தையும் இயக்கும் முறையையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்ய துணைபுரியும். அதுமட்டுமின்றி, மாணவர்களின் தனித்திறமையையும் தன்னாற்றலையும் வெளிக்கொணரும் தளமாக அமைகின்றது. தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுமையைத் தரக்கூடிய வீட்டுப்பாடங்களைத் தர வேண்டிய சூழல் இல்லை. ஏனெனில், மாணவர்கள் வெறும் இணையத்தையும் மடிக்கணிணியையும் கொண்டு பாடம் கற்கலாம். மேலும், மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலின்றி சுயமாகவே ஓர் இடுபணியைச் செவ்வனே செய்து முடிக்க முடியும். இறுதியாக, மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆயுதமாகவும் அமையும் என்பது திண்ணம்.
1.4.2 தயார் செய்யப்பட்டத் தேதி
16/03/2020: பயிற்றுத்துணைப்பொருள் தொடர்பான தகவல்களைத் திரட்ட தொடங்கினோம்.
20/03/2020: மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பல்வகைச் செய்யுளை கண்டறிந்து
அதற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை உற்றுநோக்கினோம்.
24/03/2020: மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும்
அதற்குறிய பயிற்றுத்துணைப்பொருள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தோம்.
29/03/2020: தொழில்நுட்ப உத்திகளையும் முப்பரிமாண விடயங்களையும் சேர்த்துக்கொண்டோம்.
01/04/2020: படைப்பிற்குத் தேவையான பொருட்களையும் நழுவங்களையும் உருவாக்கினோம்.
03/03/2020: விரிவுரையாளரின் தேவைக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டோம்.
05/03/2020: படைப்புகளை மாற்றங்களுக்குப் பின் திருத்தம் செய்து சரிபார்த்தல்
06/04/2020: படைப்புகான காணொலியை குழுமுறையில் மேற்கொண்டு எடிதிங் செய்தோம்.
07/04/2020: தயார் செய்த காணொலியை விரிவுரையாளரிடம் சமர்ப்பித்தோம்.
08/04/2020: காணொலியை முகநூல், படவரி, வலையொளி ஆகியவற்றில் பதிவேற்றினோம்.
14/07/2020: விருப்பங்கள், பின்னூட்டல்கள், பகிர்வுகள், கருத்துகள் ஆகியன பெற்றோம்.
1.4.3 புத்தாக்க பயிற்றுத் துணைப்பொருளின் விவரங்கள்
இப்பயிற்றுத்துணைப்பொருளானது பீடிகை முதல் முடிவு வரையிலான கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியருக்குத் துணைபுரியும். ஆசிரியர் ஒவ்வொரு படியினைச் செயல்படுத்தவும் தனித்தனியாக பயிற்றுத்துணைப்பொருளைத் தயார் செய்யாமல் ஒரே பொருளைக் கொண்டு முழுப்பாடத்தையும் சிறப்பாக வழிநடத்திடலாம். ஆசிரியர் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் பாடத்தை விதிவருமுறையில் நிகழ்த்துவார். முதலாம் நடவடிக்கையான பீடிகையில் ஆசிரியர் இப்பயிற்றுத்துணைப்பொருளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவிடலாம். அதாவது மின்னட்டை, பெட்டிக்குள் பெட்டி, ஆகிய இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது எனவும் மாணவர்களிடத்தில் அன்றைய பாடத்தின் மீது ஆர்வத்தை வளர்க்கலாம். மின்னட்டையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி பெட்டிக்குள் பெட்டியை இயக்க போவதாக மேலோட்டமான அறிவை ஆசிரியர் வழங்கி அன்று செய்யுள் பற்றி கற்கப்போவதாகவும் கூறிவிடலாம். இதுவே பீடிகையில் பயிற்றுத்துணைபொருளின் அமலாக்கம் ஆகும்.
முதலாம் படியில் ஆசிரியர் 'மாசில் வீணையும்...' எனத் தொடங்கும் செய்யுளில்
அடங்கியுள்ள பொருள்களான வீணை, சிவன், தென்றல், வண்டு ஆகிய படங்கள் அடங்கியிருக்கும். அதேபோன்று, மின்னட்டையிலும் இப்பொருள்கள் அமைந்திருக்கும். அடுத்த படியில் ஆசிரியர் இச்செய்யுளை எழுதியவர் தொடர்பான விளக்கம் தருவார். திருநாவுக்கரசரின் படம், அவரின் பெருமைகள், அவரின் வாழ்க்கைப் பின்னணி ஆகியவை அடங்கிய பகுதியாக இரண்டாம் பகுதி அமைந்திருக்கும். மாணவர்கள் எவ்வித குழப்பமுமின்றி மின்னட்டையையும் வழிகாட்டியாகக் கொண்டு பாடம் கற்பர். 'மாசில் வீணையும்...' எனத் தொடங்கும் செய்யுளை எழுதியவர் திருநாவுக்கரசர் எனும் விளக்கத்தை மின்னட்டை வாயிலாகத் தந்துவிட்டு பெட்டிக்குள் பெட்டியைத் திறந்து மாணவர்களின் அறிவை மேலோங்கச் செய்வார். இப்படியில் மாணவர்கள் இரண்டாம் படியில் ஆசிரியர் விதியை விளக்கும் வகையில் செய்யுளை எழுதியவரோடு தொடர்புபடுத்தி செய்யுள் வரிகளை அறிமுகம் செய்வார். அச்செய்யுள் வரிகள் ஒவ்வொன்றாக மின்னட்டையில் மிக அழகாக இடம்பெற்றிருக்கும். அவ்வரிகள் கதவு திறக்கும் வண்ணம் பெட்டிக்குள் பெட்டியில் காணப்படும்.
மேலும், மூன்றாம் படியில் ஆசிரியர் 'மாசில் வீணையும்...' எனத் தொடங்கும்
செய்யுளுக்கான பொருளைக் கற்றுத்தருவார். இப்படியில் ஆசிரியர் மாணவர்களுக்குப் பொருள் தெளிவாகப் புரியும் வகையில் மின்னட்டையை மறுபடியும் காண்பித்து பெட்டியைத் திறக்க சொல்வார். இப்பாடத்தில் மதிப்பீடு மிகவும் விளைப்பயன்மிக்கதாக அமையும். இதுவரையில் பயிற்றுத்துணைப்பொருள் துணைக்கொண்டு பாடமும் நடத்தி மதிப்பீடும் செய்வது மிகவும் அரிது என்பர். ஆனால், தயாரிக்கப்பட்ட பயிற்றுத்துணைப்பொருள் இச்செய்யுளையும் அதன் பொருளையும் மாணவர்கள் சரிவர புரிந்துகொண்டனர் என்பதனைத் தெளிவுப்படுத்தும் வகையிலான மதிப்பீடுகள் அமையும். மதிப்பீடாக மாணவர்களுக்காக இறுதி பகுதி திறக்கப்படும்.
இறுதி பகுதியில் 'மாசில் வீணையும்...' எனத் தொடங்கும் செய்யுளின் பொருளை
உணர்த்தும் கதை ஒன்றனை சிறு உரையாடலோடு வழங்கலாம். படத்தோடு வழங்கப்பட்ட உரையாடலைத் துணையாகக்கொண்டு மாணவர்கள் சுயமாகக் கதை ஒன்றனைத் திறம்பட அமைத்துக் காட்டுவர். இதன் மூலமாக ஆசிரியர் மாணவர்களைச் சுலபமாக மதிப்பீடு செய்துவிடலாம். இது போன்ற மதிப்பீட்டு நடவடிக்கைகள் மூன்று நிலை மாணவர்களுக்கும் பொருத்தமாக அமையும். முடிவின்போது ஆசிரியர் பயிற்றுத்துணைப்பொருள் மாணவர்களிடமே வழங்கி கிடைத்த அனுபவத்தையும் அவர்களின் மனநிலையையும் அறியலாம். அவ்வகையில், முழுப்பாடத்தையும் சிறப்பாக வழிநடத்த இப்பயிற்றுத்துணைப்பொருள் பேருதவியாக அமையும்.
1.4.4 மற்ற விவரங்கள்
புத்தாகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்: தனித்தனியாக உருவாக்கப்பட்ட
பயிற்றுத்துணைப்பொருட்கள் விரிவுரையாளரின் வழிகாட்டலோடும் வலையொளி குறிப்புகளோடும் ஒன்றிணைக்கப்பட்டன. தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மின்னியலில் பயிற்றுத்துணைப்பொருளை உபயோகிக்கும் வழிவகைகளைக் கண்டறிந்தோம்.
புத்தாகத்தைச் செயல்படுத்திய முறை: எப்பொழுதும் போன்று கல்லூரியில் இல்லாதிருந்த
காரணத்தினால் வீட்டிலிருந்த படியே படைப்புகளைக் குழுமுறையில் அளவளாவி தயாரித்தோம். முகநூல், வலையொளி, படவரி போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து ஆர்வத்தை தூண்டும் வகையிலான பின்னூட்டல்களைப் பெற்றோம். இவையாவும் அறிக்கையைத் தயாரிக்கும்போது சான்றுப்பூர்வமான ஆவணங்களாக அமையப்பெற்ற என்பது குறிப்பிடத்தக்கது.
செலவுகள்: நவீன காலக்கட்டத்தில் பொருட்கள் பலவாறாக இருப்பினும் இறைவன் அளித்த
பரிசாகத் தொழில்நுட்பம் இருக்குமாயின் மின்னியல் வடிவிலேயே பலவாறான பயிற்றுத்துணைப்பொருட்களையும் செயற்பாங்குகளையும் தயாரித்தோம். வீட்டில் இருந்ததால் மறுபயனீடு பொருட்களான தாட்கள், வண்ணம் தீட்டும் கருவிகள், குறியீட்டு தூவல், பசை, ரிப்பன்கள் போன்றவற்றைக் கொண்டே இப்பயிற்றுத்துணைப்பொருட்களை உருவாக்கினோம். இதை வலுப்படுத்த மடிக்கணிணியும் திறன்பேசியும் இணைய வசதியும் மிகுதியாக தேவைப்பட்டன.
புத்தாக்கத்தை ஆதரிக்கும் பின்னூட்டங்கள்: சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட
காணொலி மக்களிடையே நல்ல வரவேற்பையும் கருத்தாடலையும் பெற்றது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. சுமார் நான்கு வாரங்கள் அல்லது ஒரு மாத காலக்கட்டத்தில் இக்காணொலிக்குக் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை அளவிட முற்பட்டோம். மூன்று முக்கிய சமூக வலைத்தளங்களான முகநூல், படவரி, வலையொளி போன்றவற்றில் இக்காணொலி பதிவேற்றம் கண்டது. படவரியில் பதிவேற்றம் செய்த இக்காணொலிக்கு மொத்தம் 112 லைக்ஸ், 125 பார்வையாளர்கள், 2 பின்னூட்டல்களும் கிடைக்கபெற்றன. வலையொளியிலும் முகநூலிலும் ஏறத்தாழ அமோகமான வரவேற்பே கிடைக்கப்பெற்றது எனலாம். ஆதரிக்கும் வகையில் ‘தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நிலைக்கேற்றவாறு பயிற்றுத் துணைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன’, ‘மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டவல்லது, அருமையான காணொலி’, ‘தங்களின் படைப்புகள் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக அமையக்கூடும்’ போன்ற பின்னூட்டல்கள் பலரிடமிருந்து கிடைக்கப்பெற்றன.
1.5 சேர்க்கப்பட்ட மதிப்பு
1.5.1 செயல்படுத்திய புத்தாக்கத்தின் வழி கிடைத்த செயல்திறன் / சேமிப்பு
உருவாக்கப்பட்ட ஆக்ககரமான தொழில்நுட்ப ரீதியிலான பயிற்றுத்துணைப் பொருளானது
மறுபயனீடு பொருள்களான ‘காட்போட்’ அட்டை, காகிதம், பசை, தூவல்கள், ஒட்டுதாள் போன்ற பொருள்களினால் செய்யப்பட்டதால் எங்களுக்கு அதிக செலவு ஏற்படவில்லை. சிக்கனமான முறையில் இப்பயிற்றுத்துணைப்பொருட்களை உருவாக்க இயன்றது என்றே கூறலாம். பயிற்சி ஆசிரியர்களிடையே செயலாற்றும் திறனும் பணிகளைச் செவ்வனே முடிக்கும் திறனும் உயர்ந்தது.
1.5.2 மனித வள சேமிப்பு
இம்மாதிரியான பயிற்றுத்துணைப்பொருட்களைத் தயாரிக்க ஒருவர் அல்லது இருவர்
போதும் என்பதே நிதர்சனம். குறைந்தது ஒருவரால் கூட இப்பயிற்றுத்துணைப் பொருளை உருவாக்க இயலும். பயிற்சி ஆசிரியர்கள் நீண்ட நேரத்திற்கு இப்பணியைச் செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்பதனை இப்பயிற்றுத்துணைப்பொருள் தயாரிப்பின் வாயிலாக உணரப்பெற்றொம். எனவேதான், அதிகமான மனித வள பயன்பாட்டின்றி மனித சக்தியையும் கட்டுப்பாட்டினும் வைத்துக்கொள்ளலாம் என்பதனை இப்பயிற்றுத்துணைப்பொருள் உணர்த்தியது.
1.5.3 நேர சேமிப்பு
இப்பயிற்றுத்துணைப்பொருளைத் தயாரிக்க ஒரு வாரக்காலக்கட்டமே போதுமானது.
அதுமட்டுமின்றி, ஆசிரியர் பல்வகைச் செய்யுளினை மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் வரி, பொருள், கதை, தன்மை என பலவாறான அறிவுச்சுடர்களை வழங்க இப்பொருள் ஏதுவாக அமையும். ஏனெனில், ‘All-In-One’ எனப்படுகின்ற அனைத்து காரியத்தையும் ஒரே பொருள் மேற்கொள்ளக்கூடிய தன்மையையும் வல்லமையையும் உடைய பொருளாகக் கருதப்படுகின்றது.
1.5.4 வேலை செயல்முறை / வேலை சுழற்சியைக் குறைத்தல்
‘என் தமிழ் லெ வண்ணம்’ எனும் பெயரிலான பயிற்றுத்துணைப்பொருட்களை உருவாக்க
ஒன்றிற்கும் மேற்பட்ட செயல்முறை அல்லது வேலை சுழற்சி தேவைப்படாது என்பதே உண்மை. மிக எளிமையான வழியில் இப்பயிற்றுத்துணைப்பொருள்களைத் தயாரிக்கக்கூடும். இப்பயிற்றுத்துணைப் பொருள்களை உருவாக்கியப் பின்னர் விரிவுரையாளரின் விருப்பத்திற்கிணங்க மேலோட்டமாக சிற மாற்றங்களைச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடலாம்.
1.5.5 செயல்திறன் மேம்பாடு
குறித்த நேரத்தில் மற்றவர்களின் மீது பணியைத் திணிக்காது குறைந்த செலவில் நிறைவான
வேலையைச் செய்ய முனைந்தது. மூன்றாம் ஆண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ஆசிரியர் தயாரிக்கும் பயிற்றுத்துணைப்பொருள் ஒத்துப்போகுமாயின் அதனை எளிதில் கற்று மொழிவளம் பெறவும் ஆளுமையை மேம்படுத்தவும் முடியும். ஆகவே, செயல்திறன் மேம்பாடு என்பது இப்பணியில் ஆசிரியர்களிடையே மிக தெள்ளத் தெளிவாகவே புலப்படுகின்றது.
1.6 புத்தாக்கத்தின் தாக்கம்
1.6.1 சமூகத்தினர் மத்தியில் எளிமையான கற்றல் நிலையை ஏற்படுத்துதல்
இந்தப் பயிற்றுத்துணைப் பொருளைப் பயன்படுத்தி பயிற்சி ஆசிரியர்களால்
மாணவர்களுக்கு எளிமையாகச் சில பாடங்களைக் கற்று கொடுக்க இயலும். செயல்படுத்த எளிமையாக இருக்கும் இந்தப் பயிற்றுத்துணைப் பொருள் பயன்படுத்த சுலபமாக அமைகிறது. பயிற்சி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் இந்தப் பயிற்றுத்துணைப் பொருளைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு பாடங்களைக் கற்று கொடுக்கலாம். உருவாக்கவோ பயன்படுத்தவோ எளிமையாக இருக்கும் இந்தப் பயிற்றுத்துணைப் பொருள் பல வண்ணங்களால் உருவாக்கப்பட்டதால் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் முழு கவனத்தையும் வழங்கி தாங்கள் கற்றப் பாடங்களை நீண்ட கால நினைவாற்றலில் வைத்து கொள்ள இப்பயிற்றுத்துணைப் பொருள் உதவுகிறது. பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்று கொடுத்து சிறப்பான முறையில் அவர்களைக் கற்க வைக்க முடியும்.
1.6.2 சமூகத்தினர் மத்தியில் திருப்திகரமான நிலையை அதிகரித்தல்
பெற்றோர்கள் அதிகமான நன்மை அடைகிறார்கள். பல நன்மைகளை வழங்கும் இந்தப் பயிற்றுத்துணைப் பொருளால் அவர்கள் பத்தியில் திருப்தி ஏற்படுகிறது. வழக்கமாக மாணவர்கள் பாடம் என்று வந்துவிட்டால் சலிப்பு தன்மையை வெளிபடுத்துவார்கள். ஆனால், இப்பயிற்றுத்துணைப் பொருளைப் பயன்படுத்தி மாணவர்களின் முழு கவனத்தயும் ஈர்த்து கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெற உதவ முடியும். பயிற்சி ஆசிரியர்கள் தங்களின் திறமையை வளர்க்கவும் குறுகிய காலத்தில் பயன்மிக்க கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற பயிற்றுத்துணைப் பொருளை வழங்குவதால் அவர்கள் மத்தியில் ஒரு திருப்திகரமான நிலை ஏற்படுகிறது. பெற்றோர்களுக்கும் திருப்திகரமான நிலையை இந்தப் பயிற்றுத்துணைப் பொருள் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பிள்ளைகள் விளையாட்டின்வழி பாடங்களை மன அழுத்தமின்றி கற்பதால் அவர்கள் மனமகிழ்வோடு இருப்பார்கள்.
1.7 புத்தாக்கம் நன்மைகளின் சிறப்பியல்பு அம்சங்கள்
1.7.1 சமூகம் மற்றும் வெளி நிறுவனத்தின் ஈடுபாடு
அதிகமான பணத்தைச் செலவு செய்து பயிற்றுத்துணைப் பொருளை உருவாக்க வேண்டிய
நிலை இல்லாமல் மிகவும் எளிமையான முறையிலும் உருவாக்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பழைய தாட்களை வைத்தும் சில வண்ணங்களையும் வைத்தும் குறுகிய காலத்தில் சுயமாக உருவாக்க முடியும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மறு சுழற்சியில் உருவாக்கும் இந்தத் தரமான பயிற்றுத்துணைப் பொருள் அனைவராலும் ஏற்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் அமலாக்கத்தில் வரும்.
1.7.2 தொடர்புடைய பிற கருத்துகள்
இந்தப் பயிற்றுத்துணைப் பொருளானது மாணவர்களிடையே மனமகிழ்வான கற்றலை
ஏற்படுத்தி பாடங்களில் ஈடுபாடும் அதனால் பாடங்களில் சிறந்த தேர்ச்சி அடைய முடிகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உருவாக்கும் பயிற்றுத்துணைப் பொருள் பாரமாக இல்லாமல் அவர்களின் மனநிலை அறிந்து இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒன்றாக அமைய இது போன்ற பயிற்றுத்துணைப் பொருள் உதவுகின்றன.
1.8 முடிவுரை
பயிற்றுத்துணைப் பொருள் என்றும் கூறும்போது ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும்போது
துணையாக இருக்க வேண்டும். அந்த நிலையில் மாணவர்களின் நிலையை அறிந்து இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் புத்தாக்கச் சிந்தனையுடனும் படைப்பாற்றலுடனும் செயல்படும் வகையில் நாங்கள் இப்பயிற்ருத்துணைப் பொருளை உருவாக்கியுள்ளோம். அனைத்து நிலை மாணவர்களும் முழுமையாக தெளிவான முறையில் பாடத்தைக் கற்க இந்தப் பயிற்றுத்துணைப் பொருள் மிக பெரிய பங்கை வகிக்கிறது. மாணவர்கள் கற்கும் பாடங்கள் அவர்களின் வாழ்க்கையிலும் பயனாக அமைய வேண்டும் என்பதை ஒர் ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். அந்த நிலையில் இருக்கும் நாங்கள் இதனைக் கருத்தில் கொண்டு உருவாக்கிய பயிற்றுத்துணைப் பொருளின் வழி கற்பிக்கும் பாடங்கள் அனைத்தும் கல்வியில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தவும் இந்தப் பயிற்றுத்துணைப் பொருளை உருவாக்கியுள்ளோம்.