You are on page 1of 9

திருக்குறள் -மொழியாளுமை

முனைவர் மு. செல்வதுரை


இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனம்
சென்னை. Email:selvacict74@gmail.com
1. முன்னுரை:
தமிழில் உள்ள நூல்களில் சிறப்பிடம் பெற்றநூல் திருக்குறள். இது அடிப்படையில்
ஒரு வாழ்வியல் நூல். மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம்,
பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும்நூல். இந்நூலை
இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயரென்ன என்பதும் தெரியவில்லை.
இவரைப்பற்றிச் செவிவழி மரபாகச் செய்திகள் விளங்குகின்றன. ஆனால் உறுதியான
வரலாறு கிடையாது. வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச் சங்கத்தில்
அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் மற்றவர் துணையோடு
அரங்கேற்றியதாகவும் செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
2. சிறப்புப் பெயர்கள்
ž நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில
சிறப்புப் பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் சிலநூல்களை
சிலர் இயற்றி உள்ளனர். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக
வரையறுக்கப்படவில்லை. திருக்குறளுக்கு முப்பானூல், தெய்வநூல், உத்தரவேதம்,
பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை ஆகிய சிறப்பு பெயர்கள்
வழங்கின்றன. பதினென் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில்
"முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது. "அறம், பொருள், இன்பம்",
ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப்பெயர் பெற்றது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள்வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை.
இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூல் தான்.
ž குறள் வெண்பாக்களால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர்
பெற்றது. "பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால், அல்லது காமத்துப்பால், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள். திருக்குறளை
வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே
உள்ளன.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு” திருக்குறள் - 01
žதமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம்
குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
என்று தமிழ்மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

1
3. மொழிபெயர்ப்பு
ž உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம்
இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்
பட்டுள்ளது.
ž "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
ž மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
ž மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
4. திருவள்ளுவரின் மொழி ஆளுமை
ž திருவள்ளுவரின் மொழி ஆளுமையில் காணப்படும் புதுமையையும்,
திருக்குறளில் காணப்படும் இலக்கண அமைப்புகளைப் பற்றியும் ஆய்வு செய்கிறது.
திருவள்ளுவரின் மொழி ஆளுமையில் உருவான இலக்கண அமைப்புகள் பற்றியும்
ஆய்வுசெய்ய வேண்டியது அவசியமாகும். மொழியை மிகவும் திறமையாகக்
கையாண்ட கவிஞர்களில் திருவள்ளுவரும் ஒருவர். மொழியைக் கையாளும் போது
புதுவிதமான நடையை அல்லது மொழி அமைப்பை உருவாக்க வேண்டியதும்
அவசியமாகிறது. திருவள்ளுவர் புதுவிதமான பொருளைத் தமிழுக்கு அறிமுகம்
செய்து வைக்கிறார். அதன் பயனாகப் புதுவிதமான உணர்த்து முறையையும்
உருவாக்கிக் கொண்டுள்ளார். அறம், பொருள், காமம் என்ற வகைப்பாட்டு முறையை,
முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் திருவள்ளுவர். அதுவரை ‘பொருள்’ என்ற
சொல் தமிழ்க்கவிதை உலகில் பெற்றிருந்து பொருளிலிருந்து மாறி, அரசு, அமைச்சு, நட்பு
முதலான அரசு தொடர்புடைய கருத்துக்களைக் கூறும் இயலாக மாற்றம் அடைகிறது.
ž அகப்பொருள் கோட்பாடு ‘காமம்’ என்ற சொல்லின் மூலம் வேறுபார்வையில்
வெளிப் படுத்தப்படுகிறது. அகம்-புறம் என்று அமைந்திருந்த தமிழ்க்கவிதை உலகில்
ஒருமரபு மாற்றத்தை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர். அறம் என்ற ஒருகருத்தியலைக்
கொண்டு துறவறம், இல்லறம் என்ற பாகுபாட்டில் அதை அமைத்துள்ளார்.
திருக்குறளில் பரவலாக இடம்பெற்றுள்ள சொற்கள் என்பதால் இவை எல்லாவற்றுக்கும்
ஏற்ற எடுத்துக்காட்டுகள் தருவது விரிவாக்கிவிடும். ஏனெனில் திருக்குறள்
அந்தஅளவுக்கு மக்கள்மயமான இலக்கியமாகிவிட்டது. இவையெல்லாம்
திருவள்ளுவரின் முத்திரைபதிந்த சொற்கள். இச்சொற்களைக்கண்டாலே
இடம்பெறுவது திருவள்ளுவரின் கவிதைகளில் என்று கூறிவிடலாம்.
ž திருவள்ளுவரின் கவிதையாக்கத்தில் குறிப்பாகச் சுட்டிக்காட்டத்தக்க “மக்களே
போல்வர் கயவர்” (1071) “அச்சமே கீழ்களது ஆசாரம்” (1075) “அறத்திற்கே அன்பு சார்பு
என்ப” (76) “வறியார்க்கு ஒன்று ஈவதே” (221) முதலிய இடங்களில் சிறப்பான முறையின்
பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டலாம்.
ž திருக்குறளில் அமைந்துள்ள இலக்கண அமைப்புகளை ஆராய வேண்டிய
அவசியம் இலக்கண ஆசிரியர்களுக்கும் உரையாசிரியர்களுக்கும் இருந்தது.
அதுபோல் குறளுக்கு உரை இயற்றிய உரையாசிரியர்களுக்கும் அவசியம் இருந்தது.
உரையாசிரியர்களில் பரிமேலழகர் இந்தப்பணியை செவ்வனே செய்துள்ளார்.

2
பரிமேலழகர் உரையில் மிகுதியான இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார் என்ற
குற்றச்சாட்டும் உள்ளது.
திருக்குறளைப் புரிந்துகொள்ளவும் அதற்குப்பொருள் வரையறை செய்யவுமே
பரிமேலழகர் அதிக அளவில் இலக்கணக் குறிப்புகளைக் கூறியுள்ளார் என்பதை
ஆழ்ந்து நோக்கின் புரிந்து கொள்ளலாம். மேலும் திருக்குறளின் இலக்கண
அமைப்பினைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதற்கு ஏற்றமுறையில் பொருள் கூறுவது
இயலாது என்பதையும் பரிமேலழகர் அறிந்திருந்தார்.
ž மொழி, பொருள் ஆகிய இரண்டு அடிப்படைகளிலும் திருவள்ளுவரின் வடமொழி
அறிவை நன்கு உணர்ந்ததால் பரிமேலழகர் தாமும் அந்த அடிப்படையில் சென்றுள்ளார்
எனலாம். பிற்கால இலக்கண உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகத் திருக்குறளின்
இலக்கண அமைப்புகளைப் பரிமேலழகர் எடுத்துக் காட்டியுள்ளார்.
ž எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய இலக்கணப் பகுதிகளுக்குத் திருக்குறள்
உதாரணமாகத் தரப்படுவதை அறியலாம். சுருக்கமாக இருப்பதாலும் அழகாக
இருப்பதாலும் திருக்குறளை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். அணி
இலக்கணத்தில் பல அணிகளுக்குத் திருக்குறள் உதாரணமாகக் காட்டப்படுவதை
யாவரும் அறிவர்.
ž திருக்குறளில் இலக்கண அமைப்பில் உள்ள புதுமைகளை நன்கு புரிந்து
கொண்டவர்கள் என்ற முறையில் இலக்கண ஆசிரியர்கள் இருவர்
முக்கியமானவர்கள். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நூலாசிரியரான
சுப்பிரமணியதீட்சிதரும், ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியரான
சுவாமிநாததேசிகரும் ஆவர். இவர்கள் இருவரும் வடமொழி, தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் ஆழமான புலமை பெற்றவர்கள் என்பதை இவர்களது நூல்கள்
காட்டுகின்றன.
ž இலக்கணக்கொத்து நூலில் சுவாமிநாத தேசிகர் திருக்குறளில் பல அபூர்வமான
இலக்கண அமைப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இலக்கண விதிகளைப் பற்றிக்
கூறும்போது
ž “பல்கால் பழகினும் தெரியா உளவேல்
ž தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவையார்
ž மூன்றினும் முழங்கும்” இலக்கணக் கொத்து…7
ž என்று தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள இலக்கண விதிகளின்படி
எல்லா நூல்களும் உள்ளன என்று கூற முடியாது.
ž பலமுறை கற்றாலும் தெரியாத இலக்கண அமைப்புகள் தொல்காப்பியம்,
திருக்குறள், திருக்கோவையார் ஆகிய மூன்று நூல்களிலும் உள்ளன என்று சுவாமிநாத
தேசிகர் கூறுகிறார். மேலும் இந்த மூன்று நூல்களிலும் உள்ள வடமொழி இலக்கண
அமைப்புகள் தமிழ்மட்டும் அறிந்தவர்களுக்குப் புலப்படாது என்றும் இவற்றைச் சரியாக
அறிய வடமொழி அறிவு அவசியம் என்றும் கூறுகிறார்.

3
ž தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய இந்த மூன்று
நூல்களிலும் வடமொழி அமைப்புகள் சில வந்துள்ளன என்று சுவாமிநாத தேசிகர்
கூறுகிறார்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” திருக்குறள் - 01
ž இதில் ‘ஆதி பகவன்’ என்பது இரு சொல்லும் வடமொழியாக அமைந்த பண்புத்
தொகை என்று சுவாமிநாத தேசிகர் கூறுகிறார்.
“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற் பவை” திருக்குறள் - 636
ž என்பதில் அதிநுட்பம் என்பது மிகுதிப் பொருள் தரும் முன்மொழியைப் பெற்ற
அவ்வியயீபாவ சமாசன் என்று சுப்பிரமணிய தேசிகர் கூறுகிறார்.
ž திருக்குறளில் வரும் வடமொழி இலக்கண அமைப்புகள் சில சுட்டிக்காட்டப்
பட்டன. இனி திருக்குறளில் உள்ள அரிதான சில இலக்கணக் கூறுகள் எடுத்துக்காட்டப்
படுகின்றன.
5. ஒருசொல் உடன்பாட்டு வினையாகவும் எதிர்மறை வினையாகவும் வருதல்
“பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்” திருக்குறள் - 196
ž திருக்குறளில் எனல் என்ற ஒரு வினை, முதலடியில் ‘மகன் எனல் - மகன் என்று
சொல்லாதே’ என எதிர்மறையாகவும், இரண்டாம் அடியில், ‘மக்கட் பதடி எனல்-மக்களில்
பதர் என்று சொல்லுக’ என உடன்பாடாகவும் வருகிறது.
6. பிரித்துக் கூட்டல்
ž ஒரு அடிப்படையில் ஒற்றுமை உடையவற்றைத் தொகுத்துச் சொல்லும் போது
அவற்றில் ஒன்றை ஒருகாரணம் பற்றிப் பிரித்துக்காட்டுதல் ஒருவகையாகும். இதைச்
சுப்பிரமணிய தீட்சிதர் வடமொழியின் அடிப்படையில் விளக்குகிறார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” திருக்குறள் - 50
ž வையத்தில் வாழ்பவரோடு சேர்த்துச் சொல்லி, பின் பிரித்துத் தெய்வத்துடன்
வைத்தல் என்பது பிரித்துக்கூட்டல் என்னும் முறையாகும். இது வடமொழியில் பரவலாக
அமைந்துள்ளது.
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” திருக்குறள் - 381
ž இவை ஆறும் உடைய மற்றவர்களோடு கூட்டி பின், ‘அவர்களில் ஏறு’ என்று
பிரித்தலால் இது கூட்டிப் பிரித்தல் எனப்படுகிறது.
7. மூன்றாம் வேற்றுமை உருபு வேறுபொருளில் வருதல்
ž மூன்றாம் வேற்றுமை உருபு கருவி, கருத்தா, உடனிகழ்வு ஆகிய மூன்று பொருளில்
வரும் என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இவை அல்லாத வேறுபொருளிலும் ஒடு,
உருபு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அவை வினையின்மை, வேறுவினை, அதனொடு

4
மயங்கல், ஒப்பு, அல்ஒப்பு, ஒப்பு வேறுபாடின்மை, கொண்டு என்னும் எச்சப்பொருள்
முதலியவை என்று கூறப் பட்டுள்ளது. இவற்றில் வேறுவினை, அதனொடு மயங்கல்,
ஒப்பு, அல்ஒப்பு, ஒப்பு, கொண்டு ஆகிய பொருள்களில் திருக்குறளில் ஒடு உருபு
வந்துள்ளது. அவை வந்துள்ள இடங்களையும் உரையாசிரியர்கள் அவற்றுக்குக்
கொடுத்துள்ள விளக்கங்களையும் விரிவாக நோக்குதல் வேண்டும்.
7. அ. வேறுவினை
“கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்” திருக்குறள் - 1235
ž என்ற குறளில் தொடியொடு தோள் என்று மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு
வந்துள்ளது. ஆனால் இங்கு உடனிகழ்வுப் பொருண்மை இல்லை. ஏனெனில் வாடுதல்
தோளுக்கு மட்டும் உரியவினை, தொடிக்கு வாடுதல் இல்லை, நெகிழ்தலே உண்டு.
தொடி நெகிழ்ந்தன தோள் வாடின என்றே இக்குறள் பொருள்படுகிறது. இரண்டையும்
ஒடு என்ற உருபு கொண்டு கூறப் பட்டிருந்தாலும் இங்கு ஒடு, உடனிகழ்வுப் பொருளில்
அல்லாமல் வேறுவினைப் பொருளில் வந்துள்ளது.
7. ஆ. அதனொடு மயங்கல்
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்” திருக்குறள் - 1121
ž இதில் ஒடு வேற்றுமை உடனிகழ்வுப்பொருளில் வரவில்லை. பாலையும் தேனையும்
பிரிக்க முடியாது. எனவே இது உடனிகழ்வு அன்று. அதனொடு மயங்கல் என்ற
பொருளில் வந்துள்ளது. (உடனிகழ்வில் வரும் இரண்டையும் பிரிக்க முடியும். (கலத்தல்)’
வாளொடு முன் தோன்றி மூத்தகுடி’ என்பதில் வாளையும் அதை ஏந்தியவனையும்
பிரிக்க முடியும்.)
7. இ. ஒப்பு அல் ஒப்பு
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்” திருக்குறள் - 410
ž என்ற குறளில் ‘விலங்கொடு மக்கள்’ என ஒடு உருபு உடனிகழ்வுப் பொருளில்
அல்லாமல் விலங்கையும் மக்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கூறுவதாக வந்துள்ளதால்
‘ஒப்பு அல் ஒப்பு’ ஆகும்.
7. ஈ. ஒப்பு
` “செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து” திருக்குறள் - 413
என்ற குறளில் ‘கேள்வி உடையார் தேவரொடு ஒப்பர்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே
இங்கு ஒப்புப் பொருளில் ஒடு வேற்றுமை வந்துள்ளது.
7. உ. கொண்டு என்னும் எச்சம்
ž “வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு” திருக்குறள் - 552

5
ž என்ற குறளில் ‘வேல்கொண்டு நின்றான்’ என்று பொருள்படுவதால், இங்கு ‘ஒடு’
உருபு ‘கொண்டு’ என்ற எச்சப்பொருளில் வந்துள்ளது. இதுவரை ‘ஒடு’ எனும் வேற்றுமை
திருக்குறளில் பழைய இலக்கண நூல்களில் கூறப்பட்டதற்கு மாறாக நான்கு விதமான
புதுப்பொருள்களில் வந்துள்ளமை காட்டப்பட்டது.
ž உ. 1. உருபு மயக்கம்
ž ஒருவேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் வேறு வேற்றுமைஉருபு வருவதை
உருபு மயக்கம் என்பர். இதில் உருபுமாறி வந்தாலும் பொருள் மாறாது.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது” திருக்குறள் -
102
ž இதில் ‘ஆல்’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபு ‘காலத்துக்கண் செய்த நன்றி’ என
ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது. (ஏழாம் வேற்றுமை உருபு வரவேண்டிய
இடத்தில் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது.)
ž உ. 2. தடுமாறு உருபுகள்
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” திருக்குறள் -
167
ž இந்தக் குறளில் ‘உடையானை’ எனவும் ‘தவ்வையை’ எனவும் இரண்டு
இடத்திலும் இரண்டாம் வேற்றுமையாகிய ஐ உருபே வந்துள்ளது. ஆனால் இத்தொடரில்
பொருள்படும் போது, ‘உடையானைத் தவ்வைக்குக் காட்டிவிடும்’ எனவும்,
‘உடையானுக்குத் தவ்வையைக் காட்டிவிடும்’ எனவும் என இரண்டாம் வேற்றுமையும்
நான்காம் வேற்றுமையும் இடம்மாறி வந்துள்ளன.
ž உ. 3. முதல்நிலைத் தொழிற்பெயர், முன்னிலை வினைமுற்று.
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை” திருக்குறள் - 1151
ž இதில் ‘உரை’ என்ற முதல்நிலைத் தொழிற்பெயர், ‘உரைக்க’ என்ற பொருளில்
முன்னிலை வினைமுற்றாக வந்துள்ளது.
ž உ. 4. முதல் நிலை வினை, பலர்பால் வினை முற்றாதல்
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்” திருக்குறள் -
813
ž இக்குறளில் ‘நேர்’ என்ற சொல், ‘நேர்வர்’ என்ற பொருளில் பலர்பால் வினைமுற்றாக
வந்துள்ளது.
8. தன்வினை பிறவினை
ž வினைச் சொற்கள், தன்வினையாகவோ, பிறவினையாகவோ வரும். சில
இடங்களில் ஒரே சொல் தன்வினையாகவும் பிறவினையாகவும் வருதல் உண்டு.
“பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

6
நட்பாடல் தேற்றா தவர்” திருக்குறள் - 187
ž என்பதில், ‘தேறாதவர்’ என்ற சொல், ‘தேறாதவர்’ எனவும், ‘தேற்றாதவர்’ எனவும்
தன் வினையாகவும் பிறவினையாகவும் இருவகையாகவும் வந்துள்ளது. (இக்குறளில்
தேறாதவர் என்று தன்வினைப் பொருளில் வரவேண்டும். ஆனால் இதில் தேற்றாதவர்
எனப் பிறவினைப் பொருளில் வந்துள்ளது.)
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு” திருக்குறள் -
604
ž இதில் ‘மடிந்து’ என்றுள்ள வினைமுதல் நிலை திரிந்து, ‘மடிவித்து’ எனப்
பிறவினையாக மாறி உள்ளது என்று இலக்கணக்கொத்து (201) கூறுகிறது. (சோம்பல்
குடியை மடிவிக்கும் என்பது பொருள்)
“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்” திருக்குறள் - 171
ž என்ற குறளில், ‘குடிபொன்றி’ என்ற முதல்நிலை வினை திரிந்து, ‘குடியைப்
பொன்றுவித்து’ எனப் பிறவினையாக வருகிறது.
9. செயப்பாட்டு வினை
ž திருக்குறளில் சிலஇடங்களில் செயப்பாட்டுவினை, செய்வினை போன்று
அமைந்துள்ளது. அவற்றைச் செயப்பாட்டு வினையாகக் கொண்டால் தான்
பொருள்கொள்ள முடியும். தமிழில் செயப்பாட்டு வினைத்தொடரில் ‘படு’ என்ற சொல்
வரும். அத்துடன் ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் வரும். இவற்றைக்கொண்டு
‘பொன்னால் செய்யப்பட்ட வளை’ என்பது போலச் செயப்பாட்டு வினைவாக்கியம்
அமையும்.
“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை யுற்ற குடி” திருக்குறள் - 888
ž என்ற குறளில், ‘பொருத பொன்’ என்று உள்ளது. ‘அரத்தாற் பெரப்பட்ட பொன்’
என்று ‘படு’ என்ற சொல் இல்லாமல், செயப்பாட்டு வினையாக வந்துள்ளது. உட்பகை
அற்ற குடி, அரத்தாற் பெரப்பட்ட பொன்போலத் தேயும் என்று இதற்குப் பொருள் கொள்ள
வேண்டியுள்ளது.
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” திருக்குறள் -
41
ž இதில் ‘இல்வாழ்வான் எனப்படுவான்’ என்று படுசொல் பெற்று வந்துள்ளது என
இலக்கணக் கொத்து கூறியுள்ளது. (ப. 209).
“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்” திருக்குறள் -
921

7
ž என்ற குறளில் ‘உட்கார் ஒளியிழப்பர்’ என்றே பொருள்படுகிறது. இதில் ‘படு’ சொல்
இருந்தும் ‘படு’ பொருள் வரவில்லை என்று இலக்கணக் கொத்து கூறுகிறது. (ப.211)
ž இதுவரை கூறியவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
திருக்குறளில் மொழி அமைப்புகள் பல காணப்படுகின்றன. இவற்றை இலக்கண
விதிகள் எனலாம். ஓர் இலக்கிய ஆசிரியர் என்ற வகையில் இலக்கண அமைப்புகளைக்
கொண்டு நூல் இயற்ற அவருக்கு உரிமை உண்டு. அதேநேரத்தில், இலக்கிய
ஆசிரியராக இருப்பதால், தான் கையாளும் இலக்கண அமைப்புகளை எடுத்துக்
கூறுவதற்கான வாய்ப்பும் அவருக்கு இல்லை. அவ்வாறு இலக்கண அமைப்புகளைத்
திருவள்ளுவர் அமைத்ததற்கான காரணங்களையும் நோக்குதல் வேண்டும். எந்த ஒரு
காரணத்தால் அல்லது கட்டாயத்தால் திருவள்ளுவர் இவ்வாறு அமைத்தார்
என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
ž இந்த வகையான அமைப்புகள் இலக்கண ஆசிரியர்களிடமும்,
உரையாசிரியர்களிடமும், திருக்குறள் உரையாசிரியர்களிடமும் பலவிதமான
சிந்தனைகளை உருவாக்கியுள்ளன. முதலாவதாக குறளுக்கு அதன் நிலையிலேயே
நின்று பொருள்கொள்வது இவ்வாறு பொருள் கொள்ள முடியாத இடங்களில் இடையே
சிலசொற்களை பரிமேலழகர் சில குறள்களுக்கு உரைவிளக்கம் தந்துள்ளார். இலக்கண
அமைப்பில் இவை தமிழ்மொழி அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளதைக் கண்டு அதற்கு
இலக்கணம் கூறுதல். இந்தப்பணியையும் பரிமேலழகர் செய்துள்ளார். திருக்குறளில்
உள்ள இலக்கண அமைப்புகளையும் எடுத்து விளக்கினால் மட்டுமே குறள்களுக்குச்
சரியாகவும் முழுமையாகவும் பொருள்கொள்ள முடியும் என்பதைப் பரிமேலழகர் நன்கு
விளங்கிக் கொண்டுள்ளார்
“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை யுற்ற குடி” திருக்குறள் - 888
ž என்ற குறளில், ‘அரத்தால் பெரப்பட்ட பொன்போலத் தேயும்’ என்று அரத்தைக்
கருவியாக்கி, பொன்னைச் செயப்படு பொருளாக்கினால் தான் சரியாகப் பொருள்
கொள்ள முடியும். அவ்வாறு செயப்படு பொருளாக்குவதற்குப் ‘பெரப்பட்ட’ என்று ‘படு’
சொல்லை வருவிக்க வேண்டியுள்ளது.
10. திருக்குறளைப்பற்றி சில தகவல்.
 முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
 முதல் பெயர்- முப்பால்
 உள்ள அதிகாரங்கள்- 133
 அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
 பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
 காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
 உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
 அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
 திருக்குறளில் உள்ள சொற்கள்-12,000

8
 மொத்த எழுத்துக்கள்- 42,194
 தமிழ் எழுத்துக்கள் 247-இல்,
 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
 இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
 இடம்பெறும் ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்
 இடம்பெறும் ஒரேவிதை- குன்றிமணி
 பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
 இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
 இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
 அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெ எழுத்து - னி
 ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் - ளீ,ங
 இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
 முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
 முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
 முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
 உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
 இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
 கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
 எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
 ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
 ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
 தற்பொழுது செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவன குறுந்திட்டத்தின் மூலம்
திருக்குறளை நரிக்குறவர் பேசும் வாக்கிரிபோலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு
வருகிறது.
ž

You might also like