அந்த மாணவியின் கைகளில் நான் தவழ்ந்து கொண்டிருந்தேன். அவள்
ஒவ்வொரு பக்கமாக என்னைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைக் கடையிலிருந்து வாங்கிய நாள் முதல் அவளுக்கு ஓய்வு நேரங்களில் துணையாக நான் மட்டுமே இருந்தேன்.
மலேசியாவின் தலை சிறந்த எழுத்தாளரான திரு அருணன் அவர்களின்
கற்பனையில் நான் மலர்ந்தேன். நான் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் எனப் பெயரிடப்பட்டேன்.என்னுடலில் மொத்தம் 81 பக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தன.
ஒரு நாள் அக்கடைக்கு ஒரு மாணவி தன் தாத்தாவுடன் வந்திருந்தாள். அவள்
அங்குள்ள புத்தகங்களை எல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இவளாவது என்னை வாங்குவாளா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் என்னை எடுத்துச் சென்று அவள் தாத்தாவிடம் என்னை வாங்கித் தருமாறு கேட்டாள். அவள் தாத்தாவும் அதனை வாங்கித் தந்தார்.
அன்று முதல் அவள் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். எனக்கு
நெகிழி அட்டையைப் போட்டு என் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தாள். ஒரு நாள் அவள் என்னைப் படித்துக் கொண்டிருக்கும் போது அவள் தாயார் அவளை அழைக்கும் ஓசை கேட்டு சமையலறைக்கு ஓடினாள். அவ்வேளையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவளது இளைய தங்கை என்னை நோக்கி வந்தாள்.
என்னைக் கையில் எடுத்து அவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள். அவள்
என்னை என்ன செய்யப் போகிறாளோ என்று என் உள்ளம் படபடத்தது. நான் என் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அப்பொழுது யாரோ என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். “கடவுளே! கடவுளே!” என்று முணுமுணுத்தேன். அப்பொழுது அம்மாணவியின் குரல் கேட்க மெல்ல கண் திறந்து பார்த்தேன். நல்ல வேலை! எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் அவள் என்னைத் தன் தங்கையிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். அன்று முதல் அவள் என்னை எங்கும் தவறவே விடுவதில்லை. என்னைப் படித்து முடித்ததுமே மறவாமல் கண்ணாடி பேழைக்குள் வைத்துக் கண்ணை இமை காப்பது போல் காத்து வருகிறாள்.