You are on page 1of 18

கணினியின் அவசியம்

முன்னுரை – வரவேற்புரை

 அறிவியல் கண்டுபிடிப்பு
 கணினி யுகம்
 இன்றியமையாத ஒன்று
அவசியம்

 வேலையை எளிதாக்குகின்றது
 விரைவாக, சுலபமாக
 நேரம் மிச்சப்படுகிறது
பாதுகாப்பானது

 பதிவு செய்து கொள்ளல்(save)


 தேவைப்படும்  போது பயன்படுத்துதல்
பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது

 கல்வித்துறை
 வங்கி
 மருத்துவம்
தகவல்களைச் சேகரிக்கலாம்

 இணையம்
 உள்நாட்டு வெளிநாட்டுச் செய்தி
 நண்பர்களுடனான உரையாடல்
பொழுதுப் போக்குச் சாதனம்

 கணினி விளையாட்டுகள்
 மனமகிழ்வு ஏற்படுதல்
முடிவுரை

தனிமனிதன் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்காற்றுகின்றது.


கணினியின் பயனை மட்டும் எடுத்துக்கொள்ளுதல்
நன்றி, வணக்கம்.
மொழியணி

1. ஒப்புர வொழுகு
2. வெள்ளம் வரும் முன் அணைப் போடு
3. எவ்வதுறைவது உலகம் உலத்தோடு அவ்வதுறைவது அழகு
4. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதார் அறிவிலாதார்.

 நட் பு
‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால்
அவனைப் போன்று புனிதன் இல்லை’. இதுவொரு பாடலின் வரியாகும். நட்பு என்பது ஒருவர்
தெரியாத வேறொருவரிடம் பழகி, அவரைப் புரிந்து கொண்டு இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு
கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி புரிவதாகும். மேலும், வழி தவறும் பொழுது அன்புடன்
இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு இட்டுச் செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு
என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.
நட்பு நிழலைப் போன்றது; எங்குச் சென்றாலும் நம்முடனே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத்
தொடங்குகிறது என்றால் அவன் வசிக்கும் அண்டை வீட்டிலிருந்தான் என்று கூறலாம். சிறுபிள்ளை
முதல் நட்பு அண்டை வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம்
அடைந்தவுடன் அச்சிறுவனுடைய நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர
பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிட்டுகிறது. நட்பு கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை
விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து
விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் அழியலாகாது அல்லது மறக்க முடியாது.
 நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு நன்மையே தரும். தீயவர்களிடம் கொள்ளும் நட்பு
நம்மைத் தீய வழியில் கொண்டு சென்று நமது வாழ்க்கையே அழித்துவிடும். மேலும்,
தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நீண்ட நாள் நிலத்திருக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன்
பள்ளியில் நன்கு சிறந்து விளங்கும் மாணவனுடன் நட்பு வைத்திருந்தால் அவனுக்குத் தெரியாத
பாடங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். அம்மாணவன் தன் நண்பனிடம் உள்ள
நன்நெறிகளைக் கற்றுக் கொள்வான். தன் நண்பனைப் போல் தானும் சிறந்து விளங்க வேண்டும்
என எண்ணமும் மனத்தில் உருவாகும். அதனால் அம்மாணவன் கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்க வாய்ப்புண்டு.
 ஆனால், தீய மாணவர்களிடம் கொண்ட நட்பானது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
எடுத்துக்காட்டாகப், பள்ளியில் ஒரு மாணவன் தீய நண்பர்களின் நட்புக் கொண்டால் தீய
எண்ணங்கள் மனத்தில் பதியும். பிறகு, வழக்கம் போல் வெண்சுருட்டு, போதைப்பொருள் எனத்
தீய பழக்கங்கள் வந்து சேரும். ‘பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பது போல நாம்
தீயவர்களிடம் நட்பு வைத்திருந்தால் நாமும் தீயவர்களே.
வெறும் சிரித்துப் பேசி மகிழ்வது நட்பாகாது. இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும்போது,
இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். முகம் மட்டும் மலர
நட்புகொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்புகொள்வது உண்மையான
நட்பாகும். திருவள்ளுவர் நட்பைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றால்,
             ‘முகநக நட்பது நட்பன்று: நெஞ்சத்து
              அகநக நட்பது நட்பு’
 தற்போதைய காலகட்டத்தில், ஒருவரிடம் பணம் மற்றும் பேரும் புகழும் இருக்கும் வரைதான்.
அவனிடம் கொள்ளும் நட்பு நிலைத்து இருக்கும். எப்பொழுது பணம் இல்லாமல் தவிக்கிறாரோ,
அவரிடம் கொண்ட நட்பைத் துண்டித்து விடுவார்கள். துன்பக் காலத்தில் கைவிட்டுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட செயல் நட்புக்குக் துரோகம் செய்வதற்குச் சமமாகும். சிலர் ஒருவனிடம் நட்பு
கொள்வது போல் இருந்து, இறுதியில் அவருக்கு ஏதாவது ஒரு தீங்கு செய்து விடுவர். காரியம்
இருக்கும்வரை காலைப்பிடித்துக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் கண்டும் காணாமல் போகும்
பொய்யான நட்பை உடனடியாக விட்டுவிட வேண்டும்.
 மனிதனுக்கு மனிதன் நட்புக் கொள்வது போல் நாட்டுக்கு நாடு நட்பு கொள்ளுதல் வேண்டும்.
நாட்டுக்கு நாடு கொள்ளும்  நட்பு பல வகைகளில் நமக்கு நன்மையே கொண்டுவருகிறது.
நாட்டுக்கு நாடு நட்பு கொள்வதால் உதவி புரியும் மனப்பான்மை, புரிந்துணர்வு மற்றும்
விட்டுக்கொடுக்கும் போக்கையும் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறது. ஏதாவது ஒரு சிக்கல்
ஏற்பட்டால் நட்புறவின் வழி சிக்கலைத் தீர்க்க முடிகிறது. இதனால், நாட்டிக்கு நாடு போர்
நடப்பைத் தடுக்க வழி செய்கிறது. நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பால் வாணிபத்துறையும் மேலும்
வளர்ச்சியடைய துணை புரிகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி கண்டு
வருகிறது.
 சுருங்கக் கூறின், திருவள்ளுவர் கூறும் கருத்து என்னவென்றால்,
         ‘குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
         இனனும் அறிந்துயாக்க நட்பு’ ,
 அதாவது ஒருவனுடைய குணத்தையும் குடிபிறப்பையும், குற்றத்தையும் குறைவற்ற சுற்றதையும்
ஆராய்ந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். பொய்யான நட்பு கொள்ளும் நண்பர்களை
விட்டுவிட வேண்டும்.

வாசி க் கு ம் பழக் கம்


மலேசியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஆராய 1982-இல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வு காட்டிய புள்ளி விவரம் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துவிட்டது என்றே
சொல்ல வேண்டும். ஏனெனில்,  நாம் ஓராண்டில் சராசரி ஒரு பக்கமே வாசிக்கின்றோம். மேலும்
மலேசியாவில் குறைவான நூல்களே வெளியிடப்படுகின்றன. 1987-இல் கொரிய நாடு 44 288
நூல்களை வெளியீடு செய்த வேளையில் நம் நாட்டில் 3 000 நூல்களே வெளியீடு கண்டுள்ளன.
இந்த வருந்ததக்க நிலையை உடனடியாகக் களைதல் அவசியமாகும். அதற்காகத்தான் அரசாங்கம்
வாசிப்புப் பழக்கத்தை ஒரு கட்டாயமாக மாற்றியுள்ளது. இதனால்தான் அரசாங்கம் பள்ளி
மாணவர்களிடம் “நீலாம்” என்ற ஒரு வாசிக்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்திவுள்ளது.
எதிர்காலத்தில் பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கூடங்களில் வாய்ப்புப் போன்ற
நடவடிக்கைகளுக்கு வாசிப்பை ஒரு கட்டாய விதியாக்கிவிடுவார்கள்.
                    ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
                                    மாடல்ல மற்றை யவை’
 என்று நம்முடைய நான்முகனார் தமது திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். ஒருவனுக்கு அழிவு
இல்லாத செல்வமும் செல்வத்திலேயே சிறந்த செல்வமும் கல்வியே என்று இவர் இந்தக் குறளின்
வழி நமக்குச் சொல்கிறார். மேலும் கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் இத்தகைய சிறப்புடைய
ஒரு செல்வம் அல்ல என்றும் இவர் கூறியுள்ளார். நமக்கு இப்படிப்பட்ட ஒரு சிறந்த செல்வமான
கல்வி எப்படிக் கிடைக்கிறது? நாம் வாசிப்பதனால்தானே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க
முடிகிறது. இப்படிப்பட்ட சிறந்த கல்வி வாசிப்புத் திறனால்தானே வளர்கிறது. கல்வியைக்
கற்பதால் நமக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிறது. நாம் வேலை செய்வதால் ஊதியம்
கிடைக்கிறது. மேலும் நம்முடைய எதிர்காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கான மூல
காரணமே நாம் சிறுவயதிலிருந்து பின்பற்றிக் கொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கமே ஆகும்.
 வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயது முதல் நாம் நம்முடைய இளைய தலைமுறைக்குப் பழக்கப்
படுத்தவேண்டும். இந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே
முக்கியப் பங்காற்ற வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் திறமையை உணர்ந்து அவர்கள்
விரும்பிப் படிக்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்கள் படிப்பதற்கான சிறந்த சூழலையும்
உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு வயது பிள்ளைகளுக்கு வாசிக்கத்
தெரியாது. இவர்களுக்குப் பெற்றோர்களே எழுத்துக்களை அறிமுகப்படுத்திச் சொல்லிக் கொடுக்க
வேண்டும். மாணவர்கள் ஒரு பாடப்பகுதியை வாசிக்கும்போது, அவர்கள் சொல் உச்சரிப்பில்
பிழை செய்தால் ஆசிரியர்கள் அப்பிழையைத் திருத்த வேண்டும். இவ்வழிகளைச் சிறுவயது முதல்
குழந்தைகளிடம் பின்பற்ற வைத்தால் நாளடைவில் குழந்தைகளுக்குப் வாசிப்பில் ஆர்வம்
தென்படும். சிறு தென்னங்கன்று ஒன்று இருக்கும் போது நாம் அதற்குத் தினமும் நீர் ஊற்றி
வந்தால் அத்தென்னங்கன்று தென்னைமரமாகியவுடன் நாம் ஊற்றிய நீரை இளநீராகக்
கொடுக்கிறது. அதுபோலத்தான் சிறுவயது முதல் ஒரு பிள்ளையை வாசிப்புத் திறனுடன்
வளர்த்தால் நாளடைவில் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக வானொலி அறிவிப்பாளராக மற்றும்
ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும்  உருவெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
 நாம் வாசிப்பதற்கு நாளிதழ், கதைப் புத்தகம், வார மாத இதழ்கள், போன்றவை நிறைய உள்ளன.
இதைத் தவிர்த்துக் கணினியின் மூலமாகவும் நாம் வாசிக்கலாம். இணையத்திலிருந்து பல
தகவல்களை வாசிப்புத்திறனாலேயே தெரிந்து கொள்கிறோம். நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைச்
சிலர் முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். காலையில் எழுந்தவுடன் நாளிதழைப் படிக்கவில்லை
என்றால் அதைப் பேரிழப்பாகக் கருதுவர். இன்னும் சிலரைப் பார்த்தால் கதைப் புத்தகமே
கதியாய்க் கிடப்பர். இத்தகையோரிடம் அறிவு மேலோங்கி இருக்கும்.
                 ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
                                      கற்றனைத் தூறும் அறிவு’
என்பதைப் போல், மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல்
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு  அறிவு ஊறும். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த
அளவிற்குத்தான் நமக்கு அறிவும் வளரும். நமது அறிவு வளர்ந்தால் கிணற்றுத் தவளையைப் போல்
இல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நாம் வாசிப்பதால் நம்முடைய
சொல் உச்சரிப்பும் வளரும். காலத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கலாம்.
 இறுதியாக, நாம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொண்டால் நாம் எந்த ஒரு தடங்கலும்
இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம். டாக்டர் காதர் இப்ராகிம் போல் ஒரு நல்ல பேச்சாளராக
ஆகலாம். மேலும் நூலை நம்முடைய தோழனாக மாற்றியமைத்துக் கொள்ளலாம். வாசிப்புப்
பழக்கம் நமது நல்ல பண்பாக அமைகிறது. வாசிப்புப் பழக்கத்தின் மூலம் அறிவை
வளர்த்துக்கொள்ள நூல்கள் பெரும்பங்காற்றி வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, நாம்
சிறு வயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க
வேண்டும்.
கணி னி
தற்பொழுது உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கருவி கணினி ஆகும். கணினியின்
பயன்பாடு உலக அரங்கில் பரவிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் கணினியின் பயன் ‘காட்டுத்
தீப்போல்’ பரவி வருகிறது என்பதை மறுக்க இயலாது. நமது முன்னாள் பிரதமர் விடுத்த
“வீட்டிற்கு ஒரு கணினி” என்னும் கோரிக்கையும் இதற்கு ஒரு காரணமாகும். மக்களின் அன்றாட
வாழ்க்கையில் கணினி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, தொழிற்துறை, வியாபாரம் போன்ற
அனைத்துத் துறைகளிலும் கணினி வெற்றிநடை போடுகிறது.
 கணினி மக்களின் வேலைகளைச் சுலபமாக்குகிறது. நாம் நமது பாடங்களுக்குத் தேவையான
வேலைகளைச் செய்யவும் அலுவலகத்தில் தயாரிக்க வேண்டிய அறிக்கைகளைச் செய்யவும் கணினி
தேவைபடுகிறது. நாம் கைகளால் தயாரிக்கும் அறிக்கைகள் சில சமயம் எழுத்து வடிவங்களாலும்
நேர்த்தியின்மையாலும் மனநிறைவை ஏற்படுத்தாது. ஆனால், கணினியால் தயாரிக்கப்படும்
அறிக்கைகளை நாம் நமது நிறைவுக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளலாம். பலவகையான எழுத்து
வடிவங்களையும் வண்ணங்களையும் பயன்படுத்தித் தெளிவாகவும் அழகாகவும் அறிக்கையைத்
தயாரிக்கலாம்.
 கணினி மக்களின் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் சிக்கனப்படுத்துகிறது. நாம் கைகளால்
அறிக்கைகளைத் தயாரிக்கும் பொழுது நமது கைகளுக்குச் சோர்வு ஏற்படுகிறது. மாறாகக்,
கணினியைப் பயன்படுத்தும் பொழுது விரல்களை மட்டும் பயன்படுத்தி விசைக்கருவியை
அழுத்தினால் போதும். அறிக்கை தயாராகிவிடும். அறிக்கைகளைத் தயாரிக்கத் தூவல்,
அழிப்பான், அடிக்கோல், இன்னும் சில பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை
ஏற்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தாமலேயே இவற்றின் பயன்பாட்டைக் கணினி மூலம்
அடையலாம். மேலும் இவற்றை வாங்கும் செலவுகளையும் குறைக்கலாம்.
 அலுவலகங்களில் தேவையான முக்கிய விவரங்களைச் சேமித்து வைக்கவும் பாதுகாக்கவும்
கணினி தோள் கொடுக்கிறது. கணினியில் உள்ள விவரங்களை நம்மால் எளிதாகப் பெற முடியும்.
மேலும் வங்கிகளில் கணினி ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. மக்களின் சேமிப்பு
விவரங்களைக் கணினி துல்லியமாகக் கண்டுபிடிக்கிறது. இதனால், வேலைகள் எளிதாகின்றன.
 கணினி மக்களின் நேரத்தை நல்ல வழியில் செலவிட வகை செய்கிறது. இணையத்தளம் மக்களின்
வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. கணினியில் உள்ள விளையாட்டுகள் வேலை முடிந்து
களைப்புடன் வீடு திரும்புவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும்
குறைக்கிறது. தொழிற்நுட்பம் சம்பந்தமான தகவல்களைப் பெறவும் மக்களின் அறிவை
வளர்க்கவும் கணினி முக்கியப் பங்காற்றுகிறது.தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை
நல்வழியில் செலவிட இவ்வகையான விளையாட்டுகள் துணைபுரிகின்றன.
 கணினி இயந்திரங்களில்  ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்யவும் உதவுகிறது.
தொற்சாலைகளில் இயந்திரங்களைக் கொண்டுதான் அதிக வேலைகளைச் செய்கின்றனர்.
அவற்றில் ஏற்படும் கோளாறுகளுக்குக் கணினியைக் கொண்டுதான் பழுது பார்ப்பர். அந்த
இயந்திரங்களைச் சீராக இயக்குவதும் கணினியே. எனவே, வீடுகளில் மட்டுமல்லாது
தொழிற்சாலையிலும் கணினியின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
 கணினி மக்களின் வாழ்க்கையிலும் அன்றாடத் தேவைகளுக்கும் மிக அவசியமாகும். கணினி
பற்றியும் அதன் இயக்கத்தைப் பற்றியும் நாம் அறிந்து பயன்படுத்தினால் அதன் முழுப்பயனையும்
அடைவோம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
மழை
கடவுளால் நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்கள், பிராணிகள் மற்றும்
தாவரங்கள் செழிப்புடன் உயிர்வாழ மழைநீர் உற்ற தோழனாக இருந்து தோள் கொடுக்கிறது. நமது
நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதற்கு மழை ஒரு முக்கியக் காரணமாக
விளங்குகின்றது. அறிவியல்பூர்வமாகப் பார்த்தோமானால் மழை, கடல் நீரில் இருந்துதான்
உற்பத்தி ஆகிறது என்பதை நாம் அறிய முடியும். வெப்பமான சூழலில் கடல் நீர் நீராவியாக மாறி
வானத்திற்குச் சென்றுவிடுகிறது. வானத்தை அடைந்தவுடன் நீராவி மேகமாக மாறிவிடுகிறது.
மேகக்கூட்டங்களுக்கிடையே ஏற்படும் உரசல்களினால் மேகம் கலைந்து மழையாகப் பொழிகிறது.
பூமியை நனைக்கும் இம்மழைநீர் பல நன்மைகளைத் தாங்கி வருகிறது. நாம் மழையின்
நன்மையை அறிந்து அதனை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
 மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் விவசாயத் துறைக்கு மழை பெரும் சேவையாற்றுகிறது.
ஒரு நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் மழை பெரும் பங்காற்றுகிறது. விவசாயத்
துறையின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது. மழைநீரின்
துணையுடன் செழிக்கும் பயிர்கள் மக்களுக்கு உணவாகி அவர்களை வாழ வைக்கின்றன. இதே
பயிர்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து அவர்களின் வயிற்றுப்பசியைப்
போக்குகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்வதால் நாட்டுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில்
பல இடங்களில் மழை பெய்யாததால் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையில் மடிகின்றனர். மழை
ஒரு நாட்டின் வளப்பத்தை நிர்ணயிக்கின்றது.
 ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை மழையைச் சார்ந்துள்ளது. மழை பொழிவதால் பூமி குளிர்கிறது;
பெய்யாவிட்டால் பூமி வெப்பமாகிறது. அளவுக்கதிகமான வெப்பம் பயிர்களை வாடச் செய்கிறது;
நிலத்தைப் பிளக்கச் செய்கிறது; மனிதர்களுக்குப் பல கேடுகளை விளைவிக்கிறது. வெப்பமான
சூழல் மனிதர்களுக்குப் பல தோல் வியாதிகளைத் தருகிறது. இவ்வெப்பத்ததைத் தணிக்கும் சக்தி
மழைக்கு உள்ளது. மழை பெய்வதால் பூமி குளிர்ச்சியாய் இருக்கும். குளிர்ச்சியான நாடுகளுக்கு
நிறைய சுற்றுப்பயணிகள் வருவார்கள். இதனால் நாட்டின் வருமானமும் பெருகும். நாடு
குளுமையாகவும் வளமுடனும் இருப்பதால் தாவரங்கள் செழிப்புடன் வளர்கின்றன.
ஒரு மனிதன் புவியில் சிறப்புடன் வாழ்வதற்குக் கைகொடுப்பது நீர்தான். உலகில் நீரில்லாமல்
வாழ முடியாது. நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு நீர் பயன்படுகிறது. இந்நீரை
நாம் மழையிலிருந்து பெறுகின்றோம். வாகனங்களைக் கழுவுதல், குளித்தல், குடித்தல் மற்றும்
துணிமணிகளைத் துவைத்தல் போன்ற தேவைகளுக்கு மழை நீர் தேவைப்படுகின்றது. மழை நீரைச்
சேகரித்துத் தாவரங்களுக்கும் பாய்ச்சலாம்.
 2020 இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய நம் நாடு
விவசாயத் துறையிலிருந்து தொழிற்துறைக்கு மாறி வருகிறது. இதனால், நாட்டில்
தொழிற்சாலைகள் நேற்று மழையில் முளைத்த காளான்கள் போல் பெருகிவருகின்றன.
இத்தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மின்சாரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நாட்டின்
பல ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த
அணைக்கட்டுகளும் மழையையே நம்பியுள்ளன. அணைக்கட்டுகளில் நீர் நிரம்பி இருந்தால்தான்
மின்சாரத்தை இலகுவாக உற்பத்திச் செய்ய முடியும். நம் அன்றாட வேலைகளைச் சரிவரச்
செய்வதற்கு ம¢ன்சாரம் தேவை. இதன் விளைவாக உற்பத்தி குறைந்துவிடும். நாட்டின்
பொருளாதாரமும் சரிவடையும். ஆகவே, மழை நீரை நம்பியுள்ள மின்சார உற்பத்தி  நாட்டின்
வளர்ச்சிக்கு மிகமிக அவசியமாகும்.
 சுருங்கக்கூறின், மழை நீர் நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. மழை நீர் நமக்கு உற்ற
தோழனாக விளங்குகிறது. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’, என்பது பெரியோர்
வாக்கு. ஆகவே, மழைநீரை நாம் ஒரு போதும் வீணாக்கக்கூடாது. மழைநீரை நாம் பல
தேவைகளுக்குப் பயன்படுத்தினால் குடிநீர் கட்டணத்தைக் குறைத்துப் பணத்தைச்
சிக்கனப்படுத்தலாம். ஆண்டு முழுவதும் மழை பொழியும் இந்நாட்டில் வாழும் நாம்
இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மழைநீரை நன்முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கையை
மேலும் செழிக்கச் செய்வோம்.

நூ லகம்
‘கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது நம் மூதாதையர்கள் கூறிய அருங்கருத்துகளில்
ஒன்றாகும். அவர்களின் அருள்வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே. நாம் பலதரப்பட்ட நூல்களைக்
கற்பதன் மூலம் சிறந்த அறிஞர்களாகலாம். ஆனால், இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும்
அனைத்து வகையான நூல்களையும் ஒருவரே வாங்கக் கூடியதென்பது சாத்தியமாகக்கூடிய
காரியமா? ஆகவே, இவ்வாறான சிக்கல்களைக் களைவதற்குச் சிறந்த வழி நூலகம்
அமைக்கப்படுவதே ஆகும். இந்த நூலகங்களுக்குச் சென்று பலதரப்பட்ட எழுத்துப் படிவங்களை
வாசிப்பதால் நிறைய பலன்கள் நம்மை வந்து சாறும் என்பது வெள்ளிடைமலையாகும்.
 நூலகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தகுந்த பல தரப்பட்ட புத்தகங்கள் ஆங்காங்கே சீராகப்
பேழையில் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச், சிறுவர்களுக்கான
வண்ணப்படங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள், தொடக்க, இடைநிலைப்பள்ளி
மாணவர்களுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்கள், அரசாங்கத் தேர்வுக்கான மீள்பார்வை மற்றும்
பயிற்சிப் புத்தகங்களும் முறையே வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பொது அறிவை
வளர்ப்பதற்காக நாளிதழ்கள், வார மாத இதழ்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சிய நூல்களும்
நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீராக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள்
நூலகத்திற்கு வருவோரைக் கவரும் வண்ணத்தில் இருக்கும். இன்றைய பெரும்பாலான
நூலகங்களில் கணினி, நகல் எடுக்கும் கருவி, பாட நூல் சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள்
போன்ற வசதிகளும் இருக்கின்றன. மேலும் அமைதியான சூழலில் புழுக்கமில்லாமல் ஆழ்ந்து
படிப்பதற்கு இன்றைய நூலகங்கள் குளிர்சாதன வசதிகளைக் கொண்டு விளங்குகின்றன.
 நூலகங்களுக்குச் செல்வதன் மூலம் நாம் பலவகையான நன்மைகளை அடைகிறோம். அரசாங்கத்
தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அவசியம் நூலகத்தை உற்ற தோழனாக ஆக்கிக்கொள்ள
வேண்டும். தங்களின் மனத்தை ஒருநிலைப்படுத்த அமைதியான சூழலில் புத்தகங்களை ஆழ்ந்து
படிப்பதன் மூலம் கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்வர். இதற்கு முக்கியக் காரணம்
நூலகத்தில் கிடைக்கக்கூடிய அமைதியான சூழலே ஆகும். இதுபோன்ற அமைதியான சூழலை
நாம் வேறெங்கும் பெற இயலாது. இது தேர்வினை எதிர்நோக்கும் மாணவர்கள் தங்கள்
எண்ணங்களை அலைபாய விடாமல் இருக்க வழிவகுக்கிறது.
 காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில்
கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள்
தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள்
தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து
தவிர்த்துக்கொள்ள முடிகிறது. இதன்வழி நாம் நம் நாட்டில் பெருகிவரும் வன்முறை, குண்டர்
கும்பல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூகச்சீர்கேடுகளின்
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இது நம் எதிர்காலத் தலைமுறையினர்
கற்றவர்களாகவும் ஒழுக்கத்தில் ஓங்கியவர்களாகவும் திகழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.
 அதுமட்டுமல்லாமல் நூலகங்களில் உள்ள வார, மாத இதழ்கள் சஞ்சிகைகள் மற்றும்
கலைக்களஞ்சிய நூல்களைத் தினமும் கற்பதன் மூலம் நாம் உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளைச்
சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால், நாம் கிணற்றுத் தவளை போல் இல்லாமல்
வெளியுலகம் அறிந்தவர்களாகத் திகழ்வோம். ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’
என்பதுபோல நாம் வாசிப்பதன் மூலம் நமக்குத் தெரியாத பல விவரங்களைத் தெரிந்து
கொள்வதோடு  நம்முடைய வாசிப்புப் பழக்கத்தையும் வலுவடையச் செய்து கொள்ளலாம்.
 எனவே, நாம் வயது வரம்பின்றி நூலகத்திற்குச் சென்று அங்குள்ள பல எழுத்துப் படிவங்களை
வாசித்துப் பலனடைய வேண்டும். அரசாங்கம் பொது மக்களின் வசதிகளுக்காக நிறுவப்பட்ட
நூலகங்களில் உறுப்பினர்களாகி அங்குள்ள சலுகைகளை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது
நமது அனைவரின் கடமையாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல
நாம் கற்றவர்களாக இருந்தால் எங்குச் சென்றாலும் மதிப்புப்  பெற்றுச் சிறப்புடன் வாழலாம்.
தாய்
மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி மங்கையாய் வாழ்க்கையை
இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை  அடையும்போதுதான்
முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கே
வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
 தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும்
பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய்
தனது இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி
அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே
குறையாது. இரவு பகல் பாராது தாய் தனது குழந்தையைக் ‘கண்ணை இமை காப்பது போல’
வளர்ப்பாள்.
 ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும்
தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்னும் பாடல் வரி நமக்கு உணர்த்தும் கருத்து யாது? ஒரு
குழந்தை வாழ்வில் ‘குன்றின் மேலிட்ட விளக்கைப் போல்’ ஒளிவிடவும் அல்லது ‘குடத்திலிட்ட
விளக்கைப் போல்’ மங்கிவிடவும் அச்சாணி ஆகிறாள் தாயானாவள். தன் குழந்தைக்கு இவர்தான்
தந்தை என்று அடையாளம் காட்டுகிறவளும் தாய்தான். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ
வேண்டும் என்று தன் பிள்ளைக்கு எடுத்துகாட்டாக, இருப்பவளும் தாய்தான். இதற்குக் காரணம்
ஒரு குழந்தை பிறந்தது முதல் தாயின் பேச்சு, செயல், வேலை, கவனிப்பு ஆகியவற்றைத் தினமும்
பார்ப்பதால் அந்நடவடிக்கைகளே அக்குழந்தையின் மனத்தில் ‘பசுமரத்தாணிபோல்’ பதிகின்றன.
அவர்கள் பெரியவர்களானதும் அவற்றையே பின்பற்றுகின்றனர்.
 மேலும், தாய் நமது முதல் தெய்வமாவார். இதை அறிந்துதான் நமது மூத்த கவிஞர்கள் ‘தாயிற்
சிறந்த கோயிலுமில்லை’ என்று பாடியுள்ளனர். தாயை மதிக்காமல் அவரது வார்த்தைகளைச் செவி
சாய்க்காமல் அருகில் வாழும் இத்தெய்வத்தைப் போற்றாமல், பல கோயில்களுக்கு நற்கதித் தேடிப்
போனால் அது கிட்டாது. மாறாகப் பாவங்களே வந்து சேரும். தாயின் வார்த்தைகளைக் கேட்டுப்
பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
 தாயே தன் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் கவலைகளையும் போக்கக்கூடியவள். தன்
குழந்தைகளுக்கு வரும் சிக்கலைத் தன் சிக்கலாக நினைத்துத் தீர்ப்பாள். பிள்ளைகள் தங்கள்
மனச்சுமைகளைத் தாயிடம்தான் கூறுவார்கள். தாய்  தன் பிள்ளைகள் கூறுவதை மற்றவர்களிடம்
கூறாமல்  தன் மனத்திலேயே வைத்துத் தீர்வு காண்பாள். தன் பிள்ளையைத் தன் மடியில் படுக்க
வைத்து ஆதரவு தருவாள். எனவேதான், தாய் நமக்கு ஒரு சிறந்த தோழியாகவும் சகோதரியாகவும்
ஆசிரியைர¡கவும் ஆலோசகராகவும் திகழ்கிறாள்.
 தற்பொழுது பிள்ளைகள் சிலர் தங்கள் தாயின் பாசத்தையும் தியாகத்தையும் மறந்து அவரை
உதாசினப்படுத்துகின்றனர். தாய் எப்போதும் தனது நேரத்தையும் வாழ்வையும் தன்
பிள்ளைகளுக்காகவே அர்ப்பணித்துப் பிள்ளைகளின் அன்பை மட்டும் எதிர்பார்க்கும்
தியாகியாவாள். ஒவ்வொரு பிரவசத்தின் போதும் மறுபிறவி பெறும் தாயின் தியாகத்தை மறந்தவன்
மனிதனல்ல. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல’ ஒருநாள் அத்தாய்
இல்லாதபோதுதான் அவரின் அன்பை உணர்வான்.
 நம்மைச் சீரும் சிறப்புடனும் வளர்த்த தாயை, எப்பொழுதும் அன்புடன் கவனித்துக் கொள்ள
வேண்டும். அப்பொழுதுதான் அத்தாயின் உள்ளம் மகிழ்ச்சி அடையும். நாமும் மனநிம்மதியுடன்
வாழ்வில் முன்னேற்றம் காணலாம். உலகில் நமக்கெனப் பல உறவுகள் இருந்தாலும், நம்
முன்னேற்றத்தைக் கண்டு பெருமிதம் அடையும் ஒரே உள்ளம் நம் தாயுள்ளம்தான். எனவே,
நம்மைச் சீராட்டிப், பாலூட்டி வளர்த்த தாயை நாம் எப்பொழுதும் ‘கண்ணை இமை காப்பது
போலக் காத்துப் போற்றுவோம்.
ஆற் று த் தூ ய் மை க் கே டு
இறைவனின் உன்னத படைப்புகளில் ஒன்றான ஆறு மனிதர்களுக்குப் பல வகையில் உதவியாக
இருக்கிறது. ஆற்று நீரைக்கொண்டு சிலர் தங்களது அன்றாட வேலைகளைப் பூர்த்திச்
செய்கின்றனர். எடுத்துக்காட்டாகத் துணி துவைத்தல், குளித்தல், குடித்தல் போன்றவையாகும்.
இவ்வாறாகப் பலனளிக்கக்கூடிய ஆறுகள் இன்று பலவகையில் தூய்மைக்கேட்டை எதிர்நோக்கி
வருகின்றன. இவையாவும் மனிதனின் செயலால் விளைகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது.
ஆற்றுத் தூய்மைக்கேடு பல காரணங்களால் விளைகின்றது.
 முதலாவதாகப் பொறுப்பற்ற தொழிற்சாலைகளினால் இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதை
நாம் காணலாம். நம் நாட்டில் பல தொழிற்சாலைகள் ஆற்றோரங்களில் அல்லது அதன் அருகில்
இருக்கின்றன. இத்தொழிற்சாலைகள்  கழிவுப்பொருளை நேரடியாகவே ஆற்றில் கொட்டுகின்றன.
குறிப்பாக, மூலப்பொருள் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள்
போன்றவை கழிவுப்பொருளை அப்புறப்படுத்த ஆற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு
எடுத்துக்காட்டாகக், கிள்ளான் ஆறு தூய்மைக்கேட்டை அடைவதற்கு இத்தகைய
தொழிற்சாலைகளின் கழிவுப்பொருள்கள் பெருங்காரணமாக விளங்குகின்றன.
அடுத்து, நம் நாட்டில் பரவலாக நடைபெறும் வெட்டுமரத் தொழிலினாலும் இந்த ஆற்றுத்
தூய்மைக்கேடு  ஏற்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் நடைபெறும் வெட்டுமரத் தொழிலினால்
ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமடைந்துள்ளது. இவ்விடங்களில் நடைபெறும் துரித
வெட்டுமரத் தொழிலினால் மண்சரிவு ஏற்படுகின்றது. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த
மண்சரிவு மிகவும் மோசமடைகின்றது. இந்த மண்சரிவு ஆற்றோடு கலப்பதினால் ஆறு
தூய்மைக்கேட்டை அடைகின்றது. ஆற்றில் போய்ச் சேரும் மண்ணால் ஆற்றின் ஆழம் குறைந்து,
தீடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
மேலும், கட்டுமானத் தொழிலாலும் ஆற்றுத் தூய்மைக்கேடு நம் நாட்டில் மோசமடைந்துள்ளதை
நாம் மறுக்க இயலாது. வீடமைப்புத் திட்டங்களினால் ஆறுகள் தூய்மைக்கேட்டை
அடைந்துள்ளதை நாம் பரவலாகக் காணலாம். அங்கு நடைபெறும் இத்திட்டங்களினால் மண்சரிவு
ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டிற்குப் பிரேசர் மலையில்
கோல்ப் மைதானத் திட்டத்தினால் அதன் அருகே உள்ள ‘ஜிரியாவ்’ நீர்வீழ்ச்சி மிகவும் மோசமான
தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 அடுத்து, மக்கள் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை மேம்பாடடைந்துள்ளது. இதன் தொடர்பாக
நாட்டின் ஆங்காங்கே காட்டை அழித்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினாலும் மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேடு அடைகின்றன. பெரிய
ஆறுகளுக்கிடையே பாலம் அமைக்கும் பொழுது சிறிய கட்டைகள், மணல் மற்றும் அங்கே
கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக்கூடிய மீதப் பொருள்களை ஆற்றிலே போட்டுவிடுகின்றனர்.
இதனால் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுத் தூய்மைக்கேடு ஏற்படுகிறது.
 இறுதியாக, ஆற்றோரங்களில் வாழுகின்ற மக்களாலும் ஆற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுகின்றது.
குறிப்பாகக், கிள்ளான், பென்சாலா, பகாங் ஆறு போன்ற ஆற்றோரங்களில் நிறைய வீடுகள்
இருப்பதை நாம் காணலாம். இவர்கள் தங்கள் அன்றாட கழிவுப்பொருள்களை
அப்புறப்படுத்துவற்கு ஆறுகளையே உபயோகிக்கின்றனர். இதனால், தினமும் ஏராளமான
குப்பைகளை இந்த ஆறுகள் சுமக்க நேரிடுகின்றன. இதனால், ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும்
மோசமடைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆற்றோரங்களில் காணப்படும் கால்நடை வளர்ப்புத்
திட்டத்தினாலும் நம் ஆறுகள் மிகவும் மோசமான தூய்மைக்கேட்டை அடைந்துள்ளன.
 ஆகவே, சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்.
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பது போல நாம் வசிக்கும் இடத்தை அனைவரும் ஒன்று
சேர்ந்து கூட்டுப்பணி முறையில் சுத்தப்படுத்தினால் நாம் சுகாதாரமாக நோய்நொடியின்றி
வாழலாம். அதோடு அரசாங்கமும் இச்சிக்கலைக் களைவதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றோரங்களில் காணப்படும் குடியேறிகளை மாற்று
இடங்களுக்கு மறுகுடியேற்றம் செய்ய ஆவனச் செய்ய வேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட
இடத்தில் மட்டுமே வெட்டுமரத்தொழில் நடைபெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்க
வேண்டும். ‘நமது ஆற்றை நேசிப்போம்’ என்னும் அரசாங்கத்தின் சுலோகத்தை நாடு தழுவிய
நிலையில் செயல்படுத்தினால் ஆற்றின் தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.

நோயற் ற வாழ் வு
ஆண்டவனின் படைப்பில் நோயற்ற வாழ்வு வாழும் மானிடனே இல்லையென்று அறுதியிட்டுக்
கூறலாம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி,
செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது
முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது
எனக் கூறுவர். கல்வி, செல்வத்தை மட்டும் சேர்த்து வைத்திருந்தால் போதாது; அதற்கேற்ற உடல்
நலமும் இருந்தால்தான் அவையனைத்தையும் அனுபவிக்க முடியும்.
‘சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதற்கொப்ப நலமான வாழ்க்கையைப்
பெற்றிருந்தால்தான் நினைத்ததைச் சாதிக்க இயலும். நோயால் பீடிக்கப்பட்ட ஒருவரால் தான்
சாதிக்க நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகிறது. அதற்கேற்ற வலுவும் மனோதிடமும்
அவர்களிடம் இல்லாததே இதற்குக் காரணமாகும். அவர் எவ்வளவுதான் செல்வந்தனாக
இருந்தாலும் எவ்விதப் பயனுமில்லை.. ஏனென்றால், அந்நோயைக் குணப்படுத்துவதற்காகவே
அதிகமான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்
போனது’ என்பது போலச் சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் இவ்வாறு
செலவிடுவது வருந்தத்தக்க ஒன்றாகும்.
நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்குப் பல சிறந்த வழிகள் இருந்தாலும் சிலர் அதற்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் நகை, உடை, சொத்துச் சேகரிப்பதிலேயே
தங்களின் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆனால், உடல் நலத்திற்கு வேண்டியதைத் தேர்வு செய்ய
மறந்து விடுகின்றனர். உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்றால் அது
மிகையாகாது. நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் சமசீராக உட்கொள்வது
அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், அவ்வுணவைத் தகுந்த நேரத்தில், ஏற்ற அளவில்
உட்கொள்வதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நோயற்ற வாழ்க்கைக்கு உடற்பயிற்சியும் இன்றியமையாததாகும். ‘ஓடி விளையாடு பாப்பா, நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார் உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே
அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால்,
உடல் சுறுசுறுப்பாகவும் மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர, உடற்பயிற்சி பல
நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட
உண்மையாகும்.
நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு நன்னெறிப் பண்புகளும் வகை செய்கிறது. நாம் வாழ்க்கையில்
நன்னெறிகளைக் கடைபிடித்தால் எந்த நோய் நொடியும் இல்லாமல் நலத்தோடு வாழலாம்.
புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை நமது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று
அறிந்தும் பலர் இன்னும் அப்பழக்கங்களைக் கைக்கொண்டு வருகின்றனர். இவ்வுலகில் நாம்
மக்களாய்ப் பிறந்தது, நாம் முப்பிறவியில் செய்த நல்வினையின் கூட்டுப்பலனேயென்பது யாவரும்
அறிந்த ஒன்று. ஆகவே, சிந்தனை, செயல், வாக்கு இம்மூன்றையும் தூய்மையாக
வைத்திருப்பதால் நம் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதனால், நாம்
நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.
நோயற்ற வாழ்விற்குச் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் அவசியமாகும். நாம் சுற்றுப்புரத்தைத்
தூய்மையாக வைத்திருப்பதால், வியாதிகள் நம்மை அணுகா. வீட்டின் உள்ளும் புறமும்
சுத்தத்தைப் பேண வேண்டும். நோய்க்கிருமிகளை உண்டாக்கும் கொசு, ஈ, எலி, கரப்பான்பூச்சி
போன்றவ நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு மட்டுமல்லாது,
நாட்டின் தூய்மையையும் பேண வேண்டும். குப்பைகள், புட்டி, நெகிழி போன்றவற்றைக் கண்ட
கண்ட இடங்களில் வீசக்கூடாது. நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் மிக மிக அவசியம்.
ஆகவே, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, கூன், குருடு செவிடு நீங்கிப் பிறத்தல்
அதைவிட அரிது’ என்று அவ்வையார் பாடியது போல, நாம் எக்குறையும் இல்லாமல்
பிறந்திருக்கிறோம். அதனால், நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நமது
கடமையாகும்.

பணம்
‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்னும் பழமொழி நாம் அறிந்த ஒன்றே. இந்தக்
கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான். பணம் என்றால் என்ன?
உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும்.
பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின்
அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது.
 இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதன் தனி வரலாறு உண்டு. அது போல, பணம்
எப்படித் தோன்றியது என்ற வரலாறும் உண்டு. முற்காலத்தில் பணம் நாணய வடிவில் இருந்தது.
இந்நாணயங்கள் செம்பு, ஈயம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டன.. மேலும்,
நாணயங்கள் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டன. அவை வட்டம், சதுரம், செவ்வகம்,
முதலை வடிவம் போன்ற  வடிவங்களாகும். அன்றுமுதல் இன்றுவரை பணம் வியாபாரத்திற்கு
உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதன் தனக்கு வேண்டிய சிறுபொருளை வாங்குவதற்குக்கூடப்
பணம் தேவைப்படுகிறது.
 பணத்தை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக அழைக்கின்றனர். மலேசியாவில் ரிங்கிட்,
இந்தியாவில் ரூபாய், இந்தோனிசியாவில் ரூப்பியா, அமெரிக்காவில் டாலர், சீன நாட்டில் யென்,
இங்கிலாந்து நாட்டில் பவுன் டெர்லிங், தாய்லாந்தில் பாட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு
நாட்டின் நாணய மதிப்பும் மற்ற நாடுகளின் நாணய மதிப்போடு ஒப்பிடுகையில்
வேறுபட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டிற்கு, 100 இந்திய ரூபாய் நம் மலேசிய மதிப்பில் ரிங்கிட்
8.00 ஆகும்.
 ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ என மொழிவார்கள். பணம் மனிதனுக்குப் பல
நன்மைகளைத் தருகின்றது. பணம் இருந்தால் மனிதன் தான் விரும்பும் பொருள்களை எவ்வளவு
வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, ஆபத்து அவசர வேளைகளில்
நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் நமக்குக் கைகொடுக்கிறது. மேற்கல்வியைத் தொடர்வதற்கும்
வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது.
 பணம் உள்ளவர்களிடம் சில நற்குணங்கள் மறைந்து வருகின்றன. அதிக செல்வம்
கொண்டவர்களிடம் தற்பெருமை, பேராசை, சுயநலம் போன்ற குணங்கள் குடிகொள்கின்றன.
ஏழை எளியவர்களுக்கு உதவ அவர்களின் மனம் தயங்குகின்றது..  எனவே, பணம் படைத்தவர்கள்
வறியவர்களுக்கு உதவ வேண்டும்.
 பணத்தைச் சேமிக்கும் வழிகள் பல உள்ளன. ‘ஒரு காசு பேணின் இரு காசு தேரும்’ என்பது போல
சிறுகச் சிறுகச் சேமித்தால் அது நாளடைவில் பெருந்தொகையாக மாறிவிடும். நாம் பணத்தை
உண்டியலில், கூட்டு முறையில், காப்புறுதியில் சேமிக்கலாம். சேமிப்பு, குடும்ப
மேம்பாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவி புரியும்.
 ஆகவே, ‘அருள் இல்லாதவருக்கு அவ்வுலகமில்லை, பொருள் இல்லாதவருக்கு
இவ்வுலகமில்லை’ என்னும் திருவள்ளுவரின் வாக்கு முக்காலத்திற்கும் பொருந்தும். இருப்பினும்,
பணத்திற்கு அடிமையாகாமல், அதனை முறையாகப் பயன்படுத்தி நன்மைகள் அடைவோமாக!
கல் வி
         இறைவன் படைப்பில் ஒரு சிறு அங்கமாக விளங்குவது மானிட இனம். இம்மானிட
இனம் சிறப்புற வாழக் கல்வி ஓர் அற்புத சாதனமாகத் திகழ்கிறது. கல்வித்தாகம் ஒவ்வொருவரின்
உயிரோட்டத்திலும் ஊற்றெடுக்க வேண்டிய ஒன்றாகும். இம்மாபெரும் கல்விச் செல்வமானது
அனைவரது வாழ்விற்கும் விடிவெள்ளியாக அமைந்து வருகின்றது என்றால் மிகையாகாது.
கண்களுக்கு நிகராகப் போற்றப்படும் கல்வியைக் கற்பதன்வழி, ஒரு மனிதன் தன் வாழ்வைச்
சீர்படுத்திக் கொண்டு செம்மையாக வாழலாம்.
      உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம்
தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும்
வகையில் அமைவதும் ஒருவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது.
இவ்வாழ்க்கை நெறி கல்வியின் மூலமே பெறப்படுகிறது. கல்வியானது பண்பு நிறைந்த
குமுகாயத்தை உருவாக்கும் வல்லமையைக் கொண்டது. கல்விவழி அன்பு, பணிவு, கருணை
போன்ற உயர்ந்த குணங்கள் ஒருவரது ஆழ்மனதில் கலந்துவிடும். அதோடு கல்வி கற்ற ஒரு
மானிடனால் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நடக்க இயலும். இதனால், கல்விமானாகத்
திகழும் ஒவ்வொரு மனிதனும் என்றும் மாசற்றவர்களாகத் திகழ்வர் என்பதில் எவ்வித ஐயப்பாடும்
இல்லை.
         மேலும், கல்வித் தென்றலில் உலாவரும் ஒவ்வொரு மனிதனும், மதிப்பும்
மரியாதையும் பெற்றுப், புகழின் சிகரத்தை அடைவான் என்பது நாமறிந்த ஒன்றே. கல்வி ஞானம்
பெற்ற ஒருவரின் பேச்சும் ஆலோசனையும் மட்டுமே உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
வாழ்வில் செயல்படுத்தப்படுகின்றது. ஏனெனில், கற்றவரின் கருத்து என்றும் வளமானதாகவும்
வலுவானதாகவும் இருக்கும். கற்றவர்கள் எவ்வித சிக்கல்களையும் தங்கள் அறிவால் சுமூகமாக
நிவர்த்திச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பர். அதோடு, கற்றவர்கள் எவ்வித சூழ்நிலைகளிலும்
தன்னடக்கத்துடன் செயல்படுவர். இதுபோன்ற சிறந்த தன்மைகளைக் கொண்டிருப்பதால்
கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கப்படுவர் என்பதைக் ‘கற்றவருக்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு’ என்னும் முதுமொழி விளக்குகின்றது.
      கல்வி என்னும் அமுதச் சுரபியைப் பெறும் ஒவ்வொரு மானிடனும் தனது பொது அறிவை
வளர்த்துக் கொள்ள இயலும். கல்வி கற்கும் பொழுது நாம் அதன்வழி பல தகவல்களை
அறிகின்றோம். இத்தரணி தோன்றியது முதல் மனிதன் வளர்ச்சி அடைந்த காலம் வரை உள்ள
தகவல்களை நாம் கல்வியின் வழி கற்றறியலாம்.
             தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
             கற்றனைத் தூறும் அறிவு
 என்னும் குறளுக்கேற்ப கல்வி கற்கக் கற்க நமது அறிவு முதிர்ச்சி அடைந்து நாம் ஒரு சிறந்த
 அறிவாளியாக உருவாகலாம். பல தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பவனே உலகமயச்
சுழற்சியில் மற்ற
 இனத்தோடு, நாட்டோடு சரிசமமாகப் பீடுநடை போட முடியும்.
      அதுமட்டுமின்றி, கல்வி ஒரு மனிதனுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பையும் உருவாக்கித்
தருகிறது. தொடக்கநிலை, இடைநிலைக் கல்வியில் சிறந்த தேர்ச்சி அடைந்தால், உபகாரச்
சம்பளத்தோடு கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வரிய வாய்ப்பினை
நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு நமது அரசாங்கமும் மற்றும் பல தனியார்
நிறுவனங்களும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்லாதரவு நல்கி வருகின்றனர்.
இதன்வழி, பல்வேறு வேலை வாய்ப்புகளைச் சிக்கலின்றிப் பெற்று வெற்றியடைய இயலும்.
தொடர்ந்து நல்ல கல்வித்தகுதி உடைய ஒருவர் நிறைந்த வருமானத்துடன் சிறந்ததொரு வேலையை
எதிர்ப்பார்க்கலாம்.   இதுபோன்ற வேலை வாய்ப்பினால் நம் வாழ்வு சீரும் சிறப்புடனும் திகழும்.
      கற்றவன் நிறைகுடத்தைப் போன்றவன். கல்லாதவன் அனைத்து விதத்திலும்
குறைகுடமாகவே திகழ்வான். கல்வி கற்காதவனிடம் பல தீய குணங்கள் மிக விரைவில் தொற்றிக்
கொள்ளும். ஏனெனில், அவர்களுக்குப் பகுத்தறியும் தன்மை குன்றியே காணப்படும். மாசற்ற
மழை நீர் செம்மண்ணில் விழுந்து தூயத்தன்மையை இழப்பது போல் ஒரு நல்ல மனிதனும் கல்வி
கற்காவிட்டால் மிக விரைவில் தீய குணங்களுக்கு அடிமையாகிச் சீரழிந்து விடுவான்.
       கல்வி ஒரு சமுத்திரத்தைக் காட்டிலும் பெரியதாகும். வாழ்க்கை என்ற சிகரத்தை அடைய
கல்வி என்ற தூண்டுகோள் அவசியமாகும். கல்வி கற்காதவன் உலக மக்களால் தற்குறி என்று
கூறப்படுவான். ஆகவே, முழுமையான கல்வி கற்றுச் சிறப்பான வாழ்வின் உன்னத நிலையை
அடைவோம்.

நீரின் பயன்
      நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும்
இப்புவியில் வாழ இயலாது. நீரின் மூலங்கள் பல. நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி
போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல்
கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனிதர்களுக்கு
மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
      நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது. மனிதர்களுக்குக்
குளிக்க, சமைக்க, பாத்திரங்கள் வாகனங்கள் போன்றவற்றைக் கழுவ நீர் இன்றியமையாததாக
அமைகிறது. மேலும், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக
வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறது.  தினசரி ஒரு குறிப்பட்ட அளவு நீரைப் பருகும் ஒருவனது
உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
      இதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் நீர் இன்றியமையாததாக இருக்கின்றது. நீர்
இல்லாமல் வறண்ட நிலங்களில் விவசாயம் என்பது எட்டாத கனிதான். எனவேதான், வாய்க்கால்
வெட்டி, அணைகட்டி விவசாயத்திற்கு நீர்ப்பாசானம் செய்கின்றனர். மழை பொய்த்து, நீர்
இல்லாமல் விவசாயிகள் அல்லல் படும் போது, அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்காகத்தான், அரசாங்கங்கள் நீர்ப்பாசானத் துறையை ஏற்படுத்தி விவசாயத்திற்கு எப்போதும் நீர்
இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன.

கணினியின் பயன்
        இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள்
என்னவெனில் கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை.
கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம்,
போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின்
கையே மேலோங்கி நிற்கிறது.
       கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா
பள்ளிகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல்
கணிதப் பாடங்களுக்காக பள்ளிகளில் மடிக்ககணினிகள்,ஒளியிழை வட்டுகள், பாட
செறிவட்டுகள், போன்றவை கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களும் அறிவியல், கணிதப் பாடங்களை இவற்றின் மூலம் மாணவர்களுக்குப்
போதிக்கின்றனர்.  மேலும், கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு
அறிந்துள்ள அரசாங்கம், பள்ளிகளில் கணினி மையங்களையும் அமைத்து வருகிறது. ஒவ்வோர்
ஆண்டும், பல கோடி வெள்ளியை அரசாங்கம் செலவு செய்வது கணினியின் அவசியத்தை
உணர்த்துகிறது.
      மருத்துவத்துறையிலும் கணினி பெரும் பங்காற்றுகிறது. தற்போது, நோய்களுக்கான
காரணங்கள், அதற்கான ஆய்வுகள், மருந்துகள் போன்றவற்றிற்குக் கணினியின் உதவி
பெருமளவில் நாடப்படுகிறது. உடலில் உள்ள நோய்களைக் கணினியின் மூலமே ஆய்ந்து,
கண்டுபிடிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ‘சிட்டி ஸ்கேன்’ எனப்படும் இயந்திரத்தின் வழி,
தலையில் ஏற்படும் பிரச்சினைகளை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும். மேலும், அறுவை
சிகிச்சை போன்றவற்றிற்கும் கணினியே பெருமளவில் உற்ற நண்பனாய் விளங்குகிறது.

நூ லகத் தி ன் பயன்
       நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம்,
நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள்,
நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.
    நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும்
நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப்
பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
   நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி
வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.
   “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு
படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத்
திகழ்வது நூலகமே.
   தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே,
மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக்
கொள்வோம்.

பு றப் பாட நடவடி க் கை யி னால் ஏற் படு ம்  நன் மை கள்

  புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக விளங்குகின்றது. வகுப்பில்


கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப்
பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும் துணைபுரிகிறது.
   பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் அடையும்
நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம்
நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப்
பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல்,
ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு
செலுத்துதல் போன்ற நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான
பண்புகளை கற்று, பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய
புறப்பாட நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது. 

வாசிக்கும் பழக்கம்
          ‘ஓதாமல் ஒருநாலும் இருக்க வேண்டாம்’ என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அருள்
மொழியாகும். நாம் நாள்தோறும் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படிச்
செய்வதனால் நம் அறிவு வளரும்.
         ‘இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து’ என்பது பழமொழியாகும். மாணவப்
பருவத்தில் இருக்கும்போதே கல்வியில் மிகுதியான ஈடுபாடும், அக்கறையும் முயற்சியும் கொண்டு
கற்றால் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையலாம். பள்ளியில் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் நூல்நிலையத்திற்குச் சென்று படிக்கலாம்.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
என்பது போல நாம் எந்த அளவுக்குத் தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில்
ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அள வுக்கு அறிவு பெருகும்.
ஆகவே, நாம் நேரத்தை விரையம் செய்வதை விட வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.
இதனால் நம் கல்வியறிவையும் பொது அறிவையும் வளப்படுத்த முடியும்.
          நமது அரசாங்கம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கப் பலதரப்பட்ட முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறது. மாவட்டம்தோறும் பொது நூல்நிலையம் அமைத்துள்ளது. இவற்றை
நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய
மும்மொழி நூல்களையும் படித்து வருவது மிகுந்த பலனை அளிக்கும். இதனால்
மும்மொழிகளிலும் நாம் சிறந்து விளங்க முடியும்.
          நாம் பல இன மக்களோடு எளிமையாக உரையாடவும் நட்புறவை மேம்படுத்தவும்
சுலபமாக இருக்கும். அது மட்டுமல்லாது நம் கல்வித் தரமும் உயருகிறது. ஆகவே,
மனிதர்களாகிய நாம் கண்டிப்பாக கல்வியறிவை பெற்றிருக்க வேண்டும்.

கணினியின் அவசியம்
          இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது.
ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப்
பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது.
       மனிதன் கண்டுப்பிடித்த அரிய கருவி கணினி. கணினிப் பொறியின் பயன்பாட்டினால்
மனிதர்களின் வேலை வாய்ப்பு குறையும் எனும் ஐயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இன்றோ
மனிதனுடைய எல்லாத் தேவைகளுக்கும் கணினியே முக்கியமாக விளங்குகின்றது. கல்வித்துறை,
அறிவியல் துறை, தொழில்துறை, மருத்துவத் துறை, இராணுவத் துறை, போக்குவரத்துத் துறை
என்று பல துறைகளில் கணினியின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
      கணினிப் பொறியினால் மனிதன் மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச்
செய்ய முடிகிறது. ஓரே இடத்தில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும்
தொடர்பு கொள்ள முடிகிறது; உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
இதனால் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் முறை குறைந்து வருகிறது.
     வங்கிகளில் கணினியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வங்கியில் பணம்
போடுவதும் எடுப்பதும்கூட கணினி மூலம் நடைபெறுகிறது. இந்தச் சேவையை அலுவலக
நேரத்திற்குப் பிறகும் பெற முடியும். அதனால் வங்கியில் முன்போல் வரிசைப்பிடித்து அதிக நேரம்
காத்திருக்க வேண்டியதில்லை.
விமான நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கணினியின் மூலம் பயணச்
சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலம் பயணச் சீட்டுகளை
வாங்கிக் கொள்ளலாம். இதனால் மனிதர்களுடைய நேரமும், சிரமமும் குறைகின்றன.
     விண்வெளி ஆய்வை மேற்கொள்ள கணினியே முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆய்வைத்
திட்டமிடவும் செயல்படுத்தவும் கணினி பெரிதும் உதவுகிறது. பூமிக்கும் விண்வெளிக்கும்
இடையே கணினி மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. மனித முன்னேற்றத்திற்கு
உறுதுணையாக இருக்கும் கணினியை அனைவரும் பயன்படுத்திப் பயனடைவோம்.

 வாசிப்பின் அவசியம்
          பள்ளியில் தினமும் பலவிதமான படிக்கின்றோம். அவை அந்தந்தப் பாடங்கள்
சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு நான் தினமும் படிக்கின்றேன் என்றால்
தவறாகும். பள்ளிப் பாடங்கள் மட்டும் நம் அறிவை வளர்க்காது. பாடங்கள் சம்பந்தப்பட்ட
மேலும் பல தகவல்களைப் பெற நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
         ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை
வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் புலமை பெற முடியும்.
மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய
அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான
முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.
        மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன்
மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால்
அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. இடன் மூலன் நாம் தகவல்
அறிந்த சமுதாயமாக மாற, வாசிப்பு துணைபுரிகிறது.
        இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது.
கடை, கட்டுரை, கவிதை.,செய்யுள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை
உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.
        சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை
தொடர்பான பல நூல்களைப் படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப்
படைக்கும் போது அவை தரமானவையாக இருக்கும். பல தகவல்களைத் தன்னுடைய
படைப்புகளில் புகுத்த முடியும்.
        எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது.
”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப்
பெருக்கிக் கொள்வோம்.

இணையத்தின் பயன்பாடு
பத்தி 1
முன்னுரை
– அன்றாட வாழ்க்கையில் – கணினி முக்கிய பங்கு
– அறிவியல் – தொழில்நுட்பம் – வளர்ச்சி
– இணையத்தின் பயன்பாடு – முதன்மை
– தொடர்புச் சாதனம்
பத்தி 2
– கல்வி – புதிய விஷயங்கள் – சேகரித்தல்
– இணையத்தில் தேடல்
– தலைப்புக்கு ஏற்ற விபரங்கள் திரட்டுதல் / தேடுதல்
– நேரடித் தொடர்பு வழி கற்றல், கற்பித்தல்
– பயிற்சிகள் – சுயவளர்ச்சி துணைபுரிகிறது.
பத்தி 3
– தொழிற்துறையில் அதன் பங்கு
– ஒவ்வொரு வேலையும் – எளிதில் செய்ய முடிகிறது.
– நேரத்தை மிச்சப்படுத்தப்படுகிறது
– உலக நாடுகளுடன் நேரடி வியாபாரத் தொடர்பு
பத்தி 4
– மருத்துவதுறையில் / விவசாயத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ள
– கருத்து பறிமாற்றம் செய்து கொள்ள
– விண்வெளிதுறையில் ஆய்வுக்கு
– பொழுது போக்கு சாதனம்

பத்தி 5 – முடிவுரை
– வாழ்க்கை தேவைகளில் ஒன்றாகிவிட்டது
– அதனைப் பயன்படுத்தி நன்மைபெறுவோம்.
– அறிவாற்றல் மிக்க சமுதாயமாக உயர்வோம்.

You might also like