"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடைய வழியாகும்."
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.(1888 - 1972)
அழகான நான்கு வரிகளில் தமிழரின் பெருமையை சிறப்பாக கூறியுள்ளார்.
அறிவியலும், அகழ்வியலாராட்சிகளும் தொல்லியல் போன்ற
பல்லியல்புகளும் தமிழின் தொன்மையையும் அதன் சிறப்பினையும் பற்பல நூல்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளதனை அறிகின்றோம். அதனையிட்டு நாம் தமிழரென்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றோம். வழக்கிலுள்ள தொன்மையான மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றாகும். மேற்கத்திய நாகரிகங்களில் முதன்மையானது நைல் நதி (எகிப்து) நாகரிகம் கி.மு. 4000 ஆண்டுகளாகும், தமிழர் நாகரிகம் கி.மு. 10,000 ஆண்டுகள் பழமையானது என்று பல்மொழி ஆய்வுகளின் மூலம் ஆய்ந்து அறிந்து கூறுகிறார் பல் மொழி ஆய்வாளரும் தமிழறிஞருமான மொழிஞாயிறு எனப்போற்றப்படும் ஞா.தேவநேயப் பாவணர் அவர்கள்.