தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், காட்சி ஊடகங்களில்
பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள், நிகழ்ச்சித்
தொகுப்பாளர்கள் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (10.10.2023) நடைபெற்றது. மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ் வழங்கினார்.
காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செய்திகள், தமிழ்மொழியின்
செம்மையைத் தாங்கி நிற்க வேண்டும் என்ற தமிழக அரசின் முனைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிகையாளர்கள் தமிழைப் பிழையின்றி எழுத வேண்டும், தொலைக்காட்சிகளில் சொற்பிழை ஏதும் இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் தமிழறிஞரான மா.நன்னன் அவர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தவர் அவர்.
அந்த வகையில் இன்றைய பயிலரங்கத்தில் மூத்த செய்தி
வாசிப்பாளர்களான திரு.நிஜந்தன், கவிஞர் திரு.ஈரோடு தமிழன்பன் மற்றும் தமிழறிஞர் திரு.மருதூர் அரங்கராசன் ஆகியோர் சிறப்பான வகையில் பயிற்சி அளித்தார்கள். தமிழ் உச்சரிப்பு குறித்து எளிமையாக விளக்கியதோடு, தங்கள் அனுபவங்களையும் செய்திவாசிப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கம், வளர்ந்துவரும்
செய்தி வாசிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருந்தது. மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியை சிறப்புற ஒருங்கிணைத்த தமிழ் செய்தி வாசிப்பாளர்
சங்கத்தின் தலைவர் திரு.பிரபுதாசன் அவர்களுக்கும், மூத்த முன்னோடி செய்தி வாசிப்பாளர்களுக்கும் நன்றிகள் பல.