Professional Documents
Culture Documents
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார மாற்றங்களினால் மக்கள் தமது பாரம்பரிய, சமூக,
கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர். இளம் சந்ததியினரின் மனப்பாங்கு, சிந்தனை, உடை,
நடை, பாவனை என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் ஒவ்வொரு வயதுப்
பிரிவினருக்குமிடையில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உருவாகின்றன. இலங்கையின்
சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வயது எல்லையினராக 15-30 வயது
வரையிலானோரும் 60 வயதுக்கு மேற்பட்டோரும் உள்ளனர். இவ்வயதுப் பிரிவினரே உளநோய்
அதிகளவில் காணப்படும் வயதுப் பிரிவினர் என்ற காரணத்தினால் இலங்கையில் உளநோயாளர்கள்
அதிகரிக்கும் விடயத்தில் இந்த வயது நிலையும் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இங்கு
சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.
பல்வேறு காரணங்கள் மூலம் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையாமை மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி
இயந்திரமயமாதல் மூலம் கனணிகளோடு மட்டுப்படுத்தபடுவதனாலும் உளநெருக்கீடு, மனித உறவுகளில்
சிக்கல் போன்றவற்றை பலர் எதிர்நோக்குகின்றனர். பசுமை நிறைந்த கிராம வாழ்க்கைச் சூழலிலிருந்து நகர
வாழ்க்கையை நோக்கிச் செல்வதால் அமைதியின்மை, கவலை, என்பவற்றுக்கு உள்ளாக வேண்டி
ஏற்படுகிறது. இவ்வாறு குறைபாடுகளுக்கும் அதனோடு இணைந்த குற்றச் செயல்களுக்கும் தீர்வாக
அமைவது ஒவ்வொருவரினதும் உள்ளம் வளப்படுத்தப்பட வேண்டும். ஆரோக்கியம் பெறவேண்டும்.
இதனால், உள்ளத்தை வளப்படுத்தும் செயற்பாடான உளவளத்துணை சேவை ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்புப்
பொறிமுறையினூடாக கிராம மட்டம் தோரும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.
உளவளத்துணையின் அவசியம்
தற்காலத்தில் உளவளத்துணையானது ஒரு முக்கிய துறையாக வளர்ந்து வருகின்றமையை உலகளாவிய
ரீதியில் மாத்திரமின்றி இலங்கையிலும் காணக் கூடியதாகவுள்ளது. இருப்பினும், உளவளத்துணையின்
அவசியம் பூரணமாக உணரப்படுத்தப்படவில்லையென்றே கூற வேண்டும். உளவளத்துணையின்
அவசியத்தை மக்கள் மத்தியில் உணரச் செய்ய வேண்டிய பொறுப்பு அச்சேவையைச் சார்ந்தோரின்
பணியாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கத்திலும்
ஏற்படுகின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் தகாத செயற்பாடுகள் போன்றன இலங்கை மக்களின் பலரை
உளக்கோளாறுகளுக்கு உள்ளாக்குகின்றன. உளப்பிரச்சினை தொடர்பான அறிவூட்டல் சிறந்த முறையில்
வழங்கப்படுவதுடன் உளவளத்துணையும் வழங்கப்படுவது அவசியமாகும். உடலியல் நோய் அறிகுறிகளைக்
கண்டு அவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் உளவியல் நோய்களுக்கான
அறிகுறிகள் காணப்படுகின்றபோதும் கொடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், இலங்கை மக்கள்
மத்தியில் உளப்பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு சரியான முறையில்
மேற்கொள்ளப்படவில்லையென்றே தெரிகிறது.