காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் 6 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்புச்
செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் உதயமாக்குகிறேன். ஆறாண்டு கால ஆரம்பக் கல்விக்கு விடைகொடுத்துப் புதிய யுகத்தில் கால் பதிக்கும் நீங்கள் என்றும் எதிலும் ஊக்கத்தைக் கைவிடாமல் முயன்றால் வெற்றிப் பெறுவது திண்ணம். மாபெரும் சபையில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும் எனும் வரிகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகம் வரை கல்வி பயின்று பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் எனும் விதையை மனத்தில் ஆழமாக விதைத்து முன்னேற வேண்டும். “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்கிறார் ஔவையார். எனவே, நீங்கள் நிறைய கற்க வேண்டும். உங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இப்பள்ளியின் பட்டமளிப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்று வருகிறது. யூ.பி.எஸ்.ஆர் கல்வி மேம்பாட்டுக் குழுவினரும் பள்ளி நிர்வாகமும் இவ்விழாவினைச் சிறப்பாகத் திட்டமிட்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றது என்பதைக் கூறி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். இவ்விழாவிற்கு அனைத்து வகையிலும் எனக்குப் பக்கப் பலமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைகள் இருப்பின் உங்களைச் சாரும். குறைகள் இருப்பின் என்னைச் சாரும். ஒவ்வொரு விதையிலும் விருட்சத்தின் சுருக்கம் ஒவ்வொரு விடியலும் வெளிச்சத்தின் தொடக்கம் ஒவ்வொரு எண்ணத்திலும் உலகத்தின் தோற்றம் ஒவ்வொரு செயலிலும் உண்டாகும் மாற்றம் ஒவ்வொரு முயற்சியும் தொட்டிடும் சிகரம் ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிப் படிகளாய் மாறும். நன்றி. தேன்மொழி முனியாண்டி