பொதுக்காலத்தின் 31 ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள
இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தூய அடைக்கல மாதா அன்பிய குடும்பங்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறோம்.
தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், தூக்கத்தில்
உள்ளவர்களை, அல்லது மற்ற உயரிய எண்ணங்களுக்கு மரத்துப் போய் உள்ள யூதக் குருக்களையும், மதத்தலைவர்களையும் இயேசு இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக் காட்டுகிறார். அவர்கள் போதித்த போதனைகளுக்கும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இப்படி வாழ்ந்தவர்களைப் பார்த்துத்தான் இயேசு தனது சீடர்களிடம் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள். ஆனால் அவர்கள் செய்வது போலச் செய்யாதீர்கள் ஏனெனில் அவர்கள் சொல்வார்கள். செயலில் ஈடுபட மாட்டார்கள் என்றார். பரிசேயர்களின் போலித்தனத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் உண்மைக்குப் புறம்பான வாழ்வையும் இயேசு சாடுகிறார் என்பது தெளிவாகிறது.
கிறிஸ்தவ வாழ்வு என்பது கற்பித்தலில் மட்டுமல்ல, மாறாக
அதனைச் செயல்படுத்துவதில் தான் பொருள் பெறுகிறது. நம்மில் எத்தனை பேர் நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வேறுபாடு இன்றி நாம் வாழ்கிறோம். சுய ஆத்ம சோதனைகளை செய்து பார்க்க அழைக்கப்படுகின்றோம். நம் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களை அகற்றி இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ முன்வருவோம். அதற்கு தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம் .