திறமை உள்ளவரை உலகம் பெருமையாகப் பேசும். உண்மைதான்.
ஆனால், திறமை அவசியம் இல்லாத, (நடுவர்களின் அனுமதியுடன்) Zero Talent எனும் நிலையில் பலவற்றைப் பயன்படுத்தி, பலர் உச்சத்தைத் தத்தம் துறைகளில் தொட்டுள்ளனர் என்பதே எங்கள் வாதம்.
மீண்டும் மீண்டும் நினைவிற் கொள்ளுங்கள். திறமை என்பது தனி மனிதனின்
மட்டற்ற அறிவையும் திறனையும் சார்ந்தது. அதை மட்டும் வைத்துக்கொண்டு அவன் வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிட முடியாது. குடும்பச் சூழல், நண்பர்கள், சமூகம், நாடு என பல காரணங்கள் அவனுடைய வெற்றிக்கு துணையாக வேண்டும். அந்தக் காரணிகளைச் சரியாக அடையாளம் கண்டு செயலாற்றுவதில்தான் நாளை உச்சத்தை ஒருவன் தொட முடியும். அவ்வகையில், உண்மையான அறிவுசார் உடல்சார் உழைப்பு, ஊக்க மனப்பான்மை, வியூகம் வகுக்கும் தன்மை, நேர்மை, நாணயம், ஒழுங்கு சார்ந்த நெறிமுறை, நேர மேலாண்மை, விடா முயற்சி, வாய்ப்பு, வசதி, குடும்பம், நட்பு, போதுமான உடல் சக்தி, மனோ சக்தி, தோரணை சார்ந்த மிடுக்கு, பண்பான உடல்மொழி கூறுகள், நாம் சார்ந்திருக்கிற துறையில் வேட்கை எனும் பேரார்வம், மேலதிக செயல்பாடு, முன்னேற்பாடு, எதையும் கற்க விரும்பும் மனப்பான்மை, சரியான நேரத்தில் கையாளப்படும் ஏற்புடைய அணுகுமுறை இப்படியாக இவை அனைத்தையும் அல்லது இவற்றில் ஏதேனும் சிலவற்றைக் கொண்டே திறமை இல்லாதவனும் உச்சத்தை அடைய முடியும் என்பதுதான் இந்த உலகில் எப்போதும் நிருபிக்கப்பட்ட வரலாறு. இந்தச் சான்றுகளைத் தான் இவ்வளவு நேரம் நாங்கள் இங்கே முன்வைத்திருக்கின்றோம்.
திறமையும் ஆளுமையும் இருந்தும், போர்களில் உலகை வியக்கவைக்கும் பல
வெற்றிகளைப் பெறமுடிந்த ஒரு மாபெரும் தலைவனின், நிகரற்ற தலைமை, திறமை எப்படி வீழ்த்தப்பட்டது? நீங்கள் அறியாததா என் எதிர்தரப்பு நண்பர்களே?
எதிரிகளின் கூட்டு படை பலம், அண்டைய நாடுகளின் போக்கு, உலக நாடுகளின்
சுயநலம், பண பலம், அதிகார பலம் இப்படியாக பல்வேறு காரணங்களால் திறமை வீழ்த்தப்பட்டது. உச்சத்தை அடைய வேண்டிய இலக்கு, இன்று கனவாக இருக்கின்றது. இப்படித்தான் ஒரு தனி மனிதனின் வெற்றியும். இங்கே தனிமனிதனின் திறமை மட்டுமே உதவாது, அவன் சார்ந்திருக்கிற சூழலும் இன்னும் பிற கட்டமைப்பும் அவனுடய வெற்றிக்குக் காரணமாக அமைகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.