நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும்,
எல்லா அம்சங்களிலும் வந்து விட்டது. விஞ்ஞான சிந்தனை வளர்ச்சி என்பது கடந்த 300 ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்த ஒரு மனித சிந்தனையின் முதிர்ச்சி என்று கூறலாம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று மனிதன் எண்ணிலடங்கா பயன்களை அனுபவித்து வருகின்றான். மனித வாழ்வும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்தே இன்றைய நவீன உலகம் இயங்கி வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதற்கு என்னதான் காரணம் ? நாம் சிந்தித்ததுண்டா ?
கணிதத்தை விட, அறிவியல் பாடம் மிகவும் கடினம் என நம்மில் பலர், அதாவது பல
மாணவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அறிவியல் பாடத்தில் நிறைய படிக்க வேண்டும். அதிகமாக மனனம் செய்ய வேண்டும். வரிசையாக எழுத வேண்டும். இப்படி எத்தனை எத்தனை சவால்கள் ? இப்படித்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறில்லைதான். ஆனால், அதன் பொருட்டு அப்பாடத்த்தின் மீது அச்சப்படுவதும் வருத்தப்படுவதும், நிச்சயமாக அவசியமில்லாததுதான் ! அறிவியல், அன்றாடம் நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் வழி உணர்வதும் அறிவியல்தான், அது கட்டாயம் விரும்பிட வேண்டிய ஒன்று. ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று, எனவே, விரும்பிடு விஞ்ஞானம் ! அறிவியலைப் பொறுத்தமட்டில், நம்மில் பலருக்கு ஏற்படும் பயமானது அதனைப் புரிந்து கொள்ள முயற்சிக்காகததும், புரிந்து கொண்டதை அதற்குரிய சொற்களஞ்சியங்களோடு எழுதிப் பழக்கப்படுத்திக் கொள்ளாததும் தான். அறிவியலை நேசித்து விட்டால், விஞ்ஞானத்தை விரும்பி விட்டால், இது எல்லாமே சாத்தியம்தான். இன்றைய மாணவர்களாக இருக்கும் நாம் அடிப்படை அறிவியல் அறிவு பெற தவறினால் எதிர்காலத்தில் எந்தத் துறையையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அந்த அறிவியலை நேசித்து, விரும்பி படிக்கின்ற பொழுது, எல்லாத் துறைகளும் நமது வசமாகி விடும். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சியை முடிவு செய்யக் கூடிய ஆற்றல் இன்றைய மாணவர் சமுதாயமான நம்மிடம் இருக்கின்றது என்பது மறக்கவோ மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாததாகும். சரி, ஏன் விஞ்ஞானத்தை விரும்பிட வேண்டும் என்பதை இன்றையச் சூழலைக் கொண்டே பார்ப்போமே. கோவிட்-19. உலகையே புரட்டிப்போட்ட பெருந்தொற்று. இன்னும், இன்றும் அதனைப் பற்றிய பல தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல மர்மங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மர்மங்களை நாம் கேள்விகளாகச் சுமக்கிறோம். அந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்கள், இணையம், புலனம், முகநூல், ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சமாகவும் , ஏன் வாய்வழியாகவும் பலவாறாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அறிவியல்பூர்வமான தகவல்கள் இல்லாதபோது, அந்த இடத்தில் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் புகுந்துவிடுகின்றன. இந்தக் கதைகளின் விளைவாக மக்கள் தேவையில்லாமல் பீதியடைய நேர்கிறது, அவசியமானதை அலட்சியப்படுத்த நேர்கிறது, நோய்த்தொற்றைப் பரவலாக்க ஏதோ ஒருவகையில் காரணமாகவும் நேர்கிறது. ஆனால், அறிவியலை நேசிக்கின்ற, விஞ்ஞானத்தை விரும்பிகின்றவர்கள் இதனை முடிந்தவரை பாதகமில்லாமல் கையாளுகின்றார்கள். எப்படி ? இட்டுக்கட்டப்பட்டக் கதைகள் எவ்வாறானத் தன்மை கொண்டவை என இவர்கள் அறிவார்கள். அதற்கு அடிமையாகி விடாமல், தெளிவை நோக்கியத் தேடல் எப்போதும் இவர்களிடத்தில் இருக்கும். ஆகையால், இவர்களின் உரையாடல்களில் அறிவியல் கலந்திருக்கும். இது மக்களுக்கு விழிப்புணர்வூட்ட மட்டுமல்ல. அது நமது அரசியல் வியூகத்துக்கும் உதவக்கூடியது. அரசின் நடவடிக்கைகள் எதன் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன எனும் வெளிப்படையான சூழல் நம்முடையது. இதனால், மக்கள் அதனைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது என்பது நாம் யாவரும் நேரில் கண்ட உண்மை. அதனைப் புரியாதவர்கள், காலத்தில் பாதிக்கப்பட்டதையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம். இதற்கு அடிப்படை, விஞ்ஞானத்தை விரும்புகின்ற நிலையில் ஏற்படுகின்ற மாறுபாடுகள்தான். விஞ்ஞானத்தை விரும்பிகின்றபோது அதனை நாம் எதிர்கொள்வதும் கையாள்வதும் சற்றே மாறுபடும். முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்.
விஞ்ஞான வளர்ச்சியானது இன்று எல்லாத் துறைகளிலும் சென்றடைந்து
மனிதனுக்குப் பெரும் நன்மையைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டு பிடிப்பதற்கும், கண்டுபிடித்த பின்பு நோய்களை குணப்படுத்துவதற்கும் விஞ்ஞான உபகரணங்கள் பெரிதும் உதவுகின்றன. நவீன கண்டுபிடிப்புகளால் மனித வாழ்க்கை இலகுபடுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் தகவல்களை அறிந்துகொள்ளவும் நினைத்த இடங்களுக்கு பயணம் செய்யவும் முடிகின்றது. விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சி ஏதோ ஒரு மனிதனின் மனதில் எங்கோ ஒரு மூலையில் விஞ்ஞானத்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட விருப்பத்தால் ஏற்பட்டதுதான்.
விரும்பப்படாமல் செய்கின்ற எதுவுமே முழுமையான வெற்றியைத் தந்து விடாது
என பல அறிஞர்கள் கூறி வந்திருக்கிறார்கள். அதே சமயம், ஒரு துறையில் அல்லது ஒரு செயல்பாட்டில் ஏற்படும் ஆரவம் , ஈடுபாடு, விருப்பம் இதனை அடிப்படையாகக் கொண்டு எடுத்துக் கொண்ட துறையில் சாதனை செய்த, செய்கின்ற பல வெற்றிக் கதைகளும் நாம் அறிவோம். எதிர்காலத்தில் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற இடத்தில் இன்றைய மாணவச் சமுதாயம் இருக்கின்ற அதே வேளையில், அந்தத் தலையெழுத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளுமையில் விஞ்ஞானம் வீற்றிருக்கின்றதையும் நாம் மறந்து விடக் கூடாது. மனிதன் கருவில் தோன்றிய காலம் முதல் அவனது வாழ்வு முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதை காண்கிறோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது நன்மை, தீமை இரண்டையும் கலந்தாகவே உள்ளது. எனினும் விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. விஞ்ஞானத்தின் சரியான பாவனை அல்லது சரியான திசையை நோக்கிய நகர்வு என்பது உலகின் தொடர்ச்சியான நிலவுகைக்கு துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. ஆக, விஞ்ஞான வளர்ச்சியில் நாட்டையும் சமுதாயத்தை வழி நடத்த, விஞ்ஞானத்தில் ஆளுமை செலுத்த, அதனை விரும்பிடுவோம். உலகளாவிய நீரோட்டத்தில் கலந்திட விஞ்ஞானப் பாதையிம் விரும்பி பயணிப்போம் !