தற்போது ரிசப ராசியினரை அஷ்டமசனி அதிகமாக பாதித்துவருகிறது.
இதுவரை என்னிடம் புலம்பியவர்களில் பெரும்பாலும் ரிசப ராசியினரே! கடன், பணிச்சுமை, வேலையில் பிரச்னை, விரும்பத்தகாத இடமாற்றம், இருப்பிடமாற்றம், வீண்செலவு என்று ஏதாவது ஒரு தீயபலனை நிச்சயம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை 2020 ஏப்ரல் வரை தொடரும். நான் மிதுனலக்னம், ரிசபராசி. ஏற்கனவே லக்னத்திற்கும், ராசிக்கும் தீமை செய்யக்கூடிய குருபகவான் தசா வேறு சனியோடு நெருக்கமாக பாவபலத்தோடு நின்று தசாநடத்தி வருகிறது. எனினும் லக்னாதிபதி புதன் லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சியாக இருப்பதால் சமாளித்து வருகிறேன். ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்கும் ரிசபராசி நண்பர்கள் சொல்லொண்ணா துயரங்களை கூறி புலம்பும்போது " கொஞ்சம் பொருங்கள் வரும் செப்டம்பருக்கு பிறகு படிப்படியாக துன்பம் விலக ஆரம்பித்துவிடும் என்று கூறும் வார்த் தைகளை கேட்டு அவ்வளவு நாள் சமாளிக்கணுமா? என்று பெருமூச்சு விடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் கவலையை உணரமுடிகிறது. பெரும்பாலானோர்கள் பணப்பிரச்னை, குடும்ப பிரச்னை, பணிபுரியும் இடத்தில் பிரச்னை, விபத்து, நோய் போன்றவற்றால் செலவும் கடனும் , தேர்வில் தோல்வி, வெளிநாட்டுக்கு சென்று ஏமாற்றத்தோடு திரும்பி வருதல் , வாடகை வீட்டில் தண்ணீர்பிரச்னை, சுற்றத்தாரால் சுபசெலவு, சேமிப்பு கரைதல் போன்ற பிரச்னைகளால் திண்டாடி வருவது தெரிகிறது. ரிசப ராசிக்கு சனி யோகாதிபதிதானே? அப்புறம் எப்படி ரிசபராசியினரை இப்படி படுத்துகிறது இந்த சனி என்று நீங்கள் கேட்கலாம். கோச்சாரத்திலே யோகாதிபதி என்ற நிலை எடுபடாது. மேலும் நடக்கும் தசா யோகமாக இருந்து, சனி சுபரோடு பிறந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்து லக்னமும் வலுத்திருந்தால் " அடப்போடா ,அஷ்டமச்சனியாவது மண்ணாங்கட்டியாவது என்று ஒருநேரம் தெனாவெட்டாக திரிந்தாலும் ஒருநேரம் தடுக்கிவிழுந்தாலும் மீசையில் மண்ஒட்டவில்லை என்ற கதையாக வெளியில் சொல்லிக்கொள்ளாமல் சமாளிக்கும் பலரை காணமுடிகிறது. இதேநிலையில்தான் தற்போது தனுசு மற்றும் மகர ராசியினரும் சனியனாரால் தீயபலனை அனுபவித்து வருகின்றனர். ராணுவத்தை ,எதையும் சமாளிக்கவல்லதாக உலகநாடுகள் தயார்படுத்தி வைத்திருப்பதைப் போல மிதுனம், மகரம், கும்பராசியினர் சனியாரை சந்திக்க தன் உடலையும் மனதையும் தயார்படுத்தி வருவதையும் ஜோதிட உலகில் காணலாம்.